விஐடி துணை தலைவர் சங்கர் விசுவநாதனுக்கு `கவுரவ டாக்டர்' பட்டம்! - வழங்கியது தாய்...
`விதிமுறைகளை மீறிய தவெக-வினர்; குற்றச்சாட்டு உண்மைக்குப் புறம்பானது!’ - வேலூர் மாவட்டக் காவல்துறை
வேலூர் அகரம்சேரியில், த.வெ.க நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டம் நேற்று நடைபெற்றது. த.வெ.க தலைவர் விஜய் பங்கேற்று முப்பத்தைந்து நிமிடங்கள் பேசினார். அதற்கு முன்னதாக, காவல்துறையினர் அனுமதி கொடுப்பதில் காலதாமதம் ஏற்படுத்தியதாக த.வெ.க பொறுப்பாளர்கள் பத்திரிகையாளர் சந்திப்பின்போது குற்றம்சாட்டியிருந்தனர்.
இந்த நிலையில், த.வெ.க-வினர் குற்றச்சாட்டுக்கு விளக்கமளிக்கும் விதமாக வேலூர் மாவட்டக் காவல்துறை பத்திரிகைச் செய்தி ஒன்றை வெளியிட்டிருக்கிறது.

அதில், ``த.வெ.க நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு ஐந்து நாள்களுக்கு முன்பாக மனு அளித்தபோதிலும், பொதுமக்களின் பாதுகாப்பினைக் கருத்தில் கொண்டு நிகழ்ச்சி நடைபெறும் இடத்தினை கள ஆய்வு செய்தும், வாகன நிறுத்துமிடங்களை பரிசீலனை செய்தும் 22-2-2026-ம் தேதி காவல்துறை சார்பில் அனுமதிக்கான செயல்முறை ஆணை அளிக்கப்பட்டது. காவல்துறை அனுமதி வழங்கியதில் எவ்வித காலதாமதமும் செய்யாமல், மனு அளிக்கப்பட்ட நான்கு நாள்களிலேயே உரிய அனுமதியும் வழங்கப்பட்டது.
த.வெ.க கட்சி நிர்வாகிகள் பத்திரிகையாளர் சந்திப்பின்போது, `காவல்துறையினரிடம் அனுமதி பெற கடந்த ஒன்றரை மாதமாக போராடியதாகவும், நிகழ்ச்சி நடைபெறுவதற்கு 20 மணி நேரத்துக்கு முன்பாகத்தான் காவல்துறையினரால் அனுமதி வழங்கப்பட்டது’ எனக் கூறியது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது.
மேலும், த.வெ.க கட்சியினர் அளித்த மனுவில் கோரப்பட்டபடி 4,900 கட்சி நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு மட்டுமே அனுமதி அளித்து செயல்முறை ஆணை வழங்கப்பட்டது.

ஆனால், குறிப்பிடப்பட்ட எண்ணிக்கைக்கு மேலாக குறைந்தபட்சம் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டதாக தெரியவருகிறது. இச்செயலானது உயர் நீதிமன்றத்தின் அறிவுறுத்தல்கள் மற்றும் தமிழக அரசால் வெளியிடப்பட்ட அரசாணை எண்.05-ல் நிகழ்ச்சி நடத்துவதற்கு அறிவுறுத்தியுள்ள விதிமுறைகளை மீறியதாகும். எனினும், காவல்துறையினரால் எவ்வித அசம்பாவிதமும் ஏற்படா வண்ணம் உரிய ஏற்பாடுகள் செய்து பாதுகாப்பு வழங்கப்பட்டது’’ எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
















