ஜிம்பாப்வேக்கு எதிராக சஞ்சு சாம்சன் ஆடுவாரா? - என்ன சொல்கிறார் இந்தியாவின் பேட்ட...
"காங்கிரஸுடன் கூட்டணி வைக்க தவெக தயாராக இருக்கிறது" - கிரிஷ் சோடங்கர் பளீச்
ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்று காங்கிரஸில் சிலர் பேசி வந்தனர். மேலும், தவெக தலைவர் விஜய்யை காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி நேரில் சந்தித்துப் பேசினார்.
இதனால் காங்கிரஸ் - தவெக-வுடன் கூட்டணி வைக்குமோ என்ற சந்தேகங்கள் எழுந்தன.
திமுக - காங்கிரஸ் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நிலவிக்கொண்டே இருந்த நிலையில் சென்னைக்குக் கடந்த வாரம் வந்த காங்கிரஸ் அமைப்பு பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால், "திமுக-வுடன் சேர்ந்து வகுப்புவாதச் சக்திகளை எதிர்ப்போம். திமுக கூட்டணியில்தான் காங்கிரஸ் உள்ளது.
கூட்டணி தொடர்பான தனிநபர் கருத்து, காங்கிரஸ் கட்சியின் கருத்து கிடையாது. கட்சியின் அறிவுறுத்தலை மீறிப் பேசினால் காங்கிரஸ் தலைமை நடவடிக்கை எடுக்கும்" என்று திமுக - காங்கிரஸ் பஞ்சாயத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து சட்டமன்றத் தேர்தலுக்காக திமுக - காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகள் நடைபெற இருகின்றன.
இந்நிலையில் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் ஆங்கில நாளிதழ் ஒன்றிற்குப் பேட்டி அளித்திருக்கிறார். அதில் பேசியிருக்கும் அவர், "தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடத்த திமுக இன்னும் அழைக்கவில்லை. அதிகாரப்பூர்வமான பேச்சுவார்த்தையைத் தொடங்க நாங்கள் காத்திருக்கிறோம்.

அரசியலில் மகிழ்ச்சி, ஏமாற்றம் என எதுவும் நிரந்தரம் இல்லை. அரசியலில் நுழைந்தால் எல்லாவற்றுக்கும் தயாராக இருக்க வேண்டும். எங்களுடையது 140 ஆண்டுகால பழமையான கட்சி. நாங்கள் பல ஏற்றத்தாழ்வுகளைப் பார்த்திருக்கிறோம். எங்களுக்குப் பொறுமை இருக்கிறது" என்று கூறியிருக்கிறார்.
தொடர்ந்து தவெக குறித்த கேள்விக்கு, "காங்கிரஸ் உடன் கூட்டணி வைக்க தவெக தயாராக இருக்கிறது. அரசியலில் நீங்கள் எல்லோருடனும் பேச வேண்டும். எந்தக் கட்சிதான் அதிகாரத்துக்கு ஆசைப்படாது" என்று பதில் அளித்திருக்கிறார்.












