தேன் சுடரே: ''அந்த வார்த்தைக்குப் பெரிய பஞ்சாயத்தாச்சு" - பாடலாசிரியர் மோகன் ராஜ...
58 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த ஜோதிடரை, கடவுளுடன் ஒப்பிட்ட பெண்கள் கமிஷன் தலைவி! பகீர் பின்னணி
மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் அசோக் கராட் என்பவர் தன்னிடம் ஜோதிடம் கேட்க வரும் பெண்களின் குறைகளை நிவர்த்தி செய்வதாகவும், மிரட்டியும் பாலியல் வன்கொடுமை செய்ததாக கைது செய்யப்பட்டார்.
தன்னை ஓய்வு பெற்ற கப்பல் அதிகாரி என்று கூறிக் கொண்டு, கேப்டன் என்ற அடையாளத்துடன் அப்பகுதியில் செயல்பட்டு வந்தார். ஆன்மீக நடைமுறைகள் என்ற போர்வையில் பெண்களை உணர்ச்சிப்பூர்வமாக மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து வந்தார். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் அசோக் கராட்டை இரண்டு நாட்களுக்கு முன்பு கைது செய்தனர்.
அப்பென் கொடுத்துள்ள வாக்குமூலத்தில், கராட் தனது கணவரின் உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறி, மயக்க மருந்து கலந்த பானங்களை கொடுத்து 2022 முதல் டிசம்பர் 2025 வரை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் என்று தெரிவித்திருந்தார். அசோக் கராட்டிற்கு அரசியல் தலைவர்கள் மத்தியிலும், முக்கிய பிரமுகர்கள் மத்தியிலும் நல்ல செல்வாக்கு இருக்கிறது.

குறிப்பாக தேசியவாத காங்கிரஸ் மாநில மகளிர் அணித்தலைவரும், மகாராஷ்டிரா பெண்கள் கமிஷன் தலைவருமான ரூபாலி சாகங்கருக்கு ஜோதிடருடன் நெருங்கிய தொடர்பு இருப்பதாக சிவசேனா(உத்தவ்) குற்றம் சாட்டி இருந்தது.
இது தொடர்பாக சிவசேனா(உத்தவ்) நிர்வாகி சுஷ்மா அந்தாரே மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தோம்ப்ரே ஆகியோர் அளித்திருந்த பேட்டியில், சாகங்கர் கைதான ஜோதிடர் கராத்துடன் இணைந்து பில்லி சூனியம் போன்ற செயல்களில் ஈடுபட்டதாகவும், பாதிக்கப்பட்ட பெண்களை மிரட்டியதாகவும் குற்றம் சாட்டினர்.
கராட் தலைமையிலான கோயில் அறக்கட்டளையில் உறுப்பினராக சாகங்கர் இருந்துள்ளார். கராட் கைதை தொடர்ந்து, கராட்டின் கால்களைக் கழுவுவது போன்றும், கராட் சாகங்கருக்கு உணவளிப்பது போன்றும், சூரிய ஒளியில் இருந்து காப்பாற்ற கராடிற்கு குடையைப் பிடித்துக் போன்ற புகைப்படங்கள் சமூக வலைத்தள பக்கத்தில் வைரலானது. மேலும் ஒரு காணொளியில் கராடை விட்டல் பகவானுடன் ஒப்பிட்டு பேசி இருந்தார்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு நள்ளிரவில் போன்
இது குறித்து சுஷ்மா அந்தாரே கூறுகையில்,''ஜோதிடரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பல பெண்களை சாகங்கர் மிரட்டியதாகப் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் என்னிடம் கூறினார். அதோடு புகார் அளிக்க வேண்டாம் என்று கூறி பாதிக்கப்பட்டவர்களுக்கு நள்ளிரவில் மிரட்டல் அழைப்புகள் வந்ததாகச் சிலர் என்னிடம் கூறியுள்ளனர்.
மற்றவர்களிடம் குற்றத்தைப் பற்றி புகார் செய்ய வேண்டாம் என்று அழுத்தம் கொடுக்கப்பட்டதாக என்னிடம் தெரிவித்தனர். சாகங்கர் மற்றும் குற்றம் சாட்டப்பட்ட கராட் ஆகியோரின் போன் அழைப்பு விபரங்களை காவல்துறை ஆய்வு செய்ய வேண்டும். அவர்கள் யாரையெல்லாம் தொடர்பு கொண்டு புகார் அளிக்க வேண்டாம் என அழுத்தம் கொடுத்தார்கள் என்பதைக் கண்டறிய வேண்டும்" என்று தெரிவித்தார்.
திரவம்?
சமூக ஆர்வலர் அஞ்சலி தமானியா இது குறித்து கூறுகையில்,'' கராடின் செயல்பாடுகள் குறித்த தகவல்களை தன்னுடன் ஒரு உள் நபர் பகிர்ந்து கொண்டார். கராட் 'ஓஷ்னோ ஜல்' என்ற திரவத்தை தயாரிப்பதாக அவர் கூறினார். இது வயாக்ராவை போன்றதுஆகும். கராடின் வாடிக்கையாளர்களில் பல மூத்த அரசியல்வாதிகள் மற்றும் ஒரு மத அறக்கட்டளையின் அறங்காவலர் இருக்கிறார். மேலும் அவர்கள் நாசிக்கில் இருந்து 'ஜல்' சேகரிக்க தங்கள் கார்கள் மற்றும் ஹெலிகாப்டர்களை அனுப்பினர்.
அவர்களில் பலர் தங்களது வலிமையை அதிகரிக்க உதவும் 'ஓஷ்னோ ப்ரே' மற்றும் 'சித்தா பிரார்த்தனை' செய்ய கராடின் உதவியை நாடியதாக அவர் கூறினார். இப்புகார்களையடுத்து சாகங்கரை அழைத்து முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் பேசினார். இதில் உடனே பதவியை ராஜினாமா செய்யும்படி கேட்டுக்கொண்டார். உடனே சாகங்கர் துணை முதல்வர் சுனேத்ரா பவாரை சந்தித்து பேசிவிட்டு தனது ராஜினாமா கடிதத்தை அவரிடம் கொடுத்தார். இது குறித்து சாகங்கர் கூறுகையில், `கராட்டை குருவாகத்தான் நினைத்தேன். அவர் மீதான புகார் பற்றி தனக்கு எதுவும் தெரியாது' என்று தெரிவித்தார்.















