'குழந்தைகள் இல்லை... சிரிப்பும் இல்லை...' - அமைதியாகும் மெரினா ராட்டினங்கள்
"டாஸ்மாக்கில் பாட்டலுக்கு 10 ரூபாய் வாங்குவது குறைந்துள்ளது" - அமைச்சர் விக்னேஷ் தகவல்
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மதுவிலக்குத் துறை அமைச்சர் விக்னேஷ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், “போதையில்லா தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்பது இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது. அதற்கான பல கட்ட முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. ஒரு மாதமாக காவல் துறை போதைப் பொருட்களைப் பறிமுதல் செய்து வருகிறது.
இது தொடர்பாக கடந்த 10.5.26 முதல் 20.7.26 வரை 2,892 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 3,845 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 3,579 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 10 லட்சத்து 2 ஆயிரத்து 379 போதை மாத்திரைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஹெராயின், மெத்தபெட்டமைன், எம்.டி.எம்.ஏ, கஞ்சா சாக்லேட் எனப் பல போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அரசு எந்தவித சமரசமும் இன்றி போதை இல்லா தமிழகம் உருவாக நடவடிக்கை எடுத்து வருகிறது.
டாஸ்மாக்கில் பழைய நடைமுறையைத் தொடர்வோமா? வேறு வழி முறைகள் குறித்த கலந்துரையாடல் நடந்தது. இந்தத் துறையை மட்டும் மோசமாக நினைக்கிறார்கள். இந்தத் துறையை மாற்ற கலந்துரையாடல் நடந்தது. அதில் பேசப்பட்ட ரெஸ்ட்ரோ பாரை மட்டும் யாரோ சொல்லி இருக்கின்றனர்.
பெட்ரோ பேக் மூலம் மது விற்பனை கொண்டுவர ஏற்கனவே முயன்றபோது, ஃப்ரூட்டி பாக்ஸ் போல கவர்ச்சியாக இருப்பதால் குழந்தைகளுக்கு அதன் மீது ஆர்வம் வரும் என்றார்கள். இப்போது அதற்கு மாற்று வழியைக் கண்டு பிடித்துக் கொண்டிருக்கிறோம். மது கொள்முதலில் எல்லாருக்கும் சரிசமமாகக் கொடுப்பதற்காகத் திட்டத்தைக் கையில் எடுத்து இருக்கிறோம். இரண்டு, மூன்று பேரிடம் மட்டும் இல்லாமல் அனைவருக்கும் ஜனநாயக அடிப்படையில் இருப்பது சரியாக இருக்கும்” என்றார்.
கடந்த ஆட்சியைப் போலவே டாஸ்மாக்கில் பாட்டலுக்கு பத்து ரூபாய் வாங்வது இன்னும் தொடரும் நிலையில், அந்தப் பணம் யாருக்குச் சொல்கின்றது என்ற கேள்விக்கு, “இப்போது பல இடங்களில் பாட்டலுக்கு பணம் வாங்குவது குறைந்து இருக்கிறது. இப்போது 5 ரூபாய், 3 ரூபாய் என வாங்குவதாக செய்திகள் வந்து கொண்டு இருக்கின்றன. அதை முழுமையாக ஒழிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்டு கொண்டு இருக்கிறோம். இந்த விவகாரத்தில் 27ம் தேதிக்குப் பின்பு வேறு ஒரு நடவடிக்கை எடுக்க இருக்கிறோம்” எனப் பதிலளித்தார்.











