தமிழ்நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கு அடித்தளம் அமைக்கும் பட்ஜெட்: முதல்வர் ஸ்டாலின்
‘எல்லோர்க்கும் எல்லாம்’ எனும் உயரிய நோக்கத்துடன் தமிழ்நாட்டின் மேம்பட்ட எதிர்கால வளர்ச்சிக்கு உறுதியான அடித்தளம் அமைத்திருக்கிறது என்று தமிழக பட்ஜெட் என தமிழக முதல்வர் ட்வீட் செய்திருக்கிறார்.
வரும் 2025 - 26ஆம் நிதியாண்டுக்கான தமிழக நிதிநிலை அறிக்கை பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்த பட்ஜெட்டில் பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளார்.
இன்று காலை 9.30 மணிக்குத் தொடங்கிய பட்ஜெட் உரை, பகல் 12 மணி வரை நீடித்தது.
பட்ஜெட் குறித்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், மகளிர் நலன் காக்கும் மாபெரும் திட்டங்கள். ததும்பி வழியும் தமிழ்ப் பெருமிதம். இளைஞர்களுக்கு உலகை வெல்லும் உயர்தொழில்நுட்பம். தமிழ்நாடெங்கும் வேலைவாய்ப்புகளை அள்ளித்தரும் தொழிற்பூங்காக்கள். புதிய நகரம், புதிய விமான நிலையம், புதிய நீர்த்தேக்கம், அதிவேக ரயில் சேவை என நவீனத் தமிழ்நாட்டை உருவாக்கிடும் முன்முயற்சிகள்! விளிம்பு நிலை மக்களை அரவணைக்கும் தாயுமானவரின் கரங்கள் என அனைவருக்குமான திட்டங்கள் பல இன்று அறிவிக்கப்பட்டுள்ளன!
‘எல்லோர்க்கும் எல்லாம்’ எனும் உயரிய நோக்கத்துடன் தமிழ்நாட்டின் மேம்பட்ட எதிர்கால வளர்ச்சிக்கு உறுதியான அடித்தளம் அமைத்திருக்கிறது #TNBudget2025!
தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் நிதித்துறை அதிகாரிகள் அனைவர்க்கும் வாழ்த்துகள் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.