TVK: "NDA கூட்டணிக் கட்சிகளுக்கு கடிதம் அனுப்பும் எண்ணம் இல்லை" - சி.டி.ஆர். நிர...
`உடைந்தது திமுக கூட்டணி' - தவெக ஆட்சி அமைக்க காங்கிரஸ் நிபந்தனையுடன் ஆதரவு! - என்னென்ன நிபந்தனைகள்?
நடந்து முடிந்துள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. கட்சி தோல்வியைத் தழுவிய நிலையில், த.வெ.க அதிக இடங்களை வென்ற தனிக்கட்சியாக உள்ளது.
ஆனாலும் தனிப்பெரும்பான்மை ஆட்சி அமைப்பதற்கான எண்ணிக்கை த.வெ.கவிற்குக் கிடைக்கவில்லை. மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 118 தொகுதிகளை தனிக் கட்சியாக வென்றால் மட்டுமே தனிப்பெரும்பான்மை ஆட்சி அமைக்க முடியும்.
ஆனால் தனிக்கட்சியாக 108 இடங்களை மட்டுமே த.வெ.க வென்றுள்ளது. பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களை கட்சி பெறாததால், ஆதரவு அளிக்க காங்கிரஸை த.வெ.க நாடியிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

இந்நிலையில் தவெக ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆதரவு அளித்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.

கிரிஷ் சோடங்கர் பெயரில் வெளியாகியுள்ள அந்த அறிக்கையில்,
``தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், தமிழகத்தில் அரசு அமைப்பதற்கு இந்திய தேசிய காங்கிரஸின் (INC) ஆதரவை நாடி அதிகாரப்பூர்வமாக கோரிக்கை வைத்துள்ளார். தமிழக மக்கள், குறிப்பாக இளைஞர்கள், அரசியலமைப்பு கொள்கைகளில் நம்பிக்கை கொண்ட ஒரு மதசார்பற்ற, முற்போக்கான மற்றும் நலன்புரி அரசுக்காக மிகத் தெளிவான, வலுவான மற்றும் பரவலான ஆணையை வழங்கியிருக்கிறார்கள். அடுத்த அரசை அமைக்க திரு விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தை (தவெக) அவர்கள் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.
இந்திய தேசிய காங்கிரஸ் இந்தியாவில் மதசார்பற்ற, முற்போக்கான மற்றும் நலன்புரி அரசியலின் நிறுவன கட்சியாக விளங்குகிறது; அதற்காகவே போராடுகிறது. தமிழக மக்களின் இந்த ஆணையை மதிக்கவும், நிலைநிறுத்தவும், நிறைவேற்றவும் உதவுவது நமது அரசியலமைப்பு கடமை. அதன்படி, தமிழ்நாடு காங்கிரஸ் குழுவும் காங்கிரஸ் சட்டமன்றக் கட்சியும் (CLP) தவெக அரசு அமைப்பதற்கு தங்களின் முழு ஆதரவை வழங்க முடிவெடுத்துள்ளன.
இந்தியாவின் அரசியலமைப்பில் நம்பிக்கை இல்லாத எந்த வகுப்புவாத சக்திகளையும் இந்தக் கூட்டணியிலிருந்து தவெக விலக்கி வைக்க வேண்டும் என்பதே எங்கள் ஆதரவுக்கான நிபந்தனை.
தவெகவும் தமிழ்நாடு காங்கிரஸும் இணைந்த இந்தக் கூட்டணி, தந்தை பெரியாரின் சமூக நீதி இலட்சியங்களுக்கும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் அரசியலமைப்பு இலட்சியங்களுக்கும் உறுதியான அர்ப்பணிப்புடன், பெருந்தலைவர் காமராஜரின் பெருமை மிகு தமிழகத்தை மீண்டும் கொண்டுவர உறுதிபூண்டிருக்கிறது.
பரஸ்பர மரியாதை, தகுந்த பங்கு மற்றும் பகிர்ந்த பொறுப்புணர்வின் அடிப்படையில் உருவான இந்தக் கூட்டணி, இந்த அரசை அமைப்பதற்கு மட்டுமல்ல — உள்ளாட்சி அமைப்புகள், மக்களவை மற்றும் மாநிலங்களவை தேர்தல்களிலும் தொடர்ந்து இணைந்து செயல்படுவதற்கானது.
தமிழக மக்கள் வழங்கிய இந்த வரலாற்று ஆணையை மதிக்கவும், மதசார்பற்ற முற்போக்கு அரசை நிறுவிட உறுதிப்படுத்திக்கொள்ளவும், மக்களின் குறிப்பாக தமிழக இளைஞர்களின் கனவுகளையும் வாக்குறுதிகளையும் நிறைவேற்றவும் திரு விஜய்யும் திரு ராகுல் காந்தியும் இணைந்து உறுதிமொழி எடுக்கிறார்கள்." எனக் குறிப்பிட்டுள்ளார்,















