"அந்தச் சமயத்திலிருந்து அப்பாவின் படங்களைப் பார்ப்பதையே நிறுத்திவிட்டேன்" - சூர்...
பெரியார் புலிகள் காப்பகத்தில் ட்ரோன்; தமிழகக் குழுவால் சர்ச்சை! - கேரள வனத்துறை எடுத்த முடிவு
விவசாயத் தேவைகளுக்காக முல்லைப் பெரியார் அணையின் மதகுகளைத் தமிழ்நாடு அரசு கடந்த 8-ம் தேதி திறந்தது. இதனையொட்டி, தமிழக மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகளின் முன்னிலையில் சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டன. அப்போது, அக்குழுவுடன் வந்தவர்கள் பெரியார் புலிகள் காப்பகப் பகுதிக்குட்பட்ட முல்லைப்பெரியார் கால்வாய் மற்றும் வனப்பகுதியை அனுமதி இன்றி ட்ரோன் மூலம் வீடியோ எடுத்துள்ளனர். மேலும், அந்த வீடியோவை சமூக வலைத்தளங்களிலும் பதிவேற்றம் செய்துள்ளனர்.
பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியான பெரியார் புலிகள் காப்பகத்தினுள் ட்ரோன்களைப் பறக்கவிடுவதற்கும், காட்சிகளைப் படம்பிடிப்பதற்கும் கடுமையான தடை அமலில் உள்ளது. அதே சமயம் பெரியகுளம் தொகுதி எம்.எல்.ஏ சபரி ஐங்கரன், கம்பம் தொகுதி எம்.எல்.ஏ ஜெகன்னாத் மிஸ்ரா மற்றும் தமிழகப் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆகியோர் அடங்கிய குழுவினருடன் வந்தவர்கள் ட்ரோன் பறக்கவிட்டு வீடியோ எடுத்து அதை வெளியிட்ட சம்பவம் விவாதத்தை ஏற்படுத்தியது.
இதையடுத்து ட்ரோன் மூலம் எடுக்கப்பட்ட வீடியோக்கள் சமூக வலைத்தள பக்கங்களில் இருந்து நீக்கப்பட்டன.

உயர் பாதுகாப்பு மண்டலமான பெரியார் புலிகள் காப்பகத்தில் வனத்துறை மற்றும் காவல் துறை அனுமதி இன்றி ட்ரோன் பறக்கவிட்டு வீடியோ எடுக்கப்பட்ட விவகாரத்தில் கேரள அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அம்மாநிலத்தைச் சேர்ந்த சிலர் வலியுறுத்தினர். அதிலும் மக்கள் பிரதிநிதியே ட்ரோன் வீடியோவை தனது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்திருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

அதேசமயம் விதிமீறல் நடந்தபோதிலும், தமிழ்நாடு - கேரளா இடையேயான மாநில உறவுகளைப் பாதிக்கும் என்பதால் இச்சம்பவம் தொடர்பாக வழக்கு எதுவும் பதிவு செய்ய வேண்டாம் என கேரள வனத்துறை முடிவெடுத்துள்ளது. இனிவரும் காலங்களில் உரிய முன் அனுமதி பெறாமல் புலிகள் காப்பகப் பகுதியில் ட்ரோன்களைப் பயன்படுத்தக் கூடாது எனத் தமிழகப் பொதுப்பணித்துறைக்கும் நீர்வளத் துறைக்கும் கேரள வனத்துறை அதிகாரப்பூர்வ அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.















