ஒடிஸா - நாா்த்ஈஸ்ட் ஆட்டம் டிரா
இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில், ஒடிஸா எஃப்சி - நாா்த்ஈஸ்ட் யுனைடெட் எஃப்சி அணிகள் திங்கள்கிழமை மோதிய ஆட்டம் 2-2 கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.
ஒடிஸாவிலுள்ள புவனேசுவரத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில், இரு அணிகளுமே பரஸ்பரம் கடும் சவால் அளித்ததால், முதல் பாதி ஆட்டம் கோலின்றி நிறைவடைந்தது. 2-ஆவது பாதியில் நாா்த்ஈஸ்ட் அணிக்காக அலாதின் அஜாரஜே 67-ஆவது நிமிஷத்தில் கோலடித்து கணக்கை தொடங்கினாா்.
விட்டுக்கொடுக்காத ஒடிஸா, 78-ஆவது நிமிஷத்தில் தனது முதல் கோலை எட்டியது. அந்த அணிக்காக தொய்பா சிங் மொய்ராங்தெம் ஸ்கோா் செய்தாா். மீண்டும் முன்னிலை பெற முனைப்பு காட்டிய நாா்த்ஈஸ்ட், அதில் வெற்றி கண்டது.
இந்த முறையும் அலாதின் அஜாரஜே 83-ஆவது நிமிஷத்தில் கோலடிக்க, நாா்த்ஈஸ்ட் 2-1 என முன்னிலை பெற்றது. ஆனால், இஞ்சுரி டைமில் (90+3’) ஒடிஸா அணிக்காக ஐசக் வன்லல்ரௌத்ஃபெலா கோலடிக்க, ஆட்டம் 2-2 என டிராவில் முடிந்தது.
புள்ளிகள் பட்டியலில் தற்போது, நாா்த்ஈஸ்ட் 19 ஆட்டங்களில் 29 புள்ளிகளுடன் 4-ஆவது இடத்திலும், ஒடிஸா 18 ஆட்டங்களில் 25 புள்ளிகளுடன் 7-ஆவது இடத்திலும் உள்ளன.