CJP Protest: `2 கோரிக்கைகள் ஏற்பு; நாளையும் தொடரும் பேச்சுவார்த்தை!' - ஜே.பி.நட்...
`மாணவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுப்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி'- ஆசிரியராக மாறிய ஓய்வுபெற்ற IPS
பொதுவாக அரசு அதிகாரிகள் பணியில் இருந்து ஓய்வுபெற்ற பிறகு, அமைதியான வாழ்க்கையைத் தேர்ந்தெடுப்பார்கள். ஆனால், தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகளின் முன்னாள் டி.ஜி.பி சீமா அகர்வால் ஐ.பி.எஸ், ஓய்வை ஓரமாக வைத்து, அடுத்த தலைமுறையை உருவாக்கும் ஆசிரியர் பணியைத் தனது வாழ்க்கையின் புதிய அத்தியாயமாக மாற்றியிருக்கிறார். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக பாடம் நடத்தி வரும் அவரது இந்த முயற்சி, பலருக்கும் ஊக்கமளிப்பதாக உள்ளது.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பாடம் நடத்தத் தொடங்கியுள்ள சீமா அகர்வாலிடம் இது குறித்து பேசினோம்.
“ஓய்வுபெற்ற பிறகு வீட்டில் அமைதியாக இருப்பதை நான் விரும்பவில்லை. சமூகத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் எப்போதும் இருந்தது. பல சிரமங்களுக்கும் பொருளாதாரக் குறைகளுக்கும் மத்தியில்தான் பல பெற்றோர் தங்களது குழந்தைகளை அரசுப் பள்ளிகளுக்கு அனுப்புகின்றனர்.

அந்தக் குழந்தைகளின் பெற்றோரில் பலரால் வீட்டில் அமர்ந்து பாடம் சொல்லிக் கொடுக்க முடியாத சூழல் உள்ளது. குறிப்பாக மிகவும் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு அடிப்படைக் கல்வியை வலுப்படுத்த வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம்.
அதனால்தான் தற்போது அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அடிப்படை ஆங்கிலம், கணிதம் போன்ற பாடங்களை கற்பித்து வருகிறேன். உண்மையில், இந்தப் பணி எனக்கு ஓய்வை விட அதிகமான மனநிறைவையும் மகிழ்ச்சியையும் தருகிறது. மாணவர்கள் ஒவ்வொரு விஷயத்தையும் ஆர்வமாகக் கேட்டு கற்றுக்கொள்வதைப் பார்க்கும்போது, நான் செய்த இந்தத் தேர்வு சரியானது என்ற திருப்தி ஏற்படுகிறது” என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.
பணியில் இருந்த காலத்திலேயே, ஆயிரம் விளக்கு பகுதிக்குட்பட்ட சில அரசுப் பள்ளிகளுக்கு நேரில் சென்று மாணவர்களுக்குப் பாடம் எடுத்த அனுபவமும் இவருக்கு உள்ளது. தற்போது சென்னை தேனாம்பேட்டையில் உள்ள சென்னை மாநகராட்சிப் பள்ளி மாணவர்களுக்குத் தொடர்ந்து பாடம் நடத்தி வருகிறார்.
1990-ம் ஆண்டு பேட்சைச் சேர்ந்த ஐ.பி.எஸ் அதிகாரியான சீமா அகர்வால், தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகளின் டி.ஜி.பி-யாகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். ஓய்வுக்குப் பிறகும் சமூகப் பொறுப்பைக் கைவிடாமல் கல்வி மூலம் மாணவர்களின் எதிர்காலத்தை ஒளிரச் செய்யும் பணியில் ஈடுபட்டிருப்பது, பலரின் பாராட்டைப் பெற்று வருகிறது.















