'அணுக்கனிமக் கொள்ளை; அனுமதி நீட்டிப்பு ஆணையைத் தவெக அரசு திரும்பப் பெற வேண்டும்'...
`பிரைவசிக்கு ஓகே, ஆனா பாதுகாப்புக்கு?' - வாட்ஸ்அப்பின் Username அப்டேட் குறித்து ஒரு விரிவான அலசல்!
நம்முடைய பிரைவசி ரொம்ப முக்கியம்தான், ஆனால் அதுவே நமக்கு ஆபத்தாக மாறினால்?
இப்படி ஒரு கேள்வியைத்தான் வாட்ஸ்அப் கொண்டு வரவிருக்கும் புதிய 'யூசர்நேம்' (Username) அப்டேட் எழுப்பியிருக்கிறது. பயனர்களின் போன் நம்பரைப் பாதுகாக்கிறோம் என்ற பெயரில் கொண்டுவரப்படும் இந்த அம்சம், ஆன்லைன் மோசடிகளுக்கு ஒரு சிவப்புக் கம்பளம் விரித்துவிடுமோ என்ற அச்சம் பரவலாக எழுந்துள்ளது. இந்த விவகாரத்தின் தீவிரத்தை உணர்ந்த மத்திய அரசு, இது குறித்து ஆய்வு செய்யவிருப்பதாகவும், தேவைப்பட்டால் மெட்டா நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்படும் என்றும் டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மெட்டாவுக்குச் சொந்தமான வாட்ஸ்அப், இந்த புதிய அம்சம் குறித்து என்ன சொல்கிறது?
"உங்கள் போன் நம்பரின் பிரைவசியைப் பாதுகாப்பதற்காகவே இது வடிவமைக்கப்பட்டுள்ளது" என்பதுதான் அவர்களின் பதில். தற்போதைய சிஸ்டத்தில், ஒருவரின் போன் நம்பர் கிடைத்துவிட்டால் யார் வேண்டுமானாலும் அவரைத் தொடர்புகொள்ள முடியும். ஆனால் இந்த புதிய யூசர்நேம் வசதி மூலம், உலகெங்கிலும் உள்ள 300 கோடிக்கும் அதிகமான பயனர்கள் தங்கள் போன் நம்பரைப் பகிராமலேயே ஒருவருக்கொருவர் தொடர்பில் இருக்கலாம் என்கிறது வாட்ஸ்அப். கேட்பதற்கு நன்றாகத்தான் இருக்கிறது, ஆனால் இதன் மறுபக்கம் கொஞ்சம் கலக்கமூட்டுகிறது.
இந்த யூசர்நேம் அப்டேட், ஆன்லைன் மோசடியாளர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்துவிடும் என்பதே பலரின் கவலை. இதற்கு உதாரணமாக, அதன் போட்டியாளரான டெலிகிராம் செயலியைப் பலரும் சுட்டிக்காட்டுகிறார்கள். KnotDating நிறுவனத்தின் சி.இ.ஓ. ஜஸ்வீர் சிங், X தளத்தில் இது குறித்து ஒரு முக்கியமான விஷயத்தைப் பகிர்ந்திருக்கிறார். "போன் எண்கள் ஒருவித பொறுப்புணர்வை உருவாக்கின. யார் நம்மைத் தொடர்புகொள்கிறார்கள் என்பது நமக்குத் தெரியும், புகார் அளிக்கவும் ஒரு எண் இருந்தது. யூசர்நேம்கள் பிரைவசியை மேம்படுத்தலாம், ஆனால் அவை பொறுப்புணர்வைக் குறைக்கின்றன - இதுதான் மோசடியாளர்களுக்குப் பிடித்தமான விஷயம்" என்கிறார் அவர்.
இன்னொரு X பயனர், இந்த அம்சம் சட்ட அமலாக்க முகமைகளின் விசாரணையை இன்னும் கடினமாக்கும் என்று எச்சரிக்கிறார். போன் எண்களுக்குப் பதிலாக யூசர்நேம்களை நம்பியிருக்கும் தளங்கள், சைபர் குற்றவாளிகள் தங்கள் அடையாளங்களை மறைப்பதை எளிதாக்குகின்றன என்பது அவரது வாதம். மே 3-ம் தேதி நடந்த நீட்-யுஜி மருத்துவ நுழைவுத் தேர்வு வினாத்தாள் கசிவு உள்ளிட்ட பல முதலீட்டு மோசடி விசாரணைகளில் டெலிகிராம் செயலி அடிக்கடி அடிபட்டதை அவர் உதாரணமாகக் குறிப்பிடுகிறார்.

