TVK: "NDA கூட்டணிக் கட்சிகளுக்கு கடிதம் அனுப்பும் எண்ணம் இல்லை" - சி.டி.ஆர். நிர...
`இரண்டு பி.எல்.ஓக்கள் காணாமப் போனாங்க!' - மம்தா தொகுதியான பவானிப்பூர் எஸ்.ஐ.ஆர் அதிகாரி சி.முருகன்
மேற்கு வங்கத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியை இழந்துள்ளது.
ஆனாலும் அந்தக் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி, ‘நான் பதவியை ராஜினாமா செய்ய மாட்டேன், தேர்தலில் சதி நடந்துள்ளது. சதியில் பிரதமருக்கும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கும் பங்கிருக்கிறது’ எனச் சொல்லி வருகிறார்.
தேர்தலுக்கு முன் எஸ்.ஐ ஆர் எனப்படும் வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கையின் போதே அதை மம்தா எதிர்த்தது நினைவிருக்கலாம்.
இந்தப் பின்னணியில் மம்தாவின் தொகுதியான பவானிப்பூர் தொகுதியின் எஸ்.ஐ ஆர் பணியின் அப்சர்வராக இருந்த 12 பேரில் தமிழகத்தைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி சி.முருகனும் ஒருவர்.
மேற்கு வங்க கேடர் அதிகாரியான இவரிடம் பேசினோம்.

‘’எஸ்.ஐ.ஆர் நடவடிக்கையின் ஆரம்பகட்ட பணியான வீடு வீடாகப் போய் படிவம் கொடுத்து விபரங்கள் வாங்கி தகுதியில்லாதவங்களை நீக்குகிற அந்தப் பணியே முறையா நடக்கலை.
நான் அப்சர்வரா போனதுமே கண் கூடா இதைப் பார்த்தேன்.
ஏ.எஸ்.டி.டி.னு சொல்வாங்க, அதாவது ஆப்செண்ட் ஆனவங்க, ஷிஃப்ட் ஆனவங்க, டூப்ளிகேட், டெட் அதாவது இறந்தவங்க. இந்த நாலு வகையில தகுதியில்லாத வாக்காளர்கள் குறித்த விபரங்கள் கலெக்ட் செய்யப் படணும். ஆனா பூத் லெவல் அலுவலர்கள் இதையே சரியா செய்யலை. இறந்து போயிட்டாங்கன்னா அந்த விபரத்தை வீட்டுக்காரங்க சொன்னாலே போதும்னு சொன்னது தேர்தல் ஆணையம். ஆனா இவங்க இறப்பு சான்றிதழ் இல்லைனு அதை நீக்காம விட்டிருந்தாங்க.
மாநில அரசு அதிகாரிகளா இருந்ததால அப்படி செஞ்சாங்களா தெரியல. ஆனா நாங்க அங்க போனதும் பி.எல்.ஓ.க்களைக் கூட்டி ஒரு மீட்டிங் போட்டோம். தேர்தல் ஆணையம் என்ன அறிவுரைகள் கூறியிருக்கோ அதை ஃபாலோ பண்ணுங்கனு சொன்னோம்.

நாங்க இப்படியொரு மீட்டிங் போட்டதே திரிணாமுல் ஆளுங்களுக்குப் பிடிக்கலை. அதனால அந்த மீட்டிங்ல ரொம்ப ஆர்வமா சந்தேகங்கள் கேட்டு சரியா அந்த வேலையைச் செய்யணும்னு நினைச்ச ரெண்டு பி.எல்.ஓ.க்களை மீட்டிங் முடிஞ்ச கொஞ்ச நேரத்துல காணோம். அவங்க குடும்பத்தார் அழுதபடி எங்களுக்குத் தகவல் சொல்ல, நான் டிஜிபி, தலைமைச் செயலாளர் வரை விஷயத்தைக் கொண்டு போனேன். அதன்பிறகு ராத்திரி பதினோரு மணிக்கு அந்த ரெண்டு பேரும் ’எங்களை யாரும் கடத்தலை’னு ஒரே மாதிரியாப் பேசி வீடியோ போடுறாங்க.
பி.எல்.ஓ.க்கள் திடீர்னு காணாமப் போனாங்களே அந்த தொகுதியிலதான் கடைசியில தேர்தலை ரத்து செய்துட்டாங்க.
முதல்வர் மம்தா பாணர்ஜியின் சொந்த தொகுதியான பவானிப்பூரின் எஸ்.ஐ.ஆர் அதிகாரியும் நான் தான். தேர்தல் கமிஷன், உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல் படியே நாங்க எங்க வேலையைச் செய்தோம். தகுதியில்லாத வாக்காளர்களின் பெயர்கள்தான் பட்டியல்ல இருந்து நீக்கப்பட்டுச்சு.
மத்தபடி தேர்தல் கமிஷன் சதி, அது இதுன்னு அரசியலுக்காக யார் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். அரசியல்வாதிகள் அப்படிதான் பேசுவாங்க.

இந்த தொகுதிகளில் எஸ்.ஐ.ஆர் வேலைகளில் ஈடுபட்டிருந்தப்ப நான் ஏகப்பட்ட பிரச்னைகளைச் சந்திச்சேன். நான் போகிற இடங்களுக்கு திரிணாமுல் கட்சியின் மகளிர் அணியினர் துடைப்பத்தை எடுத்துட்டு வந்து கோஷம் போடுறது மாதிரியான வேலைகளைச் செஞ்சாங்க. என் வாகனத்தை அடிச்சு உடைச்சாங்க. அதையெல்லாம் சமாளிச்சபடியேதான் என் மனசாட்சிப்படி என் பணியைச் செஞ்சேன்’’ என்ற முருகனிடம். மம்தா ராஜினாமா செய்ய மறுப்பது குறித்தும் கேட்டோம்.
``இன்னைக்கு அதாவது மே 7 ம் தேதியுடன் அரசியலைப்புச் சட்டப்படி மேற்கு வங்க சட்டசபையின் பதவிக்காலம் முடியுது. ராஜினாமா செய்யாவிட்டாலும் தானாகவே அவரது பதவி காலாவதியாகி விடும்’’ என்கிறார்.














