State Awards: "எனக்கு விருது கிடைக்கவில்லை என்பதற்காக இதை முன்வைக்கவில்லை" - 'கை...
கருப்பை வாய் தடுப்பூசி: தமிழக அரசின் சலுகை என்ன? யாரெல்லாம் பயன்படுத்தலாம்? - மருத்துவர் விளக்கம்!
இந்தியாவில் ஆண்டுதோறும் சுமார் 1.2 லட்சம் பெண்களுக்கு கருப்பை வாய் புற்றுநோய் புதிதாகக் கண்டறியப்பட்டு வருவதாகப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
பெண்களைப் பாதிக்கும் புற்றுநோய்களில் மார்பகப் புற்றுநோய்க்கு அடுத்தபடியாக, கருப்பைவாய் புற்றுநோய் கண்டறியப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
மேலும் உலகளவில் கருப்பைவாய் புற்றுநோயால் ஏற்படும் மரணங்களில் சுமார் 25% இந்தியாவில் நிகழ்வதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

முதன்முறையாகத் தொடங்கி வைத்த தமிழக அரசு!
HPV (Human Papilloma Virus) வைரஸ் காரணமாகத்தான் கருப்பை வாய் புற்றுநோய் உருவாகிறது என்றும் இந்த வைரஸ்களில் HPV-16, HPV-18 வகைகள் அதிக ஆபத்தானவை என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில் கருப்பை வாய் புற்றுநோயைத் தடுக்கும் வகையில் இந்தியாவிலேயே முதன்முறையாக, சிறுமிகளுக்கான கருப்பைவாய் புற்றுநோய் தடுப்பூசித் திட்டத்தை (HPV Vaccination Programme) தமிழ்நாடு அரசு தொடங்கி இருக்கிறது.
கடந்த ஜனவரி 27-ம் தேதி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
14 வயது பெண் குழந்தைகளுக்கானத் தடுப்பூசி
14 வயதுடைய 3,38,649 பெண் குழந்தைகளுக்கு HPV தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக (Pilot phase) கருப்பை வாய் புற்றுநோய் பாதிப்பு அதிகம் உள்ள தருமபுரி, பெரம்பலூர், திருவண்ணாமலை மற்றும் அரியலூர் ஆகிய 4 மாவட்டங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அம்மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் அரசு சார்ந்த பள்ளிகளில் 30,209 மாணவிகளுக்கு HPV (Human Papilloma Virus) தடுப்பூசி வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்திருக்கிறார்.
அதன் தொடர்ச்சியாக, மாநிலம் முழுவதும் உள்ள எஞ்சிய மாவட்டங்களில் உள்ள 14 வயதுடைய பெண் குழந்தைகளுக்கு இத்தடுப்பூசி செலுத்தப்படும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த HPV வைரஸ் தடுப்பூசி குறித்தும், அதனை யாரெல்லாம் பயன்படுத்தலாம் என்பது குறித்தும் மகப்பேறு மருத்துவர். மீனாக்ஷி பாலசுப்ரமணியனைத் தொடர்புகொண்டு பேசினோம்.
இது தொடர்பாக நம்மிடம் பேசிய அவர், “கருப்பைவாய் புற்றுநோய் 80 சதவிகிதம் HPV வைரஸால் தான் உருவாகின்றன.
யாரெல்லாம் பயன்படுத்தலாம்?
HPV வைரசுக்கு எதிராகப் போடப்படும் தடுப்பூசியைத் தான் தமிழ்நாட்டு அரசாங்கம் தற்போது அறிவித்திருக்கிறது.
9 வயதிலிருந்து 45 வயது வரைக்கும் உள்ளவர்கள் இந்தத் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளலாம்.
ஆனால் சிறுவயதிலேயே அதாவது 9 வயதிலிருந்து 14 வயதிற்குள் இருக்கும் சிறுமிகள் இந்தத் தடுப்பூசியைப் போட்டுக்கொண்டால் அதன் பலன் அதிகமாக இருக்கும்.

அதனால் தான் 9 வயதிலிருந்து 14 வயதிற்குள் உள்ள சிறுமிகளுக்கு அரசாங்கம் இந்த இலவசத் தடுப்பூசியை அறிமுகப்படுத்தி இருக்கிறது.
குறைந்தபட்சம் 26 வயதிற்குள் இந்தத் தடுப்பூசியைப் போட்டுகொள்வது நல்லது.
தவணை முறைகள்
14 வயதிற்குள் போடப்படும் இந்தத் தடுப்பூசி இரண்டு தவணையாக செலுத்தப்படும்.
ஆரம்பத்தில் ஒரு டோஸ் போடப்படும். முதல் டோஸ் போட்டு 6 மாதங்களுக்குப் பிறகு இரண்டாவது டோஸ் போடப்படும்.
14 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு மூன்று தவணையாக இந்த HPV தடுப்பூசி செலுத்தப்படும்.
முதல் டோஸ் போட்டு 2 மாதங்கள் கழித்து இரண்டாவது டோஸ் போடப்படும். அதேபோல முதல் டோஸ் போட்டு 6 மாதங்கள் கழித்து மூன்றாவது டோஸ் போடப்படும்.

பெண்கள் மட்டும் அல்ல ஆண்களும்!
இந்தத் தடுப்பூசிகள் தனியார் மருத்துவமனைகளிலும் கிடைக்கின்றன. ஒரு டோஸின் விலை 2000 ரூபாய்.
ஆசனவாய் புற்றுநோய், தொண்டை புற்றுநோய் போன்றவற்றிற்கு எதிராக இந்தத் தடுப்பூசி இருப்பதால் பெண்கள் மட்டும் அல்லாமல் ஆண்களும் இந்தத் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளலாம்.
முதல் உடலுறவிற்கு முன்பு இந்தத் தடுப்பூசியை போட்டுக்கொள்வது நல்லது.
HPV தடுப்பூசி...
கல்யாணம் ஆனவர்கள், குழந்தைப் பெற்றவர்கள் போட்டுக்கொள்ளக்கூடாதா? என்ற கேள்வி வரும். அவர்களும் நிச்சயம் இந்தத் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.
சில சமயங்களில் பெண்களுக்கு HPV வைரஸ் வந்திருந்தாலும் அது எதிர்ப்பு சக்தியால் போயிருக்கும்.

ஆனால் மீண்டும் அந்த வைரஸ் பரவாமல் இருப்பதற்கு இந்தத் தடுப்பூசியைப் போடுவது சிறந்தது” என்று விளக்கம் அளித்தார்.














