'விஜய் புனித ஆட்சியைக் கொடுப்பார்' - செங்கோட்டையன் நம்பிக்கை
``புலிக்கு வாலாக இருக்கலாம் எலிக்கு தலையாக இருக்கக் கூடாது; எலி எந்தக் கட்சினு" - அதிமுக ஜெயக்குமார்
அதிமுக மூத்த தலைவரும், மறைந்த முதல்வர் ஜெயலலிதா அமைச்சரவையில் இருந்தவருமான செங்கோட்டையன் இந்த மாத தொடக்கத்தில் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கையால் அ.தி.மு.க-விலிருந்து நீக்கப்பட்டார். அவரைத்தொடர்ந்து அவரின் ஆதரவாளர்களும் சிலர் அ.தி.மு.க-விலிருந்து நீக்கப்பட்டனர்.
நீக்கப்பட்ட பிறகு மூன்று வாரங்களாக அமைதியாக இருந்த செங்கோட்டையன் நேற்று தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யை நேரில் சந்தித்து அக்கட்சியில் இணைந்தார்.
அதில் இணைந்த பிறகு ``இனி உயிர் மூச்சுள்ளவரை த.வெ.க-வுக்குப் பணியாற்றுவேன்" என்றும், ``மக்கள் சக்தியோடு 2026-ல் தமிழ்நாட்டின் முதல்வராக விஜய் அரியணையில் அமர்வார்" என்றும் செங்கோட்டையன் கூறி வருகிறார்.
இந்த நிலையில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், புலிக்கு வாலாக இருக்கலாம் ஆனால் எலிக்கு தலையாக இருக்கக்கூடாது என்று கூறியிருக்கிறார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த ஜெயக்குமார், செங்கோட்டையனைத் தொடர்ந்து தாங்களும் த.வெ.க-வில் இணையப்போவதாக இணையத்தில் பரவுவது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில், ``எனக்கு சிரிப்புதான் வருது. அண்ணன் செங்கோட்டையன் நான் பெரிதும் மதிக்கக்கூடியவர். அவர் ஒரு முடிவெடுத்து த.வெ.க-வில் சேர்ந்திருக்கிறார். எங்கிருந்தாலும் வாழ்க.
உடனே சமூக ஊடகங்கள்ல செங்கோட்டையனை அடுத்து ஜெயக்குமாரும் போறார்னு செய்தி. ஜெயக்குமாரைப் பொறுத்தவரையில் நேற்று இன்று நாளை ஒரே கட்சிதான்.
செத்தாலும்கூட என் உடல்மீது அ.தி.மு.க கொடியோடுதான் போவேன். யார் வீட்டு முன்னாடியும் காத்திருப்பவன் இந்த ஜெயக்குமார் கிடையாது.
பொதுவாகவே என்னுடைய மனநிலை, புலிக்கு வாலாக இருக்கலாம் ஆனா எலிக்கு தலையாக இருக்கக்கூடாது. புலி என்பது அ.தி.மு.க, எலி எந்தெந்த கட்சினு உங்க யூகத்துக்கே விட்டுட்றேன்.

அதனால, புலிக்கு வாலாக இருக்கிறததான் என் வாழ்நாள்ல பெருமையாய் நினைக்றேன். எலிக்கு தலையா இருந்து எந்த பிரயோஜனமும் கிடையாது. எனவே அது நடக்காத விஷயம்.
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா கண்டெடுத்த இயக்கத்தில் இருப்பதுதான் என் வாழ்நாள் பெருமை.
சபாநாயகர் அரியாசனம், அதுக்கப்றம் நிதியமைச்சர்னு 15-க்கும் மேற்பட்ட துறைகள், கட்சியில் தலைமை நிலைய செயலாளர், 3 முறை மாவட்ட செயலாளர், மீனவர் பிரிவு செயலாளர்னு இதெல்லாம் எவ்வளவு பெரிய பெருமைகள்.
இந்தப் பெருமையோடு வாழ்நாள் முழுவதும் புரட்சித் தலைவர், புரட்சித் தலைவி புகழ் பாடும் வானம்பாடியாகத்தான் இருப்பேன். யார் வீட்டு கதவையும் தட்டுற ஆள் இந்த ஜெயக்குமார் கிடையாது" என்று கூறினார்.












