Avaniyapuram Jallikattu | துள்ளிப் பாய்ந்த காளைகள்; சாகசம் காட்டிய வீரர்கள்! | H...
சபரிமலை: நாளை வரை திருவாபரண தரிசனம்... 20-ம் தேதி சாத்தப்படும் நடை!
சபரிமலை ஐய்யப்ப சுவாமி கோயிலில் கடந்த 14-ம் தேதி மகரஜோதி தரிசனம் நடைபெற்றது. மண்டல கால, மகரவிளக்கு பூஜைகள் வரும் 20-ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. 19-ம் தேதி இரவு நடை அடைக்கும் வரை பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர். பம்பா, நிலக்கல், எருமேலி, பந்தளம், வண்டிப்பெரியார் ஆகிய இடங்களில் புக்கிங் செய்யப்படுகிறது. வரும் 19-ம் தேதிவரை இந்த இடங்களில் ஸ்பாட் புக்கிங் செய்துகொள்ளலாம். 19-ம் தேதி வரை ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்துகொள்ளலாம். வரும் 18-ம் தேதிவரை ஆன்லைன் புக்கிங் மூலம் 50,000 பக்தர்களும், ஸ்பாட் புக்கிங் மூலம் 5,000 பக்தர்களும் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர். வரும் 19-ம் தேதி ஆன்லைன் முன்பதிவு மூலம் 30,000 பக்தர்களும், ஸ்பாட் புக்கிங் மூலம் 5,000 பக்தர்களும் அனுமதிக்கப்படுகின்றனர். மகரஜோதி தரிசனத்தை முன்னிட்டு கடந்த 14-ம் தேதி திருவாபரணம் சார்த்தி ஐயப்ப சுவாமிக்கு பூஜைகள் நடைபெற்றன. திருவாபரணம் சார்த்தப்பட்ட கோலத்தில் ஐயப்ப சுவாமியை நாளை (பிப்ரவரி 17) வரை பக்தர்கள் தரிசிக்கலாம்.

வரும் 18-ம் தேதி வரை பக்தர்கள் இருமுடியில் கொண்டுசெல்லும் நெய் சுவாமிக்கு அபிஷேகம் செய்யலாம். 19-ம் தேதி ஹரிவராசனம் பாடி ஐயப்ப சுவாமி கோயில் நடை அடைக்கப்பட்ட பிறகு, மாளிகப்புறம் சன்னதியில் வலிய குருதி பூஜை நடைபெறும். 20-ம் தேதி பந்தள மன்னர் குடும்பத்தின் பிரதிநிதிகள் தரிசனம் செய்வதைத் தொடர்ந்து பூஜைகள் நிறைவுபெறும். பின்னர் திருவாபரணத்துடன் பாரம்பர்ய பாதை வழியாக மன்னர் பிரதிநிதி திரும்புவார். மாசி மாத பூஜைகளுக்காக பிப்ரவரி 12-ம் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படும்.

இதற்கிடையே சபரிமலை ஐயப்ப சுவாமி கோயில் உண்டியலில் இருந்து பணம் திருடிய தற்காலிக ஊழியர்கள் கோபகுமார், சுனில் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். உண்டியல் பணம் எண்ணும் இடத்தில் இருந்து பணத்தை எடுத்துவந்த அவர்களை விஜிலென்ஸ் டீம் கைது செய்தது. அவர்களின் அறைகளில் பரிசோதனை நடத்தியதில் கோபகுமாரிடம் இருந்து 13,820 ரூபாயும், இரண்டு கிராம் தங்க லாக்கெட்டும் பறிமுதல் செய்யப்பட்டன. சுனிலிடம் இருந்து 17 வெளிநாட்டு கரன்சிகளும், 12,500 ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டன. இருவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.





















