திடீர் விசிட்; கண்ணாடி வழங்கிய முதல்வர் விஜய்; இறுகப் பற்றி நெகிழ்ந்த மூதாட்டி! ...
கிண்டி கலைஞர் பல்நோக்கு மருத்துவமனை மருத்துவமனை: ஆய்வுக்கு வந்த குரங்குகள் - கண்டுகொள்ளுமா அரசு?
சென்னை கிண்டியில் உலகத்தரம் வாய்ந்த கட்டமைப்புடன் உருவாக்கப்பட்டது கலைஞர் பல்நோக்கு மருத்துவமனை.
தமிழ்நாட்டின் பல மாவட்டங்களிலிருந்து தினமும் ஆயிரக்கணக்கான ஏழை எளிய நோயாளிகள் தங்களின் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளும் நம்பிக்கையுடன் இந்த மருத்துவமனையை நாடுகின்றனர்.
இங்கு மருத்துவர்களும் மருத்துவப் பணியாளர்களும் சிறப்பாகச் சிகிச்சையளித்தாலும், மருத்துவமனையின் நிர்வாகமும் தூய்மைப் பராமரிப்பும் அதலபாதாளத்திற்குச் சென்று கொண்டிருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது.
முந்தைய ஆட்சிக் காலத்தில் பிரம்மாண்டமாகக் கட்டப்பட்ட இந்த மருத்துவமனை, கடந்த ஆட்சியின் இறுதிப் பகுதியில் தொடங்கிய தொய்வு காரணமாக இன்று மிக மோசமான ஒரு சூழ்நிலையை எட்டியுள்ளது.
நோயாளிகளின் நலனைக் காக்க வேண்டிய மருத்துவமனையில், தரைப்பராமரிப்பு தொடங்கி அடிப்படை வசதிகள் வரை பல இடங்களில் சுகாதாரக்கேடு கோரத்தாண்டவம் ஆடுகிறது.
இத்தகைய அவலங்களின் உச்சக்கட்டமாக, இன்று மதியம் இம்மருத்துவமனையின் மூன்றாவது தளத்தில் உள்ள இதயவியல் (Cardiology) சிகிச்சைப் பிரிவிற்குள்ளேயே இரண்டு குரங்குகள் நுழைந்துள்ளன.
அங்கு வைக்கப்பட்டிருந்த குப்பை கூளங்களையும் கழிவுகளையும் அவை திறந்தவெளி மேடைகளைப் போலக் கிளறி, மிகவும் நிம்மதியாகச் சாப்பிட்டுக் கொண்டிருந்த காட்சி அங்கிருந்தவர்களை அதிர்ச்சியில் உறையச் செய்தது.

உயர்தர நோயாளிகள் சிகிச்சை பெறும் இதயவியல் போன்ற மிக முக்கிய மருத்துவப் பிரிவிற்குள்ளேயே குரங்குகள் சுதந்திரமாகத் திரிவது, இம்மருத்துவமனையின் பராமரிப்பு எந்தளவிற்குச் சீரழிந்துள்ளது என்பதற்குச் சாட்சியாக அமைந்துள்ளது.
தீவிர நோய்த்தொற்று ஏற்படக் கூடிய இத்தகைய இடங்களில் விலங்குகள் நுழைவது நோயாளிகளின் உயிருக்கு எத்தகைய ஆபத்தை விளைவிக்கும் என்பதைச் சம்பந்தப்பட்ட நிர்வாகம் சிந்திக்க வேண்டும்.
கோடிக்கணக்கில் பொதுமக்கள் வரிப்பணத்தில் உருவாக்கப்பட்ட இத்தகைய உன்னதமான மருத்துவமனைகள் முறையான பராமரிப்புமின்றி, நிர்வாகத்தின் அலட்சியத்தினாலும் சீரழிவது கண்டிக்கத்தக்கது.
உடனடியாகத் தமிழக அரசும், சுகாதாரத்துறையும் தலையிட்டு, கிண்டி பன்னோக்கு மருத்துவமனையின் தூய்மைப் பணியை மேம்படுத்தவும், அடிப்படை சுகாதாரக் கட்டமைப்பை மீட்கவும் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.!














