`சிங்கப்பூர் ஏன் உலகில் முன்னோடி நாடு?' | இயக்குநர் சீனு ராமசாமி
தனித்தனியாக வந்த எடப்பாடி, வேலுமணி; பதவியேற்காத சி.வி சண்முகம்! - சட்டமன்றத்தில் அதிமுக கடாமுடா!
முதல்வர் விஜய் தலைமையில் புதிய அரசு பொறுப்பேற்றிருக்கும் நிலையில், சட்டமன்றத்தில் எம்.எல்.ஏக்கள் பதவியேற்கும் நிகழ்வு இன்று நடந்திருந்தது. இந்த நிகழ்வுக்கு அதிமுகவினர் டீம் டீமாக பிரிந்து வந்து தங்களுக்கிடையேயான பிளவை வெளிப்படையாக காட்டியதால் கோட்டை வட்டாரம் பரபரப்பாகியிருக்கிறது.
சட்டப்பேரவையில் புதிய எம்.எல்.ஏக்கள் பதவியேற்கும் நிகழ்வு இன்று காலை 9:30 மணிக்கு திட்டமிடப்பட்டிருந்தது. திட்டமிட்டப்படியே நிகழ்வும் தொடங்கியது. தற்காலிக சபாநாயகர் கருப்பையா எம்.எல்.ஏக்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

இதற்காக காலை 8 மணி முதலே புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏக்கள் அவைக்கு வரத் தொடங்கினர். அதிமுக சார்பில் முதலில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கே.பி.முனுசாமி உட்பட சில எம்.எல்.ஏக்கள் ஒரு டீமாக வந்தனர். அவர்கள் அவைக்குள் சென்ற கொஞ்ச நேரம் கழித்து எஸ்.பி.வேலுமணி தலைமையில் இன்னொரு டீம் வந்தது.
வேலுமணியுடன் சி.விஜயபாஸ்கர் உட்பட மேலும் சில எம்.எல்.ஏக்களும் வந்திருந்தனர். சி.வி.சண்முகத்துக்காக இந்த டீம் கொஞ்ச நேரம் வெளியே காத்திருக்கவும் செய்தனர். பேரவை நிகழ்வுகள் தொடங்க நேரமாகிவிட்டதால் சி.வி.சண்முகம் வருவதற்கு முன்பாகவே வேலுமணி டீம் அவைக்குள் சென்றது.
முதலமைச்சர், அமைச்சர், முன்னாள் முதல்வர், முன்னாள் அமைச்சர், முன்னாள் எம்.எல்.ஏக்கள் என்கிற வரிசையிலேயே சபாநாயகர் முன்பு எம்.எல்.ஏக்கள் பதவியேற்றனர். சபாநாயகர் பதவிப்பிரமாணம் செய்து வைக்கும் நிகழ்வு தொடங்கிய பிறகே சி.வி.சண்முகம் அவைக்கு வந்தார். சி.வி.சண்முகம் முன்னாள் அமைச்சர் என்பதால் அவரின் பெயரில் ஆரம்பத்திலேயே வாசிக்கப்பட்டது.
அப்போது அவர் அவையில் இல்லை. தன்னுடைய பெயர் வாசிக்கப்பட்டு முடிந்துவிட்டது என்பதை அறிந்த சி.வி.சண்முகம் அவையிலிருந்து கிளம்பிவிட்டார். அதிமுகவில் பிளவு என செய்திகள் வெளியாகி வரும் நிலையில், அவர்களின் எம்.எல்.ஏக்கள் டீம் டீமாக பிரிந்து அவைக்கு வந்த சம்பவம் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

இப்படி இன்று அவையில் பதவியேற்காத எம்.எல்.ஏக்கள் சபாநாயகர் அறையில் தனியாக பதவியேற்றுக் கொள்வார்கள். நாளை சபாநாயகர் தேர்தல் மற்றும் நாளை மறுநாள் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான வாக்கெடுப்பும் நடக்கவிருப்பதால் இன்று மாலைக்குள் பதவியேற்காத எம்.எல்.ஏக்கள் பதவியேற்றுக் கொள்வார்கள் என எதிர்ப்பார்க்கபடுகிறது.














