`துகாராமுக்கு நன்றி' - அதிரடி ரெய்டுகள்; சுத்தத்துக்கு மாறும் மும்பை ஹோட்டல்கள்,...
ஐபோன் EMI: மலையில் இருந்து குதித்த மகன்; காப்பாற்ற முயன்ற தந்தை உயிரிழப்பு - விபரீத முடிவெடுத்த தாய்
இன்றைய இளைய தலைமுறையிடம் மொபைல் போன் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. போன் வாங்கிக்கொடுக்கவில்லையெனில் பிள்ளைகள் மிகவும் ஆக்ரோஷமாகிவிடும் சம்பவங்கள் அவ்வப்போது நடக்கிறது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் மொபைல் போன் வாங்கியதற்கு மாதாந்திர தவணை தொகை செலுத்த பெற்றோர் பணம் கொடுக்க மறுத்ததால் வாலிபர் ஒருவர் மலை உச்சியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்ளப்போவதாக மிரட்டினார். இந்த மிரட்டல் இறுதியில் மூன்று பேரின் மரணத்தில் முடிந்தது. அங்குள்ள சாம்பாஜி நகர் பகுதியை சேர்ந்தவர் குனால்(18). சமீபத்தில் குனால் ஒரு ஐபோனை (iPhone) கடனுக்கு வாங்கியிருந்தார்.
அதற்கான தவணைத் தொகையைச் (EMI) செலுத்தத் தனது குடும்பத்தினரிடம் பணம் கேட்டு வந்தார். சமீபத்திய தவணையைச் செலுத்துவது தொடர்பாக குனால் தனது தந்தையுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

அதைத் தொடர்ந்து, கோபமடைந்த குனால் வீட்டை விட்டு வெளியேறி, காலை சுமார் 10 மணியளவில் வாலுஜ் எம்.ஐ.டி.சி. காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திஸ்கான் பகுதியில் உள்ள ஒரு குன்றின் மீது ஏறினார்.
விபரீதத்தில் முடிந்த 3 மணி நேர போராட்டம்
அவனது பெற்றோர்கள் அவனைப் பின்தொடர்ந்து அந்த இடத்திற்குச் சென்றனர். அங்கிருந்த மற்றவர்களுடன் இணைந்து, அவனை கீழே இறங்கி வருமாறு சமாதானப்படுத்த கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் போராடினர். காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினரும் சம்பவ இடத்தில் இருந்தனர். பரபரப்பான சூழ்நிலையில் சுமார் மூன்று மணி நேரம் கழித்து, பிற்பகல் ஒரு மணியளவில், குனாலின் தந்தை தன் மகன் நின்றிருந்த இடத்திற்கு ஏறிச் சென்று, அவனை விளிம்பிலிருந்து வலுக்கட்டாயமாகப் பின்னோக்கி இழுக்க முயன்றார். அப்போது இருவருமே நிலைதடுமாறி கீழே இருந்த பள்ளத்தாக்கில் விழுந்தனர்.
மலையில் இருந்து குதித்த தாய்
தங்கள் கணவரும் மகனும் கீழே விழுவதைக் கண்ட சங்கீதா, அடுத்த சில கணங்களிலேயே அந்த மலையிலிருந்து கீழே குதித்தார். மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காவல்துறையினர் உடல்களை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு, அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பல மணிநேரம் நீடித்த இந்த இழுபறியின்போது அப்பகுதியில் கூடியிருந்த உள்ளூர்வாசிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் பலர் இச்சம்பவத்தைக் நேரில் கண்டனர். குனாலைக் கீழே இறங்கச் செய்வதற்கான முயற்சிகளின் போது எடுக்கப்பட்ட சில காணொலிகள் சமூக ஊடகங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
உனது அம்மாவுக்காக வாழ்
அதில் குனாலை மலையில் இருந்து இறங்கும்படி கூறிய போது ஒருவர், "உன் அம்மாவுக்காக வாழ்," என்று குனாலிடம் ஒருவர் கூறினார். அவர் கீழே குதிக்க முயன்றபோது எடுக்கப்பட்ட வீடியோவில் இது பதிவாகியிருந்தது. அதற்கு அவர், "இல்லை, நான் சாக வேண்டும். அதுதான் ஒரே வழி," என்று பதிலளித்தார். சிறிது நேரத்திற்குப் பிறகு, அவரது தந்தை முரளிதர் சந்த்குடே அவரைச் சமாதானப்படுத்திப் பின்னோக்கி இழுக்க முயன்றார். ஆனால் இருவரும் கீழே விழுந்தனர். அதன்பின், அவரது தாயார் சங்கீதாவும் அவர்கள் பின்னால் கீழே குதித்தார்.
திஸ்காவ் கிராமத்தின் முன்னாள் சர்பஞ்சான சஞ்சய் ஜாதவ், குனாலிடம் பேசி அவரைத் தடுத்து நிறுத்த முயன்றார். அவர் இது குறித்து கூறுகையில், ''அவருக்கு 'ஐபோன் 15 ப்ரோ' வாங்கித் தருவதாகவும் மற்றவர்கள் கூறினர். அதோடு அவனது தாயின் முகத்தைப் பார்க்குமாறும், கீழே குதிக்க வேண்டாம் என்றும், நீ படித்தவன் என்றும், உனக்கு நல்ல எதிர்காலம் இருப்பதாகவும் கூறினோம். நாங்கள் அவனிடம் கெஞ்சிக் கேட்டுக்கொண்டோம். எங்களால் முடிந்த அனைத்து விதமான வேண்டுகோள்களையும் விடுத்தோம்," என்று ஜாதவ் கூறினார். அந்தச் சூழலில் குனால் தனது தோள்களைக் குலுக்கியபடியே, மரணம் மட்டுமே தனக்குள்ள ஒரே வழி என்று பிடிவாதமாகத் தெரிவித்து வந்தான்.
















