தவெக: ஆளுநருக்கு எதிராகவும், பாஜக-வுக்கு எதிராகவும் போராட்டம்! - தமிழ்நாடு காங்க...
பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாள் அவகாசமா, 24 மணிநேர அவகாசமா? - அன்று எடியூரப்பாவுக்கு நடந்தது என்ன?
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளின்படி, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.
சிக்கலில் தவெக..!
ஆனால் 118 இடங்கள் இருந்தால் மட்டுமே பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க முடியும். இந்நிலையில் தான் திமுக கூட்டணியில் இருந்து விலகி 5 இடங்களை வென்ற காங்கிரஸ் த.வெ.கவிற்கு ஆதரவு அளித்திருக்கிறது.
இன்னும் ஆறு இடங்கள் தேவை என்பதால் த.வெ.க சிக்கலில் தவித்து வருகிறது. விடுதலை சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் த.வெ.க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகி வருகின்றன.
பந்தாடும் ஆளுநர்
இதனிடையே த.வெ.க தலைவர் விஜய் நேற்று (மே. 6) ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரியிருந்தார்.
பெரும்பான்மைக்குத் தேவையான எண்ணிக்கையோடு வாருங்கள் என ஆளுநர் அனுப்பி வைத்த நிலையில் த.வெ.க தலைவர் விஜய்யின் பதவியேற்பு விழா ரத்தானது.
இன்று கேரளா செல்லவிருந்த ஆளுநரை விஜய் மீண்டும் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரியிருக்கிறார். ஆட்சியமைத்துவிட்டு சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்போம் என த.வெ.க விஜய் தரப்பு ஆளுநரிடம் முறையிட்டதாகக் கூறப்படுகிறது.
15 நாள் கால அவகாசம் வழங்கப்படுமா?
ஒருவேளை ஆளுநர் அழைப்பு விடுத்தால், ஓரிரு நாட்களில் விஜய் முதல்வராகப் பதவியேற்க வாய்ப்புள்ளது. பதவியேற்புக்குப் பிறகு, சட்டசபையில் தனது பெரும்பான்மையை நிரூபிப்பது விஜய்க்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும்.
பொதுவாக ஆளுநர் தரப்பில் பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாட்கள் வரை அவகாசம் வழங்கப்படுவது வழக்கம். இந்த நீண்ட கால அவகாசம் கிடைத்தால், அதற்குள் மற்ற கட்சிகளின் ஆதரவைத் திரட்டி ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்று த.வெ.க தரப்பு நம்புகிறது.
இருப்பினும், இந்த 15 நாள் கால அவகாசம் வழங்கப்படுமா? என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. ஏனெனில், பெரும்பான்மை இல்லாத ஒரு கட்சிக்கு நீண்ட கால அவகாசம் வழங்குவது 'குதிரை பேரத்திற்கு' (எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்குதல்) வழிவகுக்கும் என எதிர்க்கட்சிகள் நீதிமன்றத்தை அணுக வாய்ப்பு உள்ளது.
அதனால் கர்நாடகாவில் எடியூரப்பா விவகாரத்தை மேற்கோள் காட்டும் சிலர், விஜய்க்குப் பெரும்பான்மையை நிரூபிக்க ஒரு நாள் மட்டுமே கால அவகாசம் வழங்கப்படும் என்கிறார்கள்.
கர்நாடக எடியூரப்பா விவகாரம் மற்றும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு
2018 ஆம் ஆண்டு நடந்த கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் எடியூரப்பா 104 இடங்களில் வெற்றி பெற்றிருந்தார். ஆனால் பெரும்பான்மைக்கு 8 இடங்கள் குறைவாக இருந்தது.
ஆளுநர் எடியூரப்பாவை ஆட்சி அமைக்க அழைத்து, பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாட்கள் கால அவகாசம் வழங்கினார். ஆனால், காங்கிரஸ்-ஜேடிஎஸ் கூட்டணி இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அவசர மனுத் தாக்கல் செய்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி ஏ.கே. சிக்ரி தலைமையிலான அமர்வு, ஜனநாயகப் படுகொலையைத் தவிர்க்கவும் குதிரை பேரத்தைத் தடுக்கவும் உடனடியாகப் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட்டது. இதனால் 15 நாள் அவகாசம் வெறும் 24 மணிநேரமாகக் குறைக்கப்பட்டது.

விஜய்க்கு ஏற்படும் அரசியல் நெருக்கடி
விஜய் பெரும்பான்மையை நிரூபிக்கும் விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட்டு 24 மணி நேரத்திற்குள் பெரும்பான்மையை நிரூபிக்கச் சொன்னால், குறுகிய காலத்தில் ஆதரவைத் திரட்ட வேண்டி வரும்.















