நல்லகண்ணு: 'உரிமைக்காகப் போராடிய அவரது சேவை என்றும் நினைவில் நிற்கும்'- அரசியல் ...
நல்லகண்ணு : '80 ஆண்டுக்காலம் அயர்வே இல்லாமல் களத்தில் நின்றவர்' - ரஜினி, கமல் இரங்கல்
இந்திய அரசியலில் மிக மூத்த தலைவர்களில் ஒருவரும் சுதந்திரப் போராட்ட வீரருமான நல்லகண்ணு அவர்கள், இன்று தனது 101வது வயதில் காலமானார்.
அவரின் மறைவிற்குப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்திருக்கிறார்.
அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், "மாறாத கொள்கைப் பிடிப்புடன் வாழ்ந்து மறைந்த தோழர் திரு. நல்லகண்ணு அவர்களின் இழப்பு தமிழக மக்களுக்கு ஈடு செய்ய முடியாதது. அவரது ஆத்மா சாந்தியடையட்டும். ஆழ்ந்த அனுதாபங்கள்" என்று பதிவிட்டிருக்கிறார்.
தொடர்ந்து நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் வெளியிட்டிருக்கும் பதிவில், "தனக்கென்று ஒரு வாழ்க்கை என்ற சிந்தையே இல்லாதவர்; பொதுநலத்துக்கென்றே சகலத்தையும் அர்ப்பணித்து வாழ்ந்தவர்; இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர், தோழர் நல்லகண்ணு ஐயா நம்மிடமிருந்து விடைபெற்றுக்கொண்டார்.
ஏழை எளிய மக்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் ஆகியோரின் நலன்களுக்காக 80 ஆண்டுக்காலம் அயர்வே இல்லாமல் களத்தில் நின்றவர். நேர்மைக்கும் தூய்மைக்கும் எளிமைக்கும் அரசியல் நாகரீகத்துக்கும் ஒரு கலங்கரை விளக்கமாகத் திகழ்ந்தவர்.

தகைசால் தமிழரே, செவ்வணக்கம். உமது புகழ் நிலைக்கட்டும். உமது பணிகள் எம்மில் தொடரட்டும்" என்று பதிவிட்டு தனது இரங்கலைத் தெரிவித்திருக்கிறார்.












