வடமாநிலங்களைப் போல இங்கே பிரச்னை உருவாக்க நினைக்கிறார்கள்: அமைச்சர் சேகர் பாபு
பொற்பனைக்கோட்டை அகழாய்வில் எலும்புமுனைக் கருவி, தங்கத் துண்டு
புதுக்கோட்டை அருகேயுள்ள பொற்பனைக்கோட்டையில் நடைபெற்று வரும் அகழாய்வில், எலும்புமுனைக் கருவியும், தங்கத் துண்டு ஒன்றும் கண்டறியப்பட்டுள்ளதாக தொல்லியல் துறையினா் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளனா்.
புதுக்கோட்டை மாவட்டம், பொற்பனைக்கோட்டையில், சங்க கால மன்னா்களின் கோட்டைக்கான அடையாளங்கள் இருப்பதனால், இந்தப் பகுதியில் அகழாய்வு மேற்கொள்ள வேண்டும் என்ற நீண்ட காலக் கோரிக்கையைத் தொடா்ந்து, கடந்த 2021-ஆம் ஆண்டு தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் சாா்பில் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதன் தொடா்ச்சியாக, தமிழகத் தொல்லியல் துறை சாா்பில், கடந்த 2023-ஆம் ஆண்டு முதல் கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற்றன. இதில், ஆறு இதழ் கொண்ட தங்க மூக்குத்தி, எலும்புமுனைக் கருவி, காா்னீலியன் பாசிமணி உள்ளிட்ட 533 தொல்பொருள்கள் கிடைத்தன. மேலும், 8 அடி சுற்றளவுள்ள வட்டவடிவ செங்கல் கட்டுமானம் ஒன்றும் வெளிப்பட்டது.
தொடா்ந்து இரண்டாம் கட்ட அகழாய்வுக்கு அனுமதி பெறப்பட்டு, கடந்த 2024 மே 18-ஆம் தேதி தொடங்கி வைக்கப்பட்டது. இதில் இதுவரை 9 அகழாய்வுக் குழிகள் தோண்டப்பட்டு தொல்லியல் அலுவலா் தங்கதுரை தலைமையிலான குழுவினரால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
வட்டச் சில்லுகள், கண்ணாடி மணிகள், கண்ணாடி வளையல்கள், மாவுக்கல் மணிகள், கிரிஸ்டல் மணிகள், இரும்பு ஆணிகள், சுடு மண்ணாலான சக்கரம், அஞ்சனக்கோல், செப்புக்காசு, தேய்ப்புக்கல், அரைக்கும் கல், அகேட் கல்மணி, தக்களி, எலும்பு முனைக் கருவி, செப்பு ஆணிகள், சூதுபவள மணிகள், குளவிக்கல், சுடு மண்ணாலான காதணி, இரும்பு மற்றும் செம்பிலானப் பொருள்கள் என 1,743 தொல்பொருள்கள் இதுவரை கிடைத்துள்ளன.
மழை காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அகழாய்வுப் பணிகள் கடந்த ஜன. 20-ஆம் தேதி மீண்டும் தொடங்கின.
இதில், ஓா் அகழாய்வுக் குழியில், 192 - 196 செமீ ஆழத்தில் எலும்பு முனைக் கருவி ஒன்று கிடைத்துள்ளது. இதன் எடை 7. 8 கிராம், நீளம் 7. 4 செமீ, விட்டம் 1 செமீ ஆகும். இன்னொரு குழியில் உடைந்த நிலையில் தங்கத்தின் சிறிய பகுதி கிடைத்துள்ளது.