பஸ்ஸை முத்தமிட்டு, டயரை தொட்டு வணங்கி.. 18 ஆண்டுக்கால பணி, நிறைவு - கண்ணீர் பெரு...
பஸ்ஸை முத்தமிட்டு, டயரை தொட்டு வணங்கி.. 18 ஆண்டுக்கால பணி, நிறைவு - கண்ணீர் பெருக நெகிழ்ந்த ஒட்டுநர்
கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், கட்டப்பனை பகுதியைச் சேர்ந்தவர் பால் குரியன் (56). இவர் கேரளா அரசுப் போக்குவரத்துக் கழகமான கே.எஸ்.ஆர்.டி.சி-யில் இடுக்கி மற்றும் கட்டப்பனை பணிமனைகளில் ஓட்டுநராகத் தனது சேவையைத் தொடங்கினார். முன்னதாக கர்நாடகாவில் நீண்ட காலம் தனியார் பேருந்து ஓட்டுநராகப் பணிபுரிந்த அனுபவம் கொண்ட இவர், கடந்த 18 ஆண்டுகளாக கே.எஸ்.ஆர்.டி.சி-யில் அர்ப்பணிப்புடன் ஓட்டுநராகப் பணியாற்றி வந்தார். இதில் குறிப்பாக, கடந்த எட்டு ஆண்டுகளாக குமுளி பணிமனையில் பணியாற்றி வந்த இவர், குமுளி டு கம்பம் வழித்தடத்தில் இயக்கப்படும் ஒரே பேருந்தை மட்டுமே தொடர்ந்து ஓட்டி வந்தார். கடந்த எட்டு ஆண்டுக்காலப் பயணத்தில், அந்தப் பேருந்து ஒருமுறைக்கூட விபத்தில் சிக்கியதில்லை. நடுவழியில் பழுதாகி நின்றதும் இல்லை. இதனால் அந்தப் பேருந்தை வெறும் இயந்திரமாகப் பார்க்காமல், தனது குடும்பத்தில் ஓர் அங்கமாகவும், தொழில் தெய்வமாகவும் பாவித்து தனிப் பாசத்துடன் பராமரித்து வந்தார். இந்நிலையில், பால் குரியனின் பணிக்காலம் நிறைவடைந்து ஓய்வு பெறும் நாள் வந்தது. குமுளி டு கம்பம் வழித்தடத்தில் தனது அதிகாரபூர்வ இறுதிப் பயணத்தை முடித்துவிட்டு பணிமனைக்குத் திரும்பிய அவர், பேருந்தை நிறுத்தியதும் உணர்ச்சிப் பெருக்கால் கண்கலங்கினார்.

கடைசி நாள், லாஸ்ட் ட்ரிப் பணி முடிந்தது கீழே இறங்கியவர், பக்தியோடு பேருந்தின் டயர்களைத் தொட்டு வணங்கினார். தொடர்ந்து பேருந்தின் முகப்புப் பகுதிக்குச் சென்று, இரு கைகளாலும் அதைத் தொட்டுத் தடவி, பேரன்போடு முத்தமிட்டுத் கண்களில் ததும்பிய கண்ணீரைத் துடைத்துக் கொண்டார். 18 ஆண்டுக்கால பணி வாழ்க்கையிலிருந்து அவர் கண்ணீருடன் விடைபெற்ற இந்தக் காட்சியைக் கண்டு, உடன் நின்ற சக ஊழியர்களும் கண்கலங்கி நின்றனர். பணிமனையின் வாட்ஸ்அப் குழுவிற்காக ஊழியர் ஜோஸ் பிலிப் எடுத்த இந்த வீடியோவை, சக ஓட்டுநர் அனந்து மோகன்தாஸ் முகநூலில் பகிரவே, அது இணையத்தில் வைரலானது. "தொழிலையும் வாகனத்தையும் இதயத்தில் சுமக்கும் உண்மையான தொழிலாளியின் தூய அன்பு இது" என இணையவாசிகள் பலரும் நெகிழ்ச்சியுடன் பாராட்டி வருகின்றனர்.

பணிநிறைவு குறித்து பால் குரியன் கூறுகையில், "கடந்த எட்டு ஆண்டுகளாக ஓட்டிய இந்தப் பேருந்தின் மீது எனக்கு அலாதிப் பிரியம் உண்டு. இதுவரை ஒரு விபத்தோ பழுதோ ஏற்பட்டதில்லை. வாய்ப்பளித்து இதே பேருந்தையும் இதே வழித்தடத்தையும் கொடுத்தால், தற்காலிக ஓட்டுநராகத் தொடர்ந்து பணியாற்றவும் தயாராக இருக்கிறேன்" என உருக்கமாகத் தெரிவித்தார். பால் குரியனுக்கு சூசம்மா என்ற மனைவியும், அன்னா சூசன் பால், எபின் பால் ஆகிய இரு பிள்ளைகளும் உள்ளனர்.












