”விமர்சித்தவர்களையும் அரவணைத்து கூட்டணி அமைத்திருக்கிறார்”- ஸ்டாலினுக்கு கார்த்த...
ஈரான்: ஹார்முஸ் ஜலசந்தியை மூடியதால் 700 டேங்கர் கப்பல்கள் தவிப்பு; இந்தியாவில் LPGக்குத் தட்டுப்பாடு
ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நடந்து வரும் போர் நான்காவது நாளை எட்டி இருக்கிறது. இஸ்ரேலுடன் சேர்ந்து அமெரிக்காவும் ஈரான் மீது குண்டு வீசித் தாக்குதல் நடத்தி வருகிறது.
இத்தாக்குதல் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வருகிறது. இத்தாக்குதலுக்குத் தேவைக்கு அதிகமான ஆயுதங்கள் வழங்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ஈரானில் உள்ள ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் திடீரென மூடிவிட்டது. இந்த ஜலசந்தி வழியாகத்தான் ஆசியாவில் உள்ள பெரும்பாலான நாடுகளுக்கு கப்பல்கள் கச்சா எண்ணெய் எடுத்துச்செல்லும்.
காத்துக் கிடக்கும் 700 கப்பல்கள்
தற்போது இந்த நீர்வழித்தடம் மூடப்பட்டு இருப்பதால் ஆசிய நாடுகளுக்கு வளைகுடா நாடுகளிலிருந்து கச்சா எண்ணெயை கப்பலில் எடுத்துச்செல்ல முடியாது. தற்போது ஈரான் இந்த வழித்தடத்தை மூடிவிட்டது.
தடையை மீறி ஏதாவது கப்பல் இந்த வழித்தடம் வழியாகச் சென்றால் கப்பலுக்குத் தீவைப்போம் என்று ஈரான் மிரட்டி இருக்கிறது. இதனால் ஹார்முஸ் ஜலசந்திக்கு வெளியில் நூற்றுக்கணக்கான டேங்கர் கப்பல்கள் அணிவகுத்து நிற்கின்றன.

இந்த வழித்தடத்தை ஈரான் அடியோடு மூடவில்லை. கடந்த ஒன்றாம் தேதி இந்த வழியாக மூன்று டேங்கர் கப்பல்கள் மட்டுமே சென்றுள்ளன. இரண்டாம் தேதி ஒரு டேங்கர் மற்றும் ஒரு சரக்குக் கப்பல் மட்டும் இந்த வழித்தடத்தைப் பயன்படுத்தி இருக்கின்றன.
ஈரானைச் சேராத எந்தக் கப்பலும் இந்த வழித்தடத்தைப் பயன்படுத்தவில்லை. சுமார் 706 டேங்கர் கப்பல்கள் நீரிணையைச் சுற்றி நின்றுகொண்டிருக்கின்றன. பாரசீக வளைகுடாப் பகுதியில் (Persian Gulf) மட்டும் 26 கப்பல்கள் எங்கு செல்வது என்று தெரியாமல் நடுக்கடலில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. கச்சா எண்ணெய் விலை 10 சதவீதம் அதிகரித்துள்ளது. ஐரோப்பாவில் இயற்கை எரிவாயு விலை 40 சதவீதம் அதிகரித்துள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தி முடக்கப்பட்டுள்ளதால் உலகளாவிய எரிசக்தி மற்றும் தளவாடச் செலவுகள் கடுமையான உயர்வை ஏற்படுத்தியுள்ளது. கப்பல் போக்குவரத்து மற்றும் அது சார்ந்த காப்பீட்டுத் துறையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கின்றன.
முன்னணி கடல்சார் காப்பீட்டு நிறுவனங்கள், வளைகுடாப் பகுதிக்குள் நுழையும் கப்பல்களுக்கான போர் அபாயக் காப்பீட்டை ரத்து செய்வதாக அறிவித்துள்ளன. காப்பீடு கிடைக்கும் கப்பல்களுக்குக்கூட, காப்பீட்டு பிரீமியம் 50 முதல் 100 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. கப்பலின் மதிப்பில் 0.2% ஆக இருந்த கட்டணம் இப்போது 0.5 சதவீதமாக உயர்ந்துள்ளது.
வாடகைக் கட்டணம் அதிகரிப்பு
ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டுள்ளதால் கப்பல்களின் வாடகைக் கட்டணமும் அதிகரித்து இருக்கிறது. கடக்கும் அபாயம் நேரடியாக போக்குவரத்துச் செலவுகளில் பிரதிபலிக்கிறது. பிரமாண்ட எண்ணெய் டேங்கர்களுக்கான தினசரி வாடகை 2 லட்சம் டாலரை நெருங்கியுள்ளது. இது 2020-ஆம் ஆண்டிற்குப் பிறகு மிக உயர்ந்த அளவாகும்.
பெரிய நிறுவனங்கள் அவசரகால போர் அபாயக் கூடுதல் கட்டணங்களை (War-risk surcharges) விதித்துள்ளன. ஒரு கன்டெய்னருக்கு 1500 முதல் 3800 டாலர் வரை கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. வளைகுடாப் பகுதியைத் தவிர்க்க, கப்பல்கள் ஆப்பிரிக்காவின் நன்னம்பிக்கை முனை (Cape of Good Hope) வழியாகச் செல்லத் திட்டமிடுகின்றன. இதனால் பயண நேரம் 10 முதல் 14 நாட்கள் அதிகரிப்பதோடு, எரிபொருள் செலவும் பெருமளவு உயரும்.

2 வாரத்திற்கு மட்டுமே எல்.பி.ஜி. கையிருப்பு
வளைகுடா கச்சா எண்ணெய்யை மட்டும் பெரிதும் நம்பி இருக்கும் இந்தியா மற்றும் சீனா இதனால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து உள்நாட்டு விநியோகத்தைப் பாதுகாக்க பெட்ரோல் மற்றும் டீசல் ஏற்றுமதியைக் கட்டுப்படுத்துவது குறித்தும், ரஷ்யக் கச்சா எண்ணெய் இறக்குமதியை அதிகரிப்பது குறித்தும் இந்தியா பரிசீலித்து வருகிறது.
வரத்து குறைவது தொடரும்பட்சத்தில் எல்பிஜி வழங்குவதில் கட்டுப்பாடுகளைக் கொண்டு வருவது குறித்தும் மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. நிலைமையைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாக பெட்ரோலிய துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியா தனக்குத் தேவையான எல்பிஜியில் 80-85% இறக்குமதி செய்கிறது. அவை மொத்தமாக வளைகுடா உற்பத்தியாளர்களிடமிருந்து ஹார்முஸ் ஜலசந்தி வழியாக வருகிறது. புதிய சரக்குகள் நிறுத்தப்பட்டால், தற்போதைய இருக்கும் கையிருப்பு இரண்டு வாரங்களுக்கும் குறைவாகவே வரும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
















