ஈரோட்டில் கிழக்கு சட்டமன்ற தொகுதி போட்டியிட வேட்புமனு வாங்க குவிந்த பொதுமக்கள்!...
AI: தொழில்நுட்ப வளர்ச்சியின் இருண்ட பக்கம்; ஏஐ டேட்டா சென்டர்கள் வெளியிடும் வெப்பமும் ஆபத்தும்!
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் உலகை மாற்றியமைத்து வரும் வேளையில், அதன் செயல்பாட்டிற்கு ஆதாரமாக விளங்கும் பிரமாண்ட தரவு மையங்கள் (Data Centers) சுற்றுச்சூழலுக்கு புதிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றன. இந்த AI மையங்களில் இருந்து வெளியேறும் அதிகப்படியான வெப்பம், அவை அமைந்துள்ள பகுதிகளைச் சுற்றியுள்ள நிலத்தின் மேற்பரப்பு வெப்பநிலையை கணிசமாக அதிகரிப்பதாக, சமீபத்திய ஆய்வு முடிவுகள் கவலை தெரிவிக்கின்றன.
செயற்கை நுண்ணறிவு மாதிரிகளை இயக்குவதற்கும், அவற்றுக்குப் பயிற்சி அளிப்பதற்கும் பல்லாயிரக்கணக்கான உயர் செயல்திறன் கொண்ட கணினி சர்வர்கள் இரவு பகலாக இயங்க வேண்டியுள்ளது. இந்த செயல்முறையின்போது, அவை மிக அதிக அளவிலான வெப்பத்தை வெளியிடுகின்றன.

இந்த வெப்பத்தை வெளியேற்றப் பயன்படுத்தப்படும் பிரமாண்ட குளிரூட்டும் அமைப்புகளும் அதிக ஆற்றலைச் செலவழித்து, மேலும் வெப்பத்தை வளிமண்டலத்தில் கலக்கின்றன. குறைந்தபட்சமாக 2°C தொடங்கி 9°C வரை அந்த வெப்ப அளவு பதிவாகியிருப்பதாகச் சொல்கிறார்கள். இது ஒரு குறிப்பிடத்தக்க சுற்றுச்சூழல் பிரச்னையாக உருவெடுத்துள்ளது.
இது குறித்த ஆய்வு ஒன்றில், AI தரவு மையங்களின் வெப்பத் தாக்கம் அதன் உடனடி சுற்றுப்புறத்தோடு நின்றுவிடுவதில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது. ஆய்வுக் குழுவின் கூற்றுபடி, இந்த மையங்களிலிருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவு வரை வெப்பநிலை அதிகரிப்பு உணரப்பட்டுள்ளது.
மேலும், 7 கிலோமீட்டர் தொலைவில்கூட, வெப்பத்தின் தீவிரம் வெறும் 30 சதவிகிதம் மட்டுமே குறைந்திருந்தது. இது, தரவு மையங்களின் வெப்ப மாசுபாடு எவ்வளவு பரவலான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதற்குச் சான்றாக உள்ளது.
இந்த மையங்களின் ஆற்றல் பயன்பாடு பிரமிக்க வைக்கிறது. ஒரு சாதாரண தரவு மையத்தில் உள்ள ஒரு 'ரேக்' (Rack) சுமார் 5 முதல் 15 கிலோவாட் மின்சாரத்தை நுகரும் நிலையில், AI மையங்களில் உள்ள ஒரு ரேக் 100 கிலோவாட் வரை நுகரும் திறனைக் கொண்டிருக்கும் என மதிப்பிடப்படுகிறது. இந்த எண்ணிக்கை, கணினி செயல்பாட்டிற்கானது மட்டுமே; குளிரூட்டல் மற்றும் பிற துணை அமைப்புகளுக்கான ஆற்றல் இதில் சேர்க்கப்படவில்லை.

இதன் காரணமாக, ஒரு மெகாவாட் மின்சாரத்தில் சுமார் 100 AI ரேக்குகளை மட்டுமே இயக்க முடியும்.
இந்த வெப்ப வெளியீடு குறித்து, AI தரவு மையங்களை எஃகு ஆலைகள் போன்ற பிற அதிக ஆற்றல் பயன்படுத்தும் தொழிற்சாலைகளுடன் ஒப்பிட்டு, விவாதங்கள் எழுகின்றன.
"எஃகு ஆலைகள் சமூகத்திற்குப் பயன்படும் ஒரு உறுதியான பொருளை உற்பத்தி செய்கின்றன. ஆனால், சில AI மாதிரிகள் பயனற்ற மாயத்தோற்றங்களை (Hallucinations) உருவாக்கும் நிலையில், அவற்றின் மிக அதிக ஆற்றல் பயன்பாட்டை நியாயப்படுத்த முடியுமா?" என சிலர் கேள்வி எழுப்புகின்றனர்.
இந்த விவகாரத்தின் மற்றொரு குணமாக, மனித உழைப்புடன் AI ஒப்பிடப்படுகிறது. AI மையங்கள் ஏராளமான மனித ஊழியர்களுக்கு மாற்றாக அமையும் என்பதால், அதன் மூலம் ஏற்படும் வெப்ப உமிழ்வை ஈடுசெய்யலாம் என ஒரு கருத்து முன்வைக்கப்படுகிறது. ஆனால், ஆற்றல் அடர்த்தியில் உள்ள வேறுபாடு மிகப் பெரியது. ஒரு மனிதர் சராசரியாக 150 வாட்ஸ் ஆற்றலை வெளியிடுகிறார்.
அந்த வகையில், ஒரு மெகாவாட் ஆற்றல் என்பது சுமார் 6,666 மனிதர்களுக்குச் சமம். ஆனால் அதே ஒரு மெகாவாட் ஆற்றலில் ஒரு AI மையம் வெறும் 100 ரேக்குகளை மட்டுமே இயக்குகிறது. இது AI செயல்பாடுகளின் தீவிர ஆற்றல் தேவையையும், அதனால் ஏற்படும் வெப்ப விளைவுகளையும் தெளிவாகக் காட்டுகிறது.

AI தொழில்நுட்பத்தின் வளர்ச்சி தவிர்க்க முடியாததாக இருந்தாலும், அதன் சுற்றுச்சூழல் சிக்கலையும் கருத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகிறது. இந்த வெப்ப மாசுபாட்டைக் கையாள்வதற்கும், தரவு மையங்களிலிருந்து வெளியேறும் வெப்பத்தை வேறு வழிகளில் மறுபயன்பாடு செய்வதற்கும் நிலையான தீர்வுகளைக் கண்டறிவது தொழில்நுட்பத் துறை மற்றும் கொள்கை வகுப்பாளர்களின் முன் உள்ள முக்கிய சவாலாகும்.!
















