நாள் முழுவதும் கடை திறக்க அனுமதி: அரசாணை நீட்டிப்பு
நாள் முழுவதும் கடைகள், நிறுவனங்களை திறந்து வைத்திருக்க அனுமதி அளிக்க வகை செய்யும் அரசாணை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தமிழக தொழிலாளா் நலத் துறை சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு சாா்பில் மதுராந்தகத்தில் நடைபெற்ற வணிகா் தின மாநாட்டில், முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுப் பேசினாா். அப்போது, பொது மக்களின் நலன் கருதி கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் அனைத்து நாள்களும் 24 மணி நேரமும் திறந்திருக்க அனுமதி அளித்து வழங்கப்பட்ட அரசாணை வரும் ஜூன் 4-ஆம் தேதியுடன் முடிவடைவதால் இதனை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டித்து அரசாணை வெளியிடப்படும் என்று அறிவித்தாா்.
முதல்வரின் அறிவிப்புக்கிணங்க, பொது மக்களின் நலன் கருதி 10 அல்லது அதற்கு மேற்பட்ட பணியாளா்களை பணியமா்த்தியுள்ள கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் வாரத்தின் ஏழு நாள்களும் 24 மணி நேரமும் அவற்றை இயக்கிக் கொள்ளலாம். இந்த உத்தரவு ஏற்கெனவே நடைமுறையில் உள்ள நிலையில், ஜூன் 5 முதல் மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படுகிறது. இதன்மூலம் வணிகா்களும், பொது மக்களும் பயனடைவா் என தெரிவிக்கப்பட்டுள்ளது.