'கேரளா அல்லா... இனி 'கேரளம்' ஆனு' - கேரளம் - பெயர் மாற்றத்திற்குக் காரணம் என்ன?
"என் மனநிலையைப் பாழாக்கிவிட்டாய்" - தேனிலவில் மாதவிடாய் எனச் சொன்ன மனைவியைக் கொல்ல முயன்ற கணவன்
உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கு 2023ம் ஆண்டு நிகில் என்பவருடன் திருமணம் நடந்தது. அத்திருமணம் முடிந்தவுடன் தம்பதியினர் அந்தமான் நிகோபார் பகுதிக்கு தேனிலவு சென்றனர். ஆனால் தேனிலவு சென்ற இடத்தில் அப்பெண்ணிற்கு மாதவிடாய் ஏற்பட்டது.
இதனால் தேனிலவை மகிழ்ச்சியுடன் கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டது. எனவே அப்பெண்ணை நிகில் அடித்து உதைத்து கழுத்தை நெரித்து கொலை செய்ய முயன்றுள்ளார். அதோடு அந்தத் தேனிலவு சம்பவத்தோடு தம்பதியினர் இருவரும் பிரிந்து வாழ்கின்றனர்.
மூன்று ஆண்டுகள் கழித்த நிலையில் தம்பதியைச் சேர்த்து வைக்க இரு தரப்பினரும் தீவிர முயற்சி எடுத்தனர். ஆனால் அவர்களைச் சேர்த்து வைக்க முடியவில்லை. இதையடுத்து அப்பெண் இது தொடர்பாக போலீஸில் புகார் செய்துள்ளார்.

அப்பெண் தனது புகாரில் 2023 ஆம் ஆண்டு தேனிலவின்போது மாதவிடாய் காரணமாகக் கோபமடைந்து, தனது கணவர் நிகில் மிஸ்ரா, தன்னை அறைந்து, உதைத்து, குத்தியதாகவும், கழுத்தை நெரிக்கவும் முயன்றதாகவும் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
2023ம் ஆண்டு மே 30தேதி டெல்லியில் மிஸ்ராவைத் திருமணம் செய்து கொண்டதாகவும், திருமணத்திற்கு முன்பு, அவரது குடும்பத்தினர் கொடுத்த பொருட்களை முத்திரை குத்த வேண்டும் என்று அவரது மாமியார் வலியுறுத்தினார். திருமணத்தின்போது அவரது தந்தை சுமார் ரூ.20 லட்சம் ரொக்கம், கார் மற்றும் ரூ.40 லட்சம் மதிப்பிலான பொருட்களைப் பரிசாக அளித்ததார்.
ஜூன் 2, 2023 அன்று டெல்லியில் உள்ள தனது திருமண வீட்டிற்குக் குடியேறியதாகவும், வரதட்சணையாகப் பெறப்பட்ட பொருட்களுக்காக அவரது மாமியார் தன்னைக் கேலி செய்து அவமானப்படுத்தியதாகவும் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
தேனிலவில் மாதவிடாய்
திருமணம் முடிந்து ஒரு மாதத்திற்குப் பிறகு, அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு ஜூலை 4-ம் தேதி தேனிலவுக்குச் சென்றுள்ளனர். பயணத்தின்போது தனக்கு மாதவிடாய் ஏற்பட்ட பின்னர் கடுமையான வயிற்று வலி மற்றும் அதிக இரத்தப்போக்கு ஏற்பட்டது. இதனால் தனது கணவர் கோபமடைந்ததாகவும், மாதவிடாய் பற்றி அவரிடம் ஏன் தெரிவிக்கவில்லை என்றும் கேள்வி எழுப்பினார்.
அதோடு தனது மனநிலையைக் கெடுத்துவிட்டதாகக் குற்றம்சாட்டி தாக்கினார். ஓட்டல் ஊழியர்கள் தன்னைக் காப்பாற்றினர். டெல்லிக்குத் திரும்பிய பிறகு தனது மாமியார் மற்றும் மைத்துனரிடம் தனக்கு நேர்ந்த கொடுமையை விவரித்ததாகவும், ஆனால் அவர்கள் தன்னை மனரீதியான சித்திரவதைக்கு உட்படுத்தத் தொடங்கியதாகவும் தெரிவித்துள்ளார்.
திருமணமான 45 நாள்களுக்குப் பிறகு, ஜூலை 14, 2023 அன்று தனது கணவன் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டேன். மத்தியஸ்தம் செய்து பிரச்னையைத் தீர்க்கும் முயற்சியில் அவரது தந்தை டெல்லிக்குச் சென்றபோது, அவரது மாமியார் அவரையும் அவமதித்ததாகத் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.



















