`துகாராமுக்கு நன்றி' - அதிரடி ரெய்டுகள்; சுத்தத்துக்கு மாறும் மும்பை ஹோட்டல்கள்,...
"உலக நாடுகள் அமெரிக்காவின் தடைகளை பின்பற்றுவது, அவர்களுக்கு அடிபணிவதற்கு சமம்!" - ஈரான்
ஈரானுக்கு எதிராக ‘பொருளாதார D-Day’-வை அறிவித்திருக்கிறார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.
இதன் கீழ், ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகள் மீது அமெரிக்கா பொருளாதார நடவடிக்கைகளை எடுக்கும்.
அமெரிக்காவின் இந்த அறிவிப்பை எதிர்த்து ஈரானின் வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் எஸ்மாயில் பாகாயி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது...
“ஈரான் மீது அமெரிக்கா புதிதாக அறிவித்துள்ள பொருளாதாரத் தடைகள், ஒரு தனி நாட்டின் மீதான சட்டவிரோத ‘பொருளாதாரப் போரின்’ தொடர்ச்சி மட்டுமே அல்ல. அது ஐக்கிய நாடுகள் சபையின் ஒவ்வொரு சுதந்திரமான உறுப்பு நாட்டின் மீதும் தனது எல்லையற்ற இறையாண்மையை ஆதிக்கம் செலுத்தத் துடிக்கும் முயற்சியாகும்.

தங்கள் சொந்த நாட்டின் அதிகார வரம்பிற்குட்பட்ட வெளிநாட்டு வங்கிகளையோ, நிறுவனங்களையோ அல்லது விமான நிலையங்களையோ, மூன்றாம் நாடு ஒன்றுடன் சட்டப்பூர்வமாக மேற்கொள்ளும் வர்த்தகத்தைக் கைவிடுமாறு எந்தவொரு நாடும் சட்டப்பூர்வமாகக் கட்டாயப்படுத்த முடியாது.இத்தகைய இரண்டாம் நிலைத் தடைகளுக்கு சர்வதேசச் சட்டத்தில் எந்தவித அடிப்படையும் இல்லை.
இவை ஐ.நா சாசனத்தின் பிரிவு 2(1)-இல் குறிப்பிடப்பட்டுள்ள ‘இறையாண்மை சமத்துவக் கோட்பாட்டை’ மீறுவதோடு, சர்வதேச நீதிமன்றத்தால் உறுதிப்படுத்தப்பட்ட ‘பிற நாட்டு விவகாரங்களில் தலையிடக் கூடாது’ என்ற வழக்கமான தடையையும் மீறுகின்றன.
இறையாண்மை கொண்ட ஒரு நாடு தனது சட்டப்பூர்வமான கொள்கை முடிவுகளை மாற்றுமாறு கட்டாயப்படுத்த மேற்கொள்ளப்படும் பொருளாதார வற்புறுத்தல், சர்வதேச அளவில் முற்றிலும் தவறான ஒரு செயலாகும்.
ராணுவ ஆக்கிரமிப்பிற்குச் சமமான கடற்படை முற்றுகையோடு இத்தகைய கோரிக்கைகளும் இணையும்போது, மற்ற அனைத்து நாடுகளின் இறையாண்மையும் மற்றொரு வல்லரசின் விருப்பத்திற்கு ஏற்ப தற்காலிகமானதாகவும், நிபந்தனைக்குட்பட்டதாகவும், எப்போது வேண்டுமானாலும் திரும்பப்பெறக்கூடிய ஒன்றாகவும் சுருங்கிவிடுகிறது.

இதற்குப் பணிந்து போவது பாதுகாப்புக்கோ அல்லது மரியாதைக்கோ வழிவகுக்காது. மாறாக, தங்கள் நாட்டின் வங்கிகளும், நிறுவனங்களும், விமான நிலையங்களும் ஒரு வெளிநாட்டு அனுமதியின் கீழேயே இயங்குகின்றன என்பதை ஒப்புக்கொள்வதற்கே சமமாகும்.
இதன் இறுதி முடிவு, ஐ.நா-வை அடிப்படையாகக் கொண்ட சர்வதேச அமைப்பின் அடித்தளமான ‘இறையாண்மை’ என்பதை முற்றிலுமாகச் சிதைத்து, மீண்டும் பழைமையான முழு அளவிலான காலனித்துவ ஆட்சிக்கு வழிவகுப்பதாகவே அமையும்.” என்றார்.













