'தவெக எம்.எல்.ஏ சொன்ன வார்த்தை; அடிக்க பாய்ந்த திமுக எம்.எல்.ஏக்கள்?' - அவையில் ...
வேலூர்: மோர்தானா அணையில் 9 நாள்களுக்கு நீர்த் திறப்பு; 2,510 ஏக்கர் நிலம் பாசனம் பெற வாய்ப்பு!
வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகேயுள்ள மோர்தானா கிராமத்தில் கௌண்டன்யா ஆற்றின் குறுக்கே `மோர்தானா அணை’ அமைந்திருக்கிறது. இந்த அணை 261.36 மில்லியன் கனஅடி கொண்டது. இதில் நேற்றைய நிலவரப்படி, பயன்படுத்தக்கூடிய நீரின் அளவு 174.96 மில்லியன் கன அடி.
இந்த நிலையில், மோர்தானா அணையில் இருந்து பாசன வசதிக்காகவும், நிலத்தடி நீர்மட்டம் உயர்வதற்காகவும் அரசாணை பிறக்கப்பட்டதையடுத்து, நேற்றிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. அதாவது, பொதுக்கால்வாய் வழியாக கௌண்டன்யா ஆற்றில் விநாடிக்கு 75 கனஅடி வீதம் தண்ணீரும், இடதுபுற மற்றும் வலதுபுற பிரதான கால்வாய்களில் தலா 75 கனஅடி வீதமும் தண்ணீர் திறக்கப்படுகிறது. ஆக மொத்தம், விநாடிக்கு 225 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.

செப்டம்பர் 1-ம் தேதி வரை தொடர்ந்து 9 நாள்களுக்குத் திறக்கப்படும் நீரின் மூலம் 9 ஏரிகள் பயன்பெற்று சுமார் 2,510 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெற வாய்ப்புள்ளது.
மேலும், மோர்தானா, கொட்டாரமடுகு, ஜிட்டப்பள்ளி, சேம்பள்ளி, ரங்கசமுத்திரம், மீனூர், தட்டப்பாறை, ஆண்டிகான்பட்டி, அக்ராவரம், மூங்கப்பட்டு, பெரும்பாடி, எர்த்தாங்கல், லிங்குன்றம், செருவங்கி மற்றும் குடியாத்தம் நகரம் ஆகிய 15 கிராமங்களில் 408 ஆழ்துளை கிணறுகள் மற்றும் 1,867 திறந்தவெளி விவசாய கிணறுகளின் நிலத்தடி நீர்மட்டம் உயர வாய்ப்புள்ளது.




















