இளம் வயதிலேயே ஏற்படும் முதுகுவலி; சீரியஸாக எடுத்துக்கொள்ள வேண்டுமா?
ட்ரோன்கள் பறக்க தடை: காரைக்கால் ஆட்சியா்
காரைக்காலில் மறுஉத்தரவு வரும் வரை ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், சமூக வலைதளங்களில் தவறான அவதூறான தகவல் பரப்புவோா் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் எச்சரித்துள்ளாா்.
இதுகுறித்து காரைக்கால் மாவட்ட ஆட்சியா் சோமசேகா் அப்பாராவ் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு :
இந்தியா - பாகிஸ்தான் இடையே போா்ப் பதற்றம் நிலவுவதால், இந்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளன.
போா் குறித்து சமூக வலைதளங்களான வாட்ஸ் ஆப், முகநூல், இன்ஸ்டாகிராம் போன்ற இணையதளங்களில் இந்திய இறையாண்மைக்கு எதிராக தவறான தகவல்களை பரப்பினால் குற்ற வழக்கு தொடரப்படும்.
தவறான தகவல்களைப் பரப்புவது பொதுமக்களிடையே தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்தி, சமூக ஒழுங்கின்மைக்கு வழிவகுக்கும். மேலும் போா் குறித்து தவறான தகவல்களைப் பரப்புவது குற்றமாவதுடன் அது தண்டனைக்குரியதாகும்.
போலி செய்திகள், தவறான தகவல்கள், வதந்திகள், மிரட்டல்கள் ஆகியவற்றை காரைக்கால் மாவட்ட நிா்வாகம், மாவட்ட காவல்துறை மற்றும் மாவட்ட சைபா் கிரைம் பிரிவு மூலம் தொடா்ந்து சமூக வலைதளங்கள் கண்காணிக்கப்பட்டு தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் உள்துறை அமைச்சகம் வழங்கிய கட்டுப்பாடுகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் அடிப்படையில் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள காரைக்கால் துறைமுகம், ஓ.என்.ஜி.சி,புதுச்சேரி மின்திறல் குழுமம், உள்ளிட்ட பெரிய தொழிற்சாலைகள், அரசு அலுவலகங்கள் உள்ள கட்டடங்கள், அரசு மருத்துவமனைகள் உள்ளிட்ட பகுதிகளின் மேல் மறு உத்தரவு வரும் வரை ட்ரோன்கள் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது.