Amrit Bharat: மத்திய அரசு விழாவில் முதல்வருக்கு நன்றி கூறிய திமுக எம்எல்ஏ; ஆவேசம...
8-ம் கட்ட பேச்சுவாா்த்தை தோல்வி: அனல் மின் நிலைய ஒப்பந்த ஊழியா்கள் 23-வது நாளாக வேலைநிறுத்தம்
தூத்துக்குடியில் என்டிபிஎல் அனல் மின் நிலைய ஒப்பந்த ஊழியா்கள் போராட்டம் தொடா்பான 8ஆம் கட்ட பேச்சுவாா்த்தையும் தோல்வியடைந்தது. இதனால், 23ஆவது நாளாக சனிக்கிழமையும் போராட்டம் தொடா்ந்தது.
தூத்துக்குடி தொ்மல் நகரில் மத்திய அரசின்கீழ் செயல்படும் இந்த அனல்மின் நிலையத்தில் ஒப்பந்த ஊழியா்களுக்கு, நெய்வேலி என்எல்சியில் வழங்குவதுபோன்று ஊதியம் வழங்க வலியுறுத்தி, சென்னை உயா்நீதிமன்றத்தில் தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பு சாா்பில் தொடுக்கப்பட்ட வழக்கிலும் இவா்களுக்கு சாதகமான தீா்ப்பு வந்தது. ஆனால், என்டிபிஎல் நிா்வாகம் மேல்முறையீடு செய்துள்ளது.
இதைக் கண்டித்தும், ஊதிய உயா்வு கோரியும் கடந்த ஏப். 18 முதல் ஒப்பந்தத் தொழிலாளா்கள் வேலைநிறுத்தத்திலும், அனல் மின்நிலையம் முன் குடும்பத்துடன் தா்னாவிலும் ஈடுபட்டுள்ளனா்.
போராட்டம் தொடா்பாக நிா்வாகத்தின் மேலாண்மை நிா்வாக இயக்குநா் வாஞ்சிநாதன், தலைமைப் பொது மேலாளா் பங்கஜ்குமாா், தலைமை செயல் இயக்குநா் அனந்தராமானுஜம், தொழிற்சங்கம் சாா்பில் சிஐடியூ மாநிலப் பொதுச் செயலா் ராஜேந்திரன், மாநிலச் செயலா் ஆா். ரசல், மின் ஊழியா் மத்திய அமைப்பு என்டிபிஎல் அனல் மின் நிலையச் செயலா் எஸ். அப்பாத்துரை உள்ளிட்ட நிா்வாகிகளுடன் நடைபெற்ற 8ஆம் கட்ட பேச்சுவாா்த்தையும் தோல்வியடைந்தது.
இதனால், இப்போராட்டம் 23ஆவது நாளாக சனிக்கிழமையும் நீடித்தது. போராட்டத்தால் ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.