டைனோசர்களுக்கே சவால் விட்ட 'கடல் ராஜா'- உலகத்தையே அதிரவைத்த 11 வயது சிறுமியின் க...
தொகுதி மாறி மம்தாவுக்கு `குறி'; எதிர்த்து களமிறங்கும் சுவேந்து அதிகாரி - பரபர மே.வங்க தேர்தல் களம்!
மேற்கு வங்க சட்டமன்றத்திற்கு இரண்டு கட்டமாக தேர்தல் நடக்கவிருக்கிறது. கடந்த முறை 4 கட்டங்களாக தேர்தல் நடந்த நிலையில், இப்போது ஏப்ரல் 23 மற்றும் 29 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடக்கிறது. இத்தேர்தலுக்கு பா.ஜ.க தனது முதல் வேட்பாளர் பட்டியலை அறிவித்து இருக்கிறது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி, பா.ஜ.க-வில் சேர்ந்த சுவேந்து அதிகாரி முதல்வர் மம்தா பானர்ஜியின் பாபானிபூர் தொகுதியில் போட்டியிடுகிறார். இது தவிர நந்திகிராம் தொகுதியிலும் சுவேந்து அதிகாரி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
2021ம் ஆண்டு நடந்த மேற்கு வங்க சட்டசபைத் தேர்தலில் மம்தா பானர்ஜி பாபானிபூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அத்தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் தலைமைக்கு அதன் சொந்த மண்ணில் சவால் விடும் நோக்கில் அதிகாரியை அங்கு பாஜ.க வேட்பாளராக அறிவித்து இருக்கிறது.

அதேசமயம் கடந்த முறை நடந்த தேர்தலில் நந்திகிராம் சட்டமன்றத் தொகுதியில் சுவேந்து அதிகாரி முதல்வர் மம்தா பானர்ஜியை தோற்கடித்து அதிர்ச்சி கொடுத்தார்.
இப்போது பாபானிபூர் தொகுதியில் மம்தா பானர்ஜியை எதிர்த்து சுவேந்து அதிகாரி போட்டியிடுகிறார். இது மம்தா பானர்ஜிக்கு நெருக்கடியை கொடுத்து இருக்கிறது. இதனால் இம்முறையும் மம்தா பானர்ஜி இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. பாஜக-வின் 144 வேட்பாளர்கள் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் ராஷ்பெஹாரி தொகுதியில் முன்னாள் ராஜ்ய சபா எம்.பி ஸ்வபன் தாஸ்குப்தா போட்டியிடுகிறார்.
கலிகஞ்சில் இருந்து பாபன் கோஷ், டயமண்ட் ஹார்பரில் இருந்து தீபக் குமார் ஹல்டர், அசன்சோல் தக்ஷினில் இருந்து அக்னிமித்ரா பால், அசன்சோல் உத்தரில் கிருஷ்ணேர்ஜேந்துவும், ஹன்சனில் நிகில் பானர்ஜியும், கூச்பெஹார் உத்தரில் சுகுமார் ராய் மற்றும் சிலிகுரியில் சங்கர் கோஷ் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
முன்னதாக வேட்பாளர் பட்டியல் தொடர்பாக பிரதமர் இல்லத்தில் சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் ஜே.பி.நட்டா, மேற்கு வங்க கட்சியின் தேர்தல் பொறுப்பாளர் பிப்லப் தேப் மற்றும் வங்காள பாஜக தலைவர் சாமிக் பட்டாச்சார்யா, எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி, மாநில பாஜக முன்னாள் தலைவர் சுகந்தா மஜூம்தார் உள்ளிட்ட மாநிலப் பிரிவைச் சேர்ந்த பல மூத்த தலைவர்கள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் மத்திய அமைச்சர் சாந்தனு தாக்கூர், பாஜக எம்பி மனோஜ் திக்கா ஆகியோர் கலந்து கொண்டனர்.














