+2 தேர்வு: பெற்றோர் பதற்றமடையாமல் இருக்க என்ன செய்யலாம்? - கூல் டிப்ஸ்!
Iran: ஹார்முஸ் நீர்வழியை மூடிய ஈரான்: போர் பதற்றத்தால் சர்வதேச கப்பல் போக்குவரத்து முடக்கம்!
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் ஈரான் மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, பாரசீக வளைகுடா மற்றும் ஓமன் வளைகுடாவை இணைக்கும் முக்கிய நீர்வழியான ஹார்முஸ் ஜலசந்தியை (Strait of Hormuz) மூடிவிட்டதாக ஈரானிய புரட்சிகர காவல்படை (IRGC) ஆலோசகர் இப்ராஹிம் ஜப்பாரி அதிரடியாக அறிவித்துள்ளார். இந்த வழியாகச் செல்ல முயலும் எந்தவொரு கப்பலையும் தாக்கப்போவதாக ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சர்வதேச விதிகளின்படி ஹார்முஸ் ஜலசந்தி சர்வதேச நீர்நிலையாகக் கருதப்பட்டாலும், அதன் 21 மைல் என்ற குறுகிய அகலம் காரணமாகக் கரையில் இருந்து நடத்தப்படும் தாக்குதல்களுக்கு கப்பல்கள் எளிதில் இலக்காகின்றன. நேற்று பஹ்ரைனில் அமெரிக்கக் கொடி ஏந்திய கப்பல் ஒன்று தாக்கப்பட்டதை அடுத்து, காப்பீட்டு நிறுவனங்கள் இந்த வழியாகச் செல்லும் கப்பல்களுக்கான "போர் அபாயக் காப்பீட்டை" (War Risk Coverage) ரத்து செய்துள்ளன. ஈரான் தனது சிறிய படகுகள், ட்ரோன் தாங்கி கப்பல்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் வணிகக் கப்பல்களை அச்சுறுத்தும் எனக் கூறப்படுகிறது.
ஈரானின் இந்த அச்சுறுத்தலை முறியடிக்க அமெரிக்காவின் மத்திய கட்டளை (Centcom) தீவிரமான தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. "எபிக் ஃபியூரி" என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்த நடவடிக்கையில், ஈரானின் ட்ரோன் தாங்கி கப்பலான ஷாஹித் பாகேரி அழிக்கப்பட்டதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. மேலும், ஓமன் வளைகுடாவில் இருந்த 11 ஈரானியக் கப்பல்களை அமெரிக்கப் படைகள் அழித்துள்ளன.
இதன் மூலம் அந்தப் பகுதியில் ஈரானியக் கப்பல்களின் எண்ணிக்கை பூஜ்ஜியமாக குறைக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
தற்போது நிலவும் பதற்றமான சூழலில், வான்வழி மற்றும் கடல்வழி ஆதிக்கத்தை நிலைநாட்டி, வணிகக் கப்பல்கள் மீண்டும் பாதுகாப்பாகச் செல்வதற்கான சூழலை அமெரிக்க அதிகாரிகள் உருவாக்குவார்கள் என்று BIMCO கப்பல் சங்கம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. இருப்பினும், கச்சா எண்ணெய், பெட்ரோ கெமிக்கல்ஸ் மற்றும் உரங்கள் கொண்டு செல்லும் உலகின் மிக முக்கியமான இந்த நீர்வழியில் தற்போது கப்பல் போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது. அதனால் பொருளாதாரம் பெருமளவில் பாதிக்கப்படும் எனக் கருதப்படுகிறது. எனவே, தற்போதைய நிலையில் ஹார்முஸ் ஜலசந்தி வழியாகப் பயணம் செய்வது பெரும் ஆபத்தாகவே நீடிக்கிறது.











