பிரமாண்ட ஸ்வர்ணகிரி; `ஆந்திராவின் KGF' - சந்திரபாபு நாயுடு பெருமிதம்
‘சார்... ஆபீஸுக்கு ரெய்டு வருது!’ கசியும் தகவல் டு மாண்புமிகுவால் கொதிக்கும் மா.செ-க்கள்! | கழுகார்
லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக பொறுப்பேற்றுள்ள ஏ.டி.ஜி.பி அருணுக்கு, தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் உருவாகியிருக்கிறது. அதனால் முன்னாள் அமைச்சர்களை ஒரு பக்கம் குறிவைக்கும் அவர், மறுபக்கம் நேர்மையற்ற அதிகாரிகளையும் சல்லடை போட உத்தரவிட்டிருக்கிறாராம். அதன்படி பத்திரப் பதிவுத்துறை, ஆர்.டி.ஓ அலுவலகங்கள் என பல இடங்களில் ரெய்டுகள் பறந்தன. ஆனால், பல சோதனைகளிலும் அதிகாரிகள் வெறும் கையோடுதான் திரும்பியிருக்கிறார்கள்.
அதற்குக் காரணம், ரெய்டுக்கு கிளம்பும் முன்பே, "சார்... கொஞ்சம் ஜாக்கிரதை!" என்று சம்பந்தப்பட்ட அலுவலகங்களுக்கு தகவல் கசியவிடப்படுகிறதாம். இதனால் பெரிய மீன்கள் தப்பி ஓட, சிறிய மீன்கள் மட்டும் வலையில் சிக்குகிற சூழல் உருவாகியிருக்கிறது. "மற்ற துறைகளை சுத்தம் செய்வதற்கு முன், நம்ம துறையிலேயே இருக்கும் கருப்பு ஆடுகளை கண்டுபிடிக்கணும்!" என்று புலம்புகிறார்களாம் லஞ்ச ஒழிப்புத்துறை சீனியர்கள்.
கோவை தெற்கில் வென்றிருந்தாலும், கரூர் மாவட்டச் செயலாளர் பதவியை விட மனமில்லை என்கிறாராம் செந்தில் பாலாஜி. ஆனால், "கரூர் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்ற தொகுதிகளில் கரூர், கிருஷ்ணராயபுரம் ஆகிய இரு தொகுதிகளை இழந்ததற்கு அவரே காரணம். இச்சூழலில் அவருக்கே மீண்டும் அதிகாரத்தை கொடுத்தால் என்ன நியாயம்..." எனக் கேள்வி எழுப்பிவருகிறார்கள் கரூர் உடன்பிறப்புகள்.
எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றும் விதமாக, கரூர் மாவட்டத்தில் இரண்டு தொகுதிகளை தனக்கு வைத்துக் கொண்டு, மீதமுள்ளவற்றை செல்வராஜுக்கு வழங்க பரிந்துரைத்திருக்கிறாராம் செந்தில் பாலாஜி. 'செல்வராஜ் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்புதான் அ.தி.மு.க-வில் இருந்து தி.மு.க-வுக்கு வந்தார். கூட்டுறவு சங்கத்தில் கோடிக்கணக்கில் முறைகேடு செய்த புகாரில் சிக்கிய அவருக்கு கடவூர் மேற்கு ஒன்றிய செயலாளர், தலைமை செயற்குழு உறுப்பினர் பதவிகளை செந்தில் பாலாஜி ஏற்கெனவே வாரி வழங்கினார்.
இப்போது அவருக்கே மா.செ பதவியும் பெற்றுக் கொடுத்தால், தி.மு.க-வில் உழைக்கும் உடன்பிறப்புகளுக்கு என்னதான் மரியாதை?' எனக் கொதிக்கிறார்கள். மாவட்ட மறுசீரமைப்பின்மூலம் செந்தில் பாலாஜியை கோவைக்கு பார்செல் செய்ய கரூர் புள்ளிகள் அறிவாலய கதவுகளை தட்ட ஆரம்பித்திருக்கிறார்கள்.
மாவட்ட வாரியான பிரச்னைகளை முதல்வர் அலுவலகங்களுக்கு எடுத்துக் கூறவே, மாவட்ட பொறுப்பு அமைச்சர்களை ஆட்சி மேலிடம் நியமித்திருக்கிறது. அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பு அமைச்சராக தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா நியமிக்கப்பட்டிருக்கிறார். பொறுப்பு அமைச்சர்கள் ஒவ்வொருவரும் தங்களுடைய பொறுப்பு மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் செல்லும் நிலையில், இதுவரை கிருஷ்ணகிரி மாவட்டம் பக்கமே அமைச்சர் கீர்த்தனா வரவில்லையாம்.

