7,000 மாணவர்களுக்கு HIV தொற்று; கர்நாடகாவில் அதிர்ச்சி... கல்லூரிகளில் பரிசோதனைக...
NEET 2026 முறைகேடு: 13 கைது, 360 சாட்சிகளுடன் குற்றப்பத்திரிகை - CBI சொல்வது என்ன?
டெல்லி ஜந்தர் மந்தரில் தொடங்கி கடந்த ஒரு மாதமாக இந்தியாவையே உலுக்கி எடுத்தப் போராட்டம், 'நீட் வினாத்தாள் கசிவிற்கு எதிரான காக்ரோச் ஜனதா கட்சியின் போராட்டம்'.
இந்தப் போராட்டத்தின் வெற்றியாக கடந்த சனிக்கிழமை (ஜூலை 25), மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இனி எதிர்காலத்தில் எந்தத் தேர்வின் வினாத்தாளும் கசிந்துவிடக் கூடாது என்பதற்காக அது சம்பந்தமாக ஆறு பேர் கொண்ட குழு ஒன்றையும் அமைத்தார் இந்திய பிரதமர் மோடி.

இத்தனை செய்துமே, நீட் தேர்வு வினாத்தாள் கசிவில் தொடர்புள்ள ஒருவர்கூட கைது செய்யப்படவில்லை என்கிற குரல் தொடர்ந்து எழுந்துகொண்டே இருந்தது.
நேற்று நடந்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரில்கூட, எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் இது குறித்து கேள்வி எழுப்பியிருந்தனர்.
இந்தக் கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாக சி.பி.ஐ இந்த வழக்கு குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் இந்த முறைகேடு சம்பந்தமாக இதுவரை 13 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகக் கூறியிருக்கிறது.
என்னென்ன குற்றப்பிரிவுகள்?
முறைகேட்டில் ஈடுபட்டிருப்பவர்களின் மீது சி.பி.ஐ பதிந்துள்ள குற்றப்பிரிவுகள்...
> பாரதிய நியாய சன்ஹிதாவின் கீழ், சதித்திட்டம் தீட்டுதல், ஏமாற்றுதல், நம்பிக்கை மோசடி செய்தல், ஆதாரங்களை அழித்தல் போன்ற குற்றங்களுக்காகவும்,
> ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றவியல் தவறான நடத்தைக்காகவும்,
> 2024-ஆம் ஆண்டின் பொதுத் தேர்வுகள் (முறைகேடுகள் தடுப்பு) சட்டத்தில் உள்ள குற்றங்களுக்காகவும் இந்த வழக்கு பதியப்பட்டுள்ளது.
சி.பி.ஐ தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் 360 சாட்சிகள், 422 ஆவணங்கள் மற்றும் 43 பொருள் ஆதாரங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

இந்த வழக்கில் இதுவரை என்னென்ன நடந்துள்ளது?
மே 12, 2026 - மே 3-ம் தேதி நடந்த நீட்-யுஜி தேர்வின் முறைகேடுகள், வினாத்தாள் கசிவு குறித்து இந்திய அரசின் உயர்கல்வித் துறை எழுத்துப்பூர்வமாகப் புகார் அளித்திருந்தது.
இந்தப் புகார் உடனடியாக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டு, 8 டிஜிட்டல் தடயவியல் நிபுணர்கள் உள்ளிட்ட 72 அதிகாரிகளைக் கொண்ட பல குழுக்கள் உடனடியாக அமைக்கப்பட்டது.
மகாராஷ்டிரா, ராஜஸ்தான், ஹரியானா, டெல்லி மற்றும் பிற மாநிலங்களில் 92 இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டன.
13 ,பேர் கைது
இந்தச் சோதனைகளின் போது டிஜிட்டல் மற்றும் தகவல் தொடர்பு சாதனங்கள், ஆவணங்கள் போன்ற முக்கிய ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டன. மேலும், அந்த ஆதாரங்களின் தடயவியல் படமாக்கல் மற்றும் பகுப்பாய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்த வழக்கில் முதல் கைது கடந்த மே 13-ம் தேதி நடைபெற்றது. அதன் பிறகு தற்போது, வேதியியல், உயிரியல் மற்றும் இயற்பியல் பாடங்களுக்கான தேசியத் தேர்வு முகமையின் (NTA) 3 துறை நிபுணர்கள் உட்பட மொத்தம் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில் கசிந்த வினாத்தாள்களைப் பெற்று விநியோகித்த பல இடைத்தரகர்களும் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.
பணப் பரிவர்த்தனைகள் ஆய்வு செய்யப்பட்டு, குற்றவாளிகளின் பல வங்கி கணக்குகள், வங்கி லாக்கர்கள் மற்றும் டிமேட் கணக்குகள் தற்போது முடக்கப்பட்டுள்ளன.
இந்த வழக்கின் மேல் விசாரணை மற்றும் தடயவியல் பகுப்பாய்வு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
- என்று சி.பி.ஐ குறிப்பிட்டுள்ளது.














