'அதிமுகவினரை தவெகவில் இணைப்போம் என்று சொல்வது அறமா? அவர்களிடமே கேளுங்கள்' - திரு...
`திரும்பத் திரும்ப அவகாசமா?’ - அடிதடி வழக்கில் அமைச்சர் மரியவில்சன் தரப்பிடம் கடுகடுத்த நீதிபதி
உருட்டுக்கட்டையால் தாக்கிய நிதியமைச்சர் மரியவில்சன்
தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஆர்.கே.நகர் தொகுதியில் வெற்றிபெற்ற மரியவில்சன், முதலமைச்சர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் நிதியமைச்சராக இருக்கிறார்.
இவரது உடன்பிறந்த தம்பியான மரிய கிளோத் புதுச்சேரி எழில் நகரில் வசித்து வருகிறார். மரியவில்சனுக்கும், அவரது தம்பிக்கும் சொத்து மற்றும் தொழில் விவகாரத்தில் நீண்ட நாள்களாகப் பிரச்னை இருந்திருக்கிறது. அதனால் கடந்த 2022-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தந்தை நெஸ்தருடன் புதுச்சேரிக்கு வந்த மரியவில்சன், எழில் நகரிலுள்ள தன்னுடைய தம்பி வீட்டுக்குள் உருட்டுக்கட்டையுடன் நுழைந்து அவர்களைத் தாக்கியிருக்கிறார்.
அதையடுத்து மரியவில்சனின் தம்பி மனைவி கேர்லின் கிளாட், லாஸ்பேட்டை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில், கொலை முயற்சி உள்ளிட்ட ஆறு பிரிவுகளின் (IPC 448, 427, 324, 294 (b), 506 (i), 34) கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணை புதுச்சேரி முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. ஆனால் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத மரியவில்சன், அந்த விசாரணையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
ஆனால், `வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சம்பவத்தை நிரூபிப்பதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. அதனால் அதை விசாரித்து உண்மையை வெளிக்கொண்டு வருவது அவசியம்' என்று கூறி அந்த மனுவை தள்ளுபடி செய்தார் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சி.குமரப்பா.
அதையடுத்து அந்தத் தாக்குதல் சம்பவத்தின் சி.சி.டி.வி காட்சிகளை சேகரித்து, தேர்தலுக்குப் பிறகு விரிவான குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர் லாஸ்பேட்டை போலீஸார். அந்தக் குற்றப்பத்திரிகையை பெற்றுக்கொள்வதற்காக நேற்று 04.07.2026 அன்று கட்டாயம் நேரில் ஆஜராக வேண்டும் என்று அமைச்சர் மரியவில்சனுக்கு உத்தரவிட்டிருந்தது புதுச்சேரி முதலாவது குற்றவியல் நீதிமன்றம்.
அதன்படி நேற்று காலை நீதிபதி சேரலாதன் முன்பு வழக்கு விசாரணை வந்தது. அப்போது தமிழக நிதியமைச்சர் மரியவில்சன் மற்றும் அவரது தந்தை நெஸ்தர் இருவரும் ஆஜராகவில்லை. அதையடுத்து, `அவர்கள் இருவரும் ஏன் ஆஜராகவில்லை' என்று கேள்வியெழுப்பினார் நீதிபதி.
அதற்கு அமைச்சர் மரியவில்சன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ``மரியவில்சன் தமிழக நிதியமைச்சர் என்பதால் விரைவில் தாக்கல் செய்யப்படவிருக்கும் பட்ஜெட் தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து கொண்டிருக்கிறார்.
அந்த வேலை பளுவின் காரணமாக அவரால் ஆஜராக முடியவில்லை. அதனால் இரண்டு வாரம் அவகாசம் வேண்டும்" என்று தெரிவித்தார். அதற்கு, ``பலமுறை அவர்களுக்கு சம்மன் அனுப்பியும் ஆஜராகாமல், திரும்பத் திரும்ப அவகாசம் கேட்பது ஏன்? சட்டசபைத் தொடரைக் காரணம் காட்டி ஏற்கெனவே 15 நாள்கள் அவகாசம் கேட்டீர்கள்.

ஆனால் அந்த சட்டசபைக் கூட்டத் தொடர் வெறும் மூன்று நாள்களுக்குத்தான் நடந்தது என்பதை தொலைக்காட்சி செய்திகள் மூலம் பார்த்தேன். அலுவலக வேலைகள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகத்தான் விடுமுறை நாளான இன்று ஆஜராக உத்தரவிட்டேன்.
ஆனால் இன்றும் ஆஜராகாமல் அவகாசம் கேட்கிறீர்கள். இப்போது இரண்டு வாரங்கள் அவகாசம் கொடுத்தால், மறுபடியும் அடுத்தமுறை கூடும் சட்டசபையைக் காரணமாகக் கூறி அவகாசம் கேட்பீர்கள். சரி.. நாளை அல்லது நாளை மறுநாள் ஆஜராக முடியுமா?" என்றார் நீதிபதி.
அதற்கு, ``இல்லை. இப்போதும் அவர் அதிகாரிகளுடன்தான் ஆலோசனை செய்து கொண்டிருக்கிறார். அதனால் சிரமம்" என்றார் அமைச்சர் மரியவில்சனின் வழக்கறிஞர். அதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, ``வரும் ஜூலை 10-ம் தேதி மரியவில்சன் கட்டாயம் நேரில் ஆஜராகி குற்றப்பத்திரிகையை பெற்றுக்கொள்ள வேண்டும்" என்று கூறி வழக்கை 10- தேதி தள்ளி வைத்தார்.














