தவெக: ஆளுநருக்கு எதிராகவும், பாஜக-வுக்கு எதிராகவும் போராட்டம்! - தமிழ்நாடு காங்க...
கிருஷ்ணகிரி: ஜாம்பவான்களைக் காலி செய்த தவெக 'வழக்கறிஞர்' - நெகிழ்ச்சியில் குடும்பத்தினர்!
முன்னாள் எம்.பி செல்லக்குமார், சிட்டிங் அமைச்சர் அசோக்குமார் என இரண்டு 'வெயிட்டான' புள்ளிகளை எதிர்த்து, முதல் தேர்தலிலேயே கிருஷ்ணகிரி கோட்டையைத் தட்டித் தூக்கியிருக்கிறார் இந்த வழக்கறிஞர்.
யார் இந்த முகுந்த்?
சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருந்த முகுந்திற்கு இதுதான் முதல் தேர்தல். இவரது தந்தை ஒரு வழக்கறிஞர், அவரும் ஏற்கனவே இரண்டு முறை தேர்தலில் போட்டியிட்டுப் பின்னடைவைச் சந்தித்தவர். தந்தை விட்ட இடத்தைப் பிடிப்பதற்காக அல்லாமல், ஒரு புதிய மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும் என்ற துடிப்புடன் 'த.வெ.க'-வில் இணைந்திருக்கிறார் முகுந்த்.
நெகிழ்ச்சியில் குடும்பத்தினர்:
வெற்றி குறித்து முகுந்தின் தாய் மற்றும் தங்கையிடம் பேசியபோது அவர்கள் கண்களில் அத்தனை மகிழ்ச்சி. "முகுந்த் இயல்பாகவே மத்தவங்களுக்கு உதவணும்னு நினைக்கிற குணம் கொண்டவர். சின்ன வயசுல இருந்தே யாரு கஷ்டப்பட்டாலும் அவரால முடிஞ்சதைச் செய்வார்.

இத்தனை வருஷம் அவர் பட்ட கஷ்டத்துக்கும், நேர்மைக்கும் கிடைச்ச தகுதியான அங்கீகாரம் தான் இந்த வெற்றி. கண்டிப்பா கிருஷ்ணகிரி தொகுதிக்கு அவர் ஒரு பெரிய மாற்றத்தைக் கொண்டு வருவார்னு எங்களுக்கு முழு நம்பிக்கை இருக்கு" என நெகிழ்ச்சியுடன் கூறினர்.
முகுந்த் வெறும் ஓட்டு மட்டும் கேட்கவில்லை; பிரச்சாரத்தின் போதே ஒரு வழக்கறிஞராகத் தனது திறமையை மக்கள் நலனுக்காகப் பயன்படுத்தினார்.
பல கிராம மக்களுக்குத் தங்களுக்குரிய அரசுத் திட்டங்கள் என்னவென்றே தெரியவில்லை என்பதைப் பிரச்சாரத்தின் போது உணர்ந்த முகுந்த், உடனடியாக ஒரு வழக்கறிஞரை நியமித்து மக்களுக்கு அந்தத் திட்டங்களை விளக்கிக் கூறி, அவற்றைப் பெறும் வழிமுறைகளையும் புரிய வைத்தார்.

இதுவே மக்கள் மத்தியில் அவர் மேல் ஒரு தனி மரியாதையையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தியது.
மல்லிகைப் பூ விவசாயிகளுக்கான பிளான்!
தொகுதி மக்கள் முன்வைத்த பல கோரிக்கைகளைக் கேட்டறிந்த முகுந்த், "நான் ஜெயித்தால் முதலில் அடிப்படை வசதிகளைச் சரிசெய்வேன்" என உறுதியளித்தார். குறிப்பாக, கிருஷ்ணகிரி மல்லிகைப் பூ விவசாயிகளுக்காக நறுமணத் தொழிற்சாலை அமைக்கப்படும் என்ற வாக்குறுதி விவசாயிகளிடம் பெரிய வரவேற்பைப் பெற்றது.
இதுதவிர சாலை, கழிவறை மற்றும் கழிவுநீர் மேலாண்மை போன்ற அடிப்படைத் தேவைகளை முன்னுரிமை அடிப்படையில் செய்து தருவதாக வாக்களித்துள்ளார்.