அதேசமயம், கிருஷ்ணகிரி மாவட்ட கட்சி நிகழ்ச்சிகளுக்கான விளம்பரங்கள், கட்சி நிர்வாகிகளின் வீட்டு விசேஷ அழைப்பிதழ்களில் 'அமைச்சர் படத்தை போடுங்கள்' என அமைச்சர் அலுவலக நிர்வாகிகள் உத்தரவு போடுகிறார்களாம். இதனால், லோக்கல் மா.செ-க்கள் கொத்தித்துப் போய் இருக்கிறார்கள். விருதுநகர் மாவட்டத்தில் அமைச்சர் ஜெகதீஸ்வரியுடன் மோதல் போக்கை கீர்த்தனா தொடங்கியிருப்பதால் அங்கேயும் மா.செ-க்கள் கடுப்பில் இருக்கிறார்களாம். நீர்வளத்துறை அமைச்சரும் த.வெ.க பொதுச்செயலாளருமான ஆனந்திடம் பஞ்சாயத்து சென்றிருக்கிறது.
அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின் போது வேலுமணி, சி.வி.சண்முகம் தலைமையிலான 20-க்கும் மேற்பட்ட அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் எடப்பாடியை மீறி த.வெ.க-வுக்கு ஆதரவாக வாக்களித்தனர். பிறகு, மன்னிப்புக் கடிதம் கொடுத்துவிட்டு எடப்பாடி முகாமுக்கே திரும்பினார்கள். ஆனால் அவர்களையெல்லாம் அரவணைக்க மறுக்கிறாராம் எடப்பாடி பழனிசாமி.
அவர்களுடைய கட்சி பொறுப்புகளை மீண்டும் வழங்காமல் இழுத்தடித்துக் கொண்டிருக்கிறார்.

இதனால் முறுக்கிக் கொண்டிருக்கும் வேலுமணி தரப்பு, சட்டமன்றத்தில் எடப்பாடிக்கு எவ்வித ஆதரவையும் தருவதில்லை.
மேகதாது விவகாரத்தில் எடப்பாடி பேச சட்டமன்றத்தில் வாய்ப்பு மறுக்கப்பட்டபோது, தனி ஆளாக போராடினார். பேச வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில் வெளிநடப்பும் செய்தார். அந்த சமயத்தில் எடப்பாடிக்கு ஆதரவாக குரலெழுப்ப வேண்டிய வேலுமணி உள்ளிட்ட சீனியர்கள் சைலண்ட்டாக இருந்திருக்கிறார்கள். எடப்பாடி வெளிநடப்பு செய்யும்போது வேலுமணி தரப்பு அவையிலேயே இருந்தது அ.தி.மு.க-வினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. "சட்டமன்றக் குழுத் தலைவரையே தனிமரமாக விட்டுவிட்டார்களே..." என்று எடப்பாடியுமே கொதித்துப் போய்விட்டாராம்.
சட்டமன்ற கூட்டத் தொடரின் முதல்நாளான ஜூன் 18-ம் தேதி ஆளுநர் உரை முழுமையாக நேரலை செய்யப்பட்ட நிலையில், அடுத்தநாள் நேரலை தீடிரென துண்டிக்கப்பட்டது. அதுகுறித்து விளக்கமளித்த செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை அமைச்சரான ராஜ்மோகன், 'நேரலை துண்டிக்கப்பட்டது எனக்கே தெரியாது.!' என நழுவினார். நேரலை துண்டிக்கப்பட்ட விவகாரத்தில் முதல்வர் அலுவலகமே தலையிட்டதாக சொல்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

மேலும், கடந்த ஜூன் 22-ம் தேதி எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் முன்வைத்த நக்கலான விமர்சனங்களும் கிடுக்குப்பிடி கேள்விகளும் சமூக வலைதளங்களை த.வெ.க-வை டேமேஜ் செய்துவிட்டன. 'தொடர்ச்சியாக சட்டமன்ற அவை நடவடிக்கைகளை லைவ் செய்தால், அது ஆளும்தரப்புக்குதான் சிக்கலாக மாறும்' என முதல்வருக்கு நோட் அனுப்பியிருக்கிறார்களாம் சீனியர் மாண்புமிகுக்கள். அதற்கு, 'இந்த கூட்டத்தொடரை விட்டுவிடுங்கள்... பிறகு பார்த்துக் கொள்ளலாம்' என்றுவிட்டதாம் முதல்வர் அலுவலகம். ஆகவே லைவ் தொடருமா என்பது சந்தேகம்தான்!