ஒத்த - நெருக்கமான யூசர்நேம்களால் சிக்கல்!
தொழில்முனைவோரும், கன்டென்ட் கிரியேட்டருமான அங்குர் வாரிக்கூவின் எச்சரிக்கை இன்னும் ஒருபடி மேலே செல்கிறது. "இந்தியா போன்ற ஒரு நாட்டில், வாட்ஸ்அப் சரியான பாதுகாப்பு அமைப்புகளை உருவாக்கவில்லை என்றால், இது ஒரு பேரழிவாகவே மாறக்கூடும்" என்று அவர் அடித்துச் சொல்கிறார். மோசடியாளர்கள், பொதுவெளியில் பிரபலமானவர்களின் பெயர்களுக்கு நெருக்கமான யூசர்நேம்களை உருவாக்கி, அப்பாவி மக்களிடம் பணம் பறிக்கவோ அல்லது அவர்களை மோசடி குழுக்களில் சேர்க்கவோ வாய்ப்புள்ளது என்று அவர் விளக்குகிறார். உதாரணமாக, 'wariko' அல்லது 'awarikoo' போன்ற யூசர்நேம்களைப் பதிவு செய்து, தன்னைப் போலவே காட்டிக்கொண்டு மோசடியில் ஈடுபடலாம் என்கிறார். தனது அனுமதியின்றி, தனது உருவத்தை வைத்து உருவாக்கப்பட்ட AI ஸ்கேம் விளம்பரங்களுக்கு எதிராக மெட்டாவுடன் சட்டப் போராட்டம் நடத்திய அனுபவத்திலிருந்து அவரது இந்தக் கவலை எழுந்திருக்கிறது.
பேடிஎம் நிறுவனர் விஜய் சேகர் ஷர்மாவும் ஆள்மாறாட்டப் பிரச்னைகள் குறித்து சூசகமாகத் தெரிவித்துள்ளார். "விரைவில் வாட்ஸ்அப்பில் சரிபார்க்கப்பட்ட யூசர்நேம்கள் (verified usernames) வரும், பின்னர் அதைப்போலவே சரிபார்க்கப்படாத போலி யூசர்நேம்களும் வரும், அது எதில் போய் முடியும் என்றால்..." என்று அவர் பதிவிட்டுள்ளார்.
சரி, இந்த யூசர்நேம் சிஸ்டம் எப்படி வேலை செய்யும்?
பயனர்கள் தங்களுக்குப் பிடித்த, தனித்துவமான ஒரு யூசர்நேமைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். இது 3 முதல் 35 எழுத்துகள் வரை இருக்கலாம். உங்களை முதன்முறையாகத் தொடர்புகொள்பவருக்கு உங்கள் யூசர்நேம் தெரிந்திருக்க வேண்டும். அதன்பிறகு, யார் உங்களைத் தொடர்புகொள்ளலாம் என்பதைக் கட்டுப்படுத்த 'யூசர்நேம் கீ' (username key) என்ற ஒரு வசதியை செட் செய்துகொள்ளலாம்.

இந்த கீ இருந்தால் மட்டுமே முதன்முறை மெசேஜ்களை அனுப்ப முடியும். இந்த கீயை எப்போது வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளலாம். இந்த அம்சம் பயன்பாட்டிற்கு வந்த பிறகு, முதன்முறை உரையாடலின்போது உங்கள் போன் நம்பர் மற்றவருக்குத் தெரியாது. ஒருபக்கம் பிரைவசி என்ற பெயரில் ஒரு நல்ல விஷயத்தைக் கொண்டு வந்தாலும், மறுபக்கம் அதுவே பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறும் அபாயம் இருக்கிறது. இந்த இரண்டுக்கும் இடையில் வாட்ஸ்அப் எப்படி ஒரு சரியான பேலன்ஸை கொண்டு வரப் போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

















