ஜந்தர் மந்தர் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீதான வழக்குகள் ரத்து: சுப்ரீம் கோ...
'FQL மோசடி : 'தாலி செயின், நகைகளை அடகுவைத்து காசு கட்டுனோம்; எல்லாம் போச்சு' - பொதுமக்கள் கண்ணீர்!
FQL மற்றும் VG டிரேடிங் என்ற மொபைல் App மூலமாக முதலீடு செய்தால் இரட்டை லாபம் கிடைக்கும் என கூறி மதுரை மாவட்டம் மேலூர், அலங்காநல்லூர், திண்டுக்கல், சிவகங்கை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த கிராம ஏழை எளிய விவசாயிகள், நடுத்தர குடும்பத்தினர், பெண்கள் என பல்லயிரக்கணக்கான பொதுமக்களிடம் பிட்காயின் ஷேர் மார்க்கெட் என்ற அடிப்படையில் பல கோடி ரூபாய் முதலீடு செய்யவைத்து ஏமாற்றியுள்ளனர்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக முதலீடு செலுத்தியவர்களுக்கான பணம் கிடைக்காத நிலையில் மொபைல் ஆப்களும் முடங்கியது. இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் பணத்தை ஏமாற்றி மோசடியில் ஈடுபட்டவர்களிடம் பணத்தை மீட்டுதர கோரி புகார்மனு அளித்து மறியலில் ஈடுபட்டனர். இந்த மோசடி விவகாரம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனால் பணம் வசூலில் ஈடுபட்ட முக்கிய நபர் ரஞ்சித் தலைமறைவான நிலையில், ஏஜெண்டுகளான அவரது தங்கை அனிதா உள்ளிட்ட 6 பேர் வரை இதுவரையில் கைது செய்யப்பட்டு்ள்ளனர். இதனை தொடர்ந்து பொதுமக்கள் பல்வேறு காவல் நிலையங்களில் புகார் மனு அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் FQL APP மற்றும் VG TRADING முதலீட்டில் முதலீடு செய்து ஏமாற்றமடைந்த பொதுமக்கள் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் குறைதீர் கூட்டத்தில் நேற்று புகாரளிக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்தனர்.
இதன் காரணமாக மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பு வளையங்கள் அமைக்கப்பட்டு காவல்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிறுத்திவைக்கப்பட்டனர்.
இதையடுத்து FQL நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாற்றமடைந்த பொதுமக்கள் புகார் அளிப்பதற்கு தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டு மனுக்களை பெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில் 100க்கும் மேற்பட்டோர் மனுக்களை அளித்தனர்.

இது குறித்து பேசிய பெண்கள் மற்றும் இளைஞர்கள், "கோவிலுக்கு கட்ட வைத்திருந்த பணத்தை இழந்துட்டோம், தாலி செயின் , நகைகளை அடகுவைத்து காசு கட்டுனோம். லட்சக்கணக்குல இழந்து தவிக்கிறோம், போலீஸுக்கு இது தெரியும். முன்னவே நடவடிக்கை எடுத்திருந்தால் ஏமாந்திருக்கமாட்டோம்., உறவினர்கள் சொல்லியதை கேட்டு நம்பி பணம் செலுத்தினோம், ரிச்சர்ட் என்பவர் அடிக்கடி வீடியோகாலில் பேசினார் அது உண்மையாவே வெளிநாட்டுகாரரா? AI வீடியோவாக என தெரியவில்லை நம்பி ஏமாற்றமடைந்து நிற்கிறோம்" என்றனர்.















