இனி பெட்ரோலில் 20% Ethanol கலப்பு: வாகனத்திற்கு சேதம் இல்லை! - விவசாயிகளுக்கு ந...
கூட்டணியில் அழுத்தம் கொடுத்து தொகுதிகளை வாங்கிய காங்கிரஸ் - வேட்பாளர் பட்டியல் வெளியாவது எப்போது?
தமிழக சட்டபேரவைத் தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கிறது. எண்ணிப்பார்த்தால் இன்னும் 20 நாட்களே உள்ளன.
திமுக, அதிமுக, தவெக, நாம் தமிழர் கட்சி போன்ற பிரதான கட்சிகள் தங்களது வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்துவிட்டன.
வேட்பாளர்களை அறிவிக்காத காங்கிரஸ்
ஆனால் கடந்த மாதம் வரை ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு, கூட்டணி பேச்சு வார்த்தை, தொகுதி பங்கீடு என தொடர்ந்து திமுகவிற்கு அழுத்தம் கொடுத்த காங்கிரஸ் இன்னும் வேட்பாளர்களை அறிவிக்காமல் காலதாமதம் செய்துவருகிறது.

உட்கட்சி பூசல் தான் காரணமா?
திமுக கூட்டணியில் 28 தொகுதிகளைப் பெற்ற காங்கிரஸ் வேட்பு மனுதாக்கல் தொடங்கிய பிறகும் வேட்பாளர்களை அறிவிக்காமல் இருப்பதற்கு காரணம் உட்கட்சி பூசலே காரணம் என்கின்றனர் அரசியல் வட்டாரத்தினர்.
இதனை உறுதிப்படுத்தும் வகையில் காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி கட்சியின் தொகுதி தேர்வில் எவ்வித வெளிப்படைத் தன்மையும் இல்லை என்று வெளிப்படையாக குற்றம்சாட்டி இருந்தார்.
எம்.பி ஜோதிமணியின் அதிருப்தி
இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருந்தப் பதிவில், " காங்கிரஸ் கட்சியின் தொகுதி தேர்வில் எவ்வித வெளிப்படைத் தன்மையும் இல்லை. வெளிப்படைத்தன்மையோடும்,விரிவான விவாதத்திற்குப் பின்பே தொகுதி தேர்வு செய்யப்படவேண்டும் என்ற எங்கள் கருத்தை பொறுப்பாளர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.
அனைத்துமே மிக ரகசியமான முறையில் நடைபெற்றது. காங்கிரஸ் கட்சியின் நலன் முழுக்கவும் சமரசம் செய்யப்பட்டுவிட்டது. நம் போன்ற உண்மையான காங்கிரஸ் கட்சி தொண்டர்களின் ஆண்டாண்டு கால உழைப்பை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்காக ஒரு சிறு துரும்பைக் கூட கிள்ளிப்போட்டிராத சிலர் விற்றுத்தின்பதைப் பார்க்க வேதனையாக உள்ளது.

காங்கிரஸ் கட்சியை யாராலும் காப்பாற்ற முடியாது
இந்த மோசமான சூழலைக் கேள்வி கேட்காமல் மௌனமாக இருக்க முடியாது. பொறுப்பாளர்கள், மாநிலத் தலைவர் மட்டும் கட்சியல்ல. லட்சக்கணக்கான தொண்டர்களின் உணர்வும், உழைப்புமே கட்சி.
பட்டியல் வெளியானதும் விரிவாகப் பேசலாம். இதே விற்பனை அணுகுமுறையோடு தான் வேட்பாளர் தேர்வும் நடக்குமென்றால் தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியை யாராலும் காப்பாற்ற முடியாது" என்று வெளிப்படையாக விமர்சித்திருந்தார்.
பிரவீன் சக்ரவர்த்தியின் கார்ட்டூன் பதிவு
அதே போல ஜோதிமணியின் பதிவை குறிப்பிட்டு அதிக தொகுதிகளை கேட்டு பெற்று இருந்தால், சர்ச்சையின்றி தொகுதிகளைப் பிரித்துக் கொண்டிருக்கலாம் என்று பொருள்படும் வகையில் கார்ட்டூன் படம் ஒன்றை பதிவிட்டிருந்தார் பிரவீன் சக்ரவர்த்தி.
தவிர தமிழகத்தில் தேர்தல் பேச்சுவார்த்தை தொடங்கிய உடனே ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்ற கோரிக்கையை மாணிக்கம் தாகூர் முன் வைத்தார்.

காங்கிரஸில் சடுகுடு
ஆனால் இதை செல்வப்பெருந்தகை உள்ளிட்ட தமிழக காங்கிரஸின் சில தலைவர்கள் தலைவர்கள் ஏற்கவில்லை. அப்போது இருந்தே காங்கிரஸ் கட்சிக்குள் சடுகுடு ஆரம்பித்துவிட்டது.
செல்வப்பெருந்தகை எடுக்கும் முடிவுகளுக்கு எல்லாம் மாணிக்கம் தாகூர், கரூர் எம்பி ஜோதிமணி, சிவகங்கை எம். பி கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோர் எதிர்ப்புகளையே தெரிவித்து வருகின்றனர்.
விலகிய மாணிக்கம் தாகூர்
இந்நிலையில் நேற்று (ஏப்ரல்.1) காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு தேர்தல் மேலாண்மை மற்றும் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பொறுப்பிலிருந்து தான் விலகுவதாக மாணிக்கம் தாகூர் அறிவித்துவிட்டார்.
இப்படி கட்சிக்குள் குழப்பம் இருக்கும் நிலையிலேயே வேட்பாளர்கள் தேர்வில் தாமதம் எனக் கூறப்படுகிறது. செல்வப்பெருந்தகை டெல்லி பயணித்து ராகுலை சந்தித்த பிறகும் வேட்பாளர்களை இறுதி செய்ய முடியவில்லை என்கிறார்கள்.

ராகுல் காந்தி அஸ்ஸாம் மாநில பிரசாரத்தில் இருப்பதாகவும், அவர் டெல்லி திரும்பியதும் தமிழக வேட்பாளர் பட்டியல் இறுதி செய்து வெளியிடப்படும் என்றும் காங்கிரஸ் தரப்பில் சொல்லப்படுகிறது.
பொதுவாகவே காங்கிரஸ், பாஜக போன்ற் அ வேட்பாளர்கள் தேர்வு தாமதமாகும் என்பது வழக்கமான ஒன்றாக இருந்தாலும் இந்தமுறை தேர்தல் நெருங்கி உள்ள சூழலிலும் வெளியாகமல் இருப்பது கட்சி வட்டாரத்தில் அதிருப்தியையே ஏற்படுத்தி இருக்கிறது.
















