திருவண்ணாமலை: அதிகாலை ஏற்றிய பரணி தீபம்; மாலை மலை உச்சியில் மகாதீபம்!
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஆண்டாள் கோயிலில் கைசிக ஏகாதசி சிறப்பு வைபவம்; தமிழக, கேரள பக்தர்கள் தரிசனம்
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் 108 வைணவ திவ்ய தேசங்களில் மிகவும் சிறப்புப் பெற்ற திருத்தலமாகும். இது பழமையானதும், ஆழ்வார்களுள் பெரியாழ்வார் மற்றும் ஆண்டாள் அவதரித்த திருத்தலமும் ஆகும். தமிழக அரசின் அரசு சின்னமாக இக்கோயிலின் கோபுரம் விளங்குவது இதன் சிறப்பை எடுத்துரைக்கிறது.

கைசிக ஏகாதசியின் புராண வரலாறு:
கைசிக ஏகாதசி, கார்த்திகை மாத வளர்பிறை ஏகாதசி அன்று வரும். பாணர் குலத்தைச் சேர்ந்த நம்பாடுவார் என்ற பக்தர் திருநெல்வேலி மாவட்டம் திருக்குறுங்குடி கோயிலில் குடிகொண்டுள்ள நம்பிப்பெருமாளை கைசிகப் பண் இசையில் பாடியதால் இந்த ஏகாதசியை கைசிக ஏகாதசி என்று அழைக்கிறார்கள்.
நம்பாடுவார் தனது பெருமாள் பக்தியின் காரணமாக, தன்னை உண்ண வந்த பிரம்ம ராட்சஸனிடம் ஒரு வாய்ப்பு கேட்டு, பெருமாளைப் பாடிவிட்டு வந்து தன்னை உணவாகக் கொள்ளுமாறு கூறினார். பெருமாளைப் பாடி வந்த நம்பாடுவார், கைசிகப் பண்ணின் புண்ணிய பலத்தைத் தந்து பிரம்ம ராட்சஸனின் சாபத்தை நீக்கினார் இதுதான் கைசிக ஏகாதசியின் புராண வரலாறு.
108 போர்வை சாற்றும் வைபவத்தின் சிறப்பு:
இங்கு ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் சுக்ல பட்ச ஏகாதசி அன்று நம்பாடுவான் என்ற பக்தனுக்குப் பெருமாள் அருள் செய்ததை முன்னிட்டும், குளிர் காலம் வருவதால் அதனைப் பக்தர்களுக்கு அறிவிக்கும் வண்ணமும் இங்கு கோயில் கொண்டு அருள் பாலிக்கும் சுவாமிகளுக்கு 108 போர்வைகள் சாற்றப்படும் வைபவம் சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

அதுபோல் இந்த ஆண்டு இவ்வைபவம் இன்று அதிகாலை சிறப்பாக நடைபெற்றது. இந்த வைபவத்தின்போது இன்று ஒரு நாள் மட்டுமே கருடாழ்வார் தமது கருட சன்னதியிலிருந்து புறப்பட்டு பகல் பத்து மண்டபத்தில் எழுந்தருளுவார். இது வருடத்தில் ஒரே ஒரு நாள் மட்டும் நடைபெறும் அரிய காட்சியாகும்.
யாருக்கெல்லாம் போர்வை சாற்றப்படுகிறது:
இங்கு ஆண்டாள், ரங்கமன்னார், பெரிய பெருமாள், ஸ்ரீதேவி, பூமிதேவி, ஆழ்வார்கள், ஆச்சாரியர்கள் ஆகிய அனைவருக்கும் 108 போர்வைகள் சாற்றும் வைபவம் சிறப்பாக நடைபெற்றது.
ஒவ்வொரு திவ்ய தேசத்தையும் குறிக்கும் வகையில் 108 போர்வைகள் சாற்றப்படுவது குறிப்பிடத்தக்கது. இதனை முன்னிட்டுச் சிறப்புப் பூஜைகள் மற்றும் அபிஷேகங்கள் நடைபெற்றன.

அதிகாலையில் கைசிக புராணம் விரிவாக வாசிக்கப்பட்டது. கார்த்திகை மாதத்தில் சுக்லபட்சத்தில் வரும் கைசிக ஏகாதசி அன்று உப்பில்லாமல் விரதம் கடைப்பிடித்தால் 108 ஏகாதசிகள் கடைப்பிடித்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.
அதிகாலை வேளையிலேயே விருதுநகர், சிவகாசி, ராஜபாளையம், சாத்தூர், அருப்புக்கோட்டை, திருநெல்வேலி, கோவில்பட்டி மற்றும் கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து இந்த சிறப்பு வைபவத்தைத் தரிசனம் செய்தனர்.













