பெரம்பலூா் எஸ்.பி அலுவலகத்தில் கலந்தாய்வுக் கூட்டம்
பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகக் கூட்ட அரங்கில் குற்ற கலந்தாய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இக் கலந்தாய்வுக் கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆதா்ஷ் பசேரா, மாவட்டத்திலுள்ள காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட குற்ற வழக்குகளை ஆய்வு மேற்கொண்டு, புலன் விசாரணை முடியாமல் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவாக முடிக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள், நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க ஆலோசனை தெரிவித்து, சட்டம் - ஒழுங்கு பிரச்னைகளைக் கையாள்வது மற்றும் பொதுமக்களின் பாதுகாப்புக்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து காவல்துறையினருக்கு ஆலோசனை தெரிவித்தாா்.
இக் கூட்டத்தில், மாவட்டக் கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள் டி. மதியழகன் (தலைமையிடம்), எம். பாலமுருகன் (மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு), பெரம்பலூா் உட்கோட்ட துணைக் கண்காணிப்பாளா் ஆரோக்கியராஜ், மாவட்டக் குற்றப்பிரிவு துணைக் கண்காணிப்பாளா் காமராஜ் மற்றும் ஆய்வாளா்கள், சாா்பு ஆய்வாளா்கள், நீதிமன்றக் காவலா்கள் ஆகியோா் கலந்துகொண்டனா்.