`இது முட்டாள்தனமானது' Vs `சமநிலையைப் பேண முடியும்' - TRB ராஜா - கீர்த்தனா கருத்...
`இது முட்டாள்தனமானது' Vs `சமநிலையைப் பேண முடியும்' - TRB ராஜா - கீர்த்தனா கருத்து மோதல்!
தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத் தொடர் நடந்துவரும் நிலையில், ராணிப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தாஹிரா சட்டமன்றத்தில் உரையாற்றினார். அப்போது, ``எங்கள் பகுதியில் இயங்கி வரும் ஜே.கே. டயர் நிறுவனம் இரவோடு இரவாக டயர்களை எரிப்பதால் கடும் சுற்றுச்சூழல் மாசுபாடு ஏற்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். கடந்த ஆட்சியிலிருந்தே இந்த புகார் நீடித்து வருவதால், மக்களின் நலன் கருதி அந்த தொழிற்சாலையை உடனடியாக இழுத்து மூட வேண்டும். இத்தகைய கம்பெனி நமக்குத் தேவையில்லை." எனக் காரசாரமாக வலியுறுத்தினார்.
எம்.எல்.ஏ தாஹிராவின் இந்த பேச்சுக்கு முன்னாள் தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா கடுமையாக எதிர்ப்பைப் பதிவு செய்தார். அவர் எக்ஸ் பதிவில், ``மாசுபாடு தொடர்பான பிரச்னைகள் இருந்தால் அதை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர, ஒரு தொழிற்சாலையை ஒட்டுமொத்தமாக மூடச் சொல்வது முட்டாள்தனமானது. இது தொழில்துறைக்கு மிகவும் தவறான சமிக்ஞையை அனுப்பும். இதுபோன்ற முதிர்ச்சியற்ற மற்றும் சிந்தனையற்ற பேச்சுகளால் தமிழ்நாட்டின் தொழில் துறை நற்பெயருக்குக் களங்கம் விளைவிப்பது மிகுந்த மனவேதனையளிக்கிறது." எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்தப் பதிவுக்கு பதிலளித்திருக்கும் தொழிற்துறை அமைச்சர் கீர்த்தனா, `` `அரசியலை தொழில்துறையிலிருந்து விலக்கி வைக்க வேண்டும்' என்ற கருத்து, உண்மைகள் சாதகமாக இல்லாதபோது சிலருக்கு பேசுவதற்கு வசதியாக இருக்கிறது. அதே வழியைப் பயன்படுத்தித் தங்களுக்குச் சாதகமானக் கருத்துகளைப் பரப்புவதற்கும் அவர்கள் தயங்குவதில்லை.
நல்லாட்சிக்கு நுட்பமான அணுகுமுறை தேவை. நாங்கள் எதையும் ‘சரி - தவறு’ என்ற ஒற்றைப் பார்வையில் அணுகுவதில்லை. வேலைவாய்ப்புகளையும் சுற்றுச்சூழலையும் எங்களால் ஒரே நேரத்தில் சமநிலையாகப் பாதுகாக்க முடியும்.
தொழிற்சாலைகளை மூடுவது தொழிலாளர்களைப் பாதிக்கும். அதேபோலக் கட்டுப்பாடற்ற மாசடைவு அங்குள்ள மக்களைப் பாதிக்கும். நமது முதலமைச்சரின் தலைமையில், நாங்கள் தொழில்துறை வளர்ச்சியையும் அதேவேளையில் சுற்றுச்சூழல் விதிகளையும் சரியாகப் பின்பற்றிச் செயல்பட உறுதியேற்றுள்ளோம்.
நிலையான வளர்ச்சி என்பது ஒரு விருப்பத் தேர்வு அல்ல. அது நமது எதிர்காலச் சந்ததியினருக்கு நாம் செய்ய வேண்டிய மிகப்பெரிய பொறுப்பாகும். இதை நான் சட்டமன்றத்திலேயே தெரிவித்திருந்தேன்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.












