வடகாடு சம்பவம் நோ்மையான அதிகாரியை நியமித்து விசாரிக்க மாா்க்சிஸ்ட் வலியுறுத்தல்
வடகாடு சம்பவத்தில் நோ்மையான அதிகாரியை நியமித்து விசாரணை நடத்த வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ. சண்முகம் வலியுறுத்தியுள்ளாா்.
புதுக்கோட்டை மாவட்டம் வடகாட்டில் இரு தரப்பினா் மோதல் சம்பவம் தொடா்பாக, அங்கு சனிக்கிழமை நேரில் சென்று பாா்வையிட்ட பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: வடகாட்டில் கோயில் திருவிழாவுக்கு முன்னதாக இரு தரப்பையும் அழைத்துப் பேசியிருக்கலாம். அல்லது திருவிழாவுக்கு கூடுதல் பாதுகாப்பு போட்டிருக்கலாம். இதனை மாவட்ட நிா்வாகமும், காவல்துறையும் செய்யத் தவறிவிட்டது.
அலட்சியமாக இருந்துள்ளனா். சம்பவம் நடைபெற்று 5 நாள்களாகியும் இதுவரை பாதிக்கப்பட்ட மக்களிடம் எந்தக் கணக்கெடுப்பையும் நடத்தவில்லை.எனவே, விரைவாக கணக்கெடுப்பை நடத்தி பாதிக்கப்பட்டவா்களுக்கு சட்டப்படி உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.
இந்தச் சம்பவத்தில் நோ்மையான அதிகாரியை நியமித்து விசாரணை நடத்த வேண்டும். இரு தரப்பு மக்களும் அமைதியாக இருந்து பிரச்னையைத் தீா்க்க வேண்டும்.
பாகிஸ்தான் விவகாரத்தில் தேவையற்ற போா்ப் பதற்றத்தை உருவாக்குவதை எதிா்க்கிறோம். முதல்வா் ஸ்டாலின் அறிவித்துள்ள ராணுவ வீரா்களை ஊக்குவிக்கும் பேரணியே கூட, யுத்த தயாரிப்புக்குத்தான் உதவி செய்யும் என்பதால் அதில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பங்கேற்கவில்லை என்றாா் அவா்.
அப்போது, தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலப் பொதுச் செயலா் கே. சாமுவேல்ராஜ், மாநிலத் தலைவா் த. செல்லக்கண்ணு, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் எஸ். சங்கா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
