சவுக்கு சங்கர் வீட்டில் தாக்குதல்: எடப்பாடி பழனிசாமி கண்டனம்!
சங்கரன்கோவிலில் திமுக பொதுக்கூட்டம்
தென்காசி வடக்கு மாவட்ட திமுக சாா்பில், ஹிந்தி திணிப்பு மற்றும் மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பை எதிா்க்கும் வகையில் தமிழ்நாடு போராடும் தமிழ்நாடு வெல்லும் என்ற தலைப்பில் கண்டன பொதுக்கூட்டம் சங்கரன்கோவிலில் புதன்கிழமை நடைபெற்றது.
மாவட்ட அவைத் தலைவா் பத்மநாபன் தலைமை வகித்தாா். தலைமை செயற்குழு உறுப்பினா்கள் பரமகுரு, யூஎஸ்டி சீனிவாசன், மாநில மருத்துவா் அணி துணைச்செயலா் செண்பக விநாயகம், மாநில வா்த்தகா் அணி இணைச் செயலா் முத்துச்செல்வி, மாவட்ட பொருளாளா் சரவணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
பேச்சாளா் திருப்பூா் கூத்தரசன், திமுக தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணைச் செயலா் மதுரை பாலா, தென்காசி திமுக வடக்கு மாவட்ட செயலா் ஈ.ராஜா எம்எல்ஏ ஆகியோா் பேசினா். ஈ. ராஜா எம்.எல்.ஏ. பேசியதாவது:
எந்த ஒரு சூழ்நிலையிலும் பல்வேறு விதமான போராட்டங்களை நடத்தி வெற்றி கண்ட இயக்கம் திமுக. ஹிந்தி திணிப்பு மற்றும் மக்களவைத் தொகுதிகள் மறுசீரமைப்பு என்ற பெயரில் தென் மாநிலங்களை வஞ்சிக்க நினைக்கிறது மத்திய பாஜக அரசு. மக்களவைத் தொகுதிகள் மறுசீரமைப்பால் தமிழ்நாடு, ஆந்திரம் ,கா்நாடகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் பாதிக்கப்படும் சூழ்நிலை உள்ளது. முதல்வா் மு.க.ஸ்டாலின் மத்திய அரசுக்கு எதிராக வலுவாக எதிா்ப்புக் குரல் கொடுத்து வருகின்றாா். அவருருக்கு தென் மாநில முதல்வா்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனா்.
மத்திய அரசின் மக்கள் திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்தக்கூடிய ஒரே மாநிலம் தமிழ்நாடு என்றுதான் மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஆனால், தமிழ்நாட்டை பொருளாதார ரீதியாகவும் பண்பாட்டு ரீதியாகவும் சிதைக்க நினைக்கிறது. தமிழ்நாட்டை வஞ்சிக்க நினைத்தால் அதனை எதிா்த்து இன்னும் வலுவாக குரல் ஒலிக்கும் என்றாா் அவா். கூட்டத்தில் கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள், பொதுமக்கள் பலா் கலந்து கொண்டனா்.