VCK: கட்டுக்கடங்காத கூட்டம், தவெக கூட்டணி உறுதி, திருமா பேச்சு - தமிழ்த்தேசிய எழ...
"இப்ப அவர் இருந்திருந்தா..." - பாரதிராஜாவின் நினைவிடத்தில் FL Poster வெளியிட்ட குறும்பட இயக்குநர்
இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் நினைவிடத்தில் 'கருத்தப்பாண்டியின் மொய்ப் பணம்' என்ற குறும்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. அவரது இயக்கத்தில் பணிபுரிந்த சிலர் ஒன்றிணைந்து இந்தக் குறும்படத்தில் பணியாற்றியுள்ளனர்.

பாரதிராஜாவின் நினைவிடம் அவரது சொந்த ஊரான தேனி மாவட்டம், தேவதானபட்டி மற்றும் வத்தலக்குண்டு இடையே உள்ள அவரது சொந்தப் பண்ணை வீட்டில் உள்ளது. அங்கே அவருக்கு மணிமண்டபம் அமைக்கும் பணிகள் திட்டமிடப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் அங்கே குறும்படம் ஒன்றின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியிருக்கிறது. இதுபற்றி குறும்படத்தின் இயக்குநர் கரிசல் அறிவழகனிடம் பேசினோம்.

``தேனி மாவட்டம் பெரியகுளத்தில் இருக்கற எருமநாயக்கன்பட்டிதான் என்னோட சொந்த ஊர். சினிமா மீதான ஆர்வம் இருந்ததால இந்தக் குறும்படத்தை இயக்கியிருக்கேன். மறைந்த இயக்குநர் பாரதிராஜாவின் சின்னத்திரை தொடரான 'தெற்கத்தி பொண்ணு' சீரியல்ல சின்ன ரோல்ல நடிச்சிருக்கேன். எனக்கும் பாரதிராஜா சாருக்குமான பிணைப்பு அது ஒண்ணுதான். அவரோட படங்கள் எல்லாமே எனக்கு பிடிக்கும். அதிலும் 'வேதம் புதிது', 'அலைகள் ஓய்வதில்லை'னு முற்போக்கு சிந்தனையோட இருக்கும்.
ஒரு வீட்டுக்கு செய்முறை (மொய்) பத்திரிகை குடுக்கப் போனா 'வாங்க'னு சந்தோஷமா வரவேற்பாங்க. ஆனா, இந்தப் படத்தைப் பார்த்தவங்க எமோஷனல் ஆகிடுவாங்க. செய்முறையால் ஏற்படக்கூடிய விளைவுகள், அதனால இந்தச் சமூகத்துக்கு நேரும் விஷயங்களை அழுத்தமாக உணர்த்தியிருக்கேன்.
தேனி மக்களோட வாழ்வியலை சொல்லும் கதை இது. மதுரையைச் சேர்ந்த ராஜ்குமார் முக்கியமான ரோல்ல நடிச்சிருக்கார். குறும்படம் இயக்கணும்னு பல வருஷமா நினைச்சிருந்தாலும் ராஜ்குமார் மூலமாகத்தான் இந்தப் படத்திற்கான தயாரிப்பாளர் அமைஞ்சார். பாரதிராஜாவின் உதவியாளரும், ரைட்டருமான கம்பம் சிவாஜி இந்தப் படத்திற்கான வசனத்தை எழுதியிருக்கார்.

படத்தை எடுத்து முடிச்சிட்டோம். நல்லாவும் வந்திருக்குது. இதை திரைப்படமாகவும் எடுக்கும் முயற்சி போய்ட்டிருக்கு. இதோட வெளியீட்டு விழாவை நடத்துறதுக்கான முயற்சியும் ஒரு பக்கம் போயிட்டிருக்குது. பாரதிராஜா இருந்திருந்தார்னா அவர் இதை வெளியிட்டிருப்பார். அவர் இல்லாதத்து எங்களுக்கும் பேரிழப்புதான்''என்கிறார் அறிவழகன்



















