NRI Corner: சொந்த ஊருக்குப் போறீங்களா? மாதாந்திர பென்ஷன் பெறும் 'Bucket Strategy...
கோவை: வடமாநிலத் தொழிலாளியைக் கொன்று புதைத்த 6 பேர் கைது - அதிரவைக்கும் கொலைகளால் மக்கள் அச்சம்
கோவை ஒத்தக்கால் மண்டபம் பகுதியில் இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான நிலத்தில் கடந்த 8ம் தேதியன்று மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்றுள்ளது.
அப்போது ஒரு இடத்தில் தோண்டப்பட்டு இருந்த குழிக்குள் ஒரு சடலம் புதைக்கப்பட்டு இருந்ததும், அதன் ஒரு கை மட்டும் வெளியே தெரிந்துள்ளது. இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த தொழிலாளர்கள், செட்டிபாளையம் காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர்.
இதையடுத்து காவல் துறையினர் சடலத்தைத் தோண்டி எடுத்தபோது, உடலில் பல இடங்களில் காயங்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து சடலம் உடற்கூராய்விற்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இது குறித்து காவல் துறையினர் நடத்திய விசாரணையில், கொலை செய்யப்பட்டது ஒத்துக்கால்மண்டபம் பகுதியில் தங்கியிருந்து, கிணத்துக்கடவு பகுதியில் உள்ள ஒரு ஸ்பின்னிங் மில்லில் வேலை செய்து வந்த மேற்குவங்கத்தைச் சேர்ந்த பாதல் ஷித் (24) என்பது தெரியவந்தது.
மேலும், காணாமல் போன அவரின் செல்போனை வேறு ஒருவர் பயன்படுத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அந்த செல்போன் டவர் லோகேஷனை வைத்து திரிபுராவைச் சேர்ந்த துய்தே ரியாங் (22), சுனில் ராய் ரியாங் (24), கோத்தோ ராம் ரியாங் (30), சுமித் குமார் (20), ஸ்ராமித் ட்ராங் (35), சந்தோஷ்குமார் (20) ஆகிய 6 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், கடந்த 7ம் தேதியன்று இரவு மது போதையில் இருந்த பாதல், சம்பவ இடத்தில் மது அருந்தி கொண்டிருந்த 6 பேரிடம் மது கேட்டதாகவும், இதனால் ஏற்பட்ட தகராறில் பாதலைத் தாக்கி கொலை செய்ததாகவும் கூறியுள்ளனர்.
மேலும் இதனை மறைக்கும் வகையில் மரக்கன்றுகள் நடுவதற்காகத் தோண்டப்பட்டு இருந்த குழிக்குள் சடலத்தை அவசரமாகப் புதைத்துவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றதாகவும் கூறியுள்ளனர்.
இதேபோல பாப்பம்பட்டி பகுதியில் உடல் தோற்றம் குறித்து கேலி செய்ததால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக நேபாளத்தைச் சேர்ந்த ராஜன் என்கிற ராமேஸ்வர் சாஹ் என்ற இளைஞரை ஹாலோபிளாக் கல்லால் தாக்கி ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மாத்யாஸ் மால்டோ மற்றும் ஜெகதீஷ் ஆகியோர் கொலை செய்தனர்.
இந்த வழக்கில் மாத்யாஸைக் கைது செய்த காவல் துறையினர் ஜெகதீஷைத் தேடி வருகின்றனர். இந்தச் சம்பவங்கள் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



















