NEET 2026 முறைகேடு: 13 கைது, 360 சாட்சிகளுடன் குற்றப்பத்திரிகை - CBI சொல்வது என்...
'சென்னை மாநகராட்சியில் அம்பேத்கர் படம் ஓரங்கட்டப்பட்டதா?' - மனம் வருந்திய விசிக கவுன்சிலர்!
சென்னை மாநகராட்சியின் ரிப்பன் பில்டிங்கில் ஜூலை மாதத்துக்கான மாமன்றக் கூட்டம் நடந்து வருகிறது. இந்தக் கூட்டத்தில் விசிக கவுன்சிலர் கோபிநாத், மாநகராட்சி மாமன்ற அரங்கில் அம்பேத்கர் படம் ஓரங்கட்டப்படுவதாக மனம் வருந்தி பேசியிருக்கிறார்.

நேரமில்லா நேரத்தில் பேசிய விசிக கவுன்சிலர் கோபிநாத், ``மாமன்றக் கூட்ட அரங்கில் சில மாதங்களுக்கு முன்பு வரை அம்பேத்கரின் புகைப்படம் மேயர் அமர்ந்திருக்கும் முகப்பு பக்கத்தில் மாட்டப்பட்டிருந்தது. ஆனால், இப்போது முதல்வர், முன்னாள் முதல்வரின் படத்தை மாட்டுவதற்காக அம்பேத்கரின் படத்தை மட்டும் கழற்றி மாமன்றக் கூட்டத்தின் ஒரு மூலையில் மாட்டியிருக்கிறார்கள்.
மேயரின் தலைக்கு மேல் காந்தியின் புகைப்படம் மாட்டப்பட்டிருக்கிறது. அந்த புகைப்படத்தை உங்களால் இப்படி மூலையில் மாட்ட முடியுமா? அம்பேத்கர் பள்ளியில் படிக்கும் போது கோணிப்பையில் ஒரு மூலையில் அமர வைக்கப்பட்டார்.

அதேமாதிரி, இப்போதும் அவரை மூலையில் மாட்டியிருக்கிறீர்கள். இதை பார்த்தாலே மனம் வருந்துகிறது. உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரத்தை வரையறுத்த சட்டமேதைக்கே இந்த நிலையா? உங்களால் முடியவில்லை என்றால் சொல்லுங்கள். நாங்கள் அம்பேத்கரின் படத்தை கழற்றிச் செல்கிறோம். எப்போது எங்களால் முடிகிறதோ அப்போது நாங்கள் பிரதான இடத்தில் அம்பேத்கரின் படத்தை மாட்டிக் கொள்கிறோம்" என வருந்தி பேசியிருந்தார்.
இதற்கு பதிலளித்த மேயர் பிரியா, ``இது பழைய கட்டடம். இங்கே போதுமான இடமில்லை. அதனால்தான் மாமன்றக் கூட்ட அரங்கிலேயே இன்னொரு இடத்தில் அதுவும் வள்ளுவரின் புகைப்படம் அருகேதான் அம்பேத்கரின் படத்தை மாட்டியிருக்கிறோம். நாங்களும் அம்பேத்கர் வழி வந்தவர்கள்தான். நீங்கள் இப்படி பேசுவது வெளியே வேறு மாதிரியாக புரிந்துகொள்ளப்படலாம். உங்களின் கோரிக்கையை பரிசீலிக்கிறோம்" என்றார்.

இதற்கு பதிலளித்த திமுக கவுன்சிலர்கள் வே.ராஜனும் பரிதி இளம் சுருதியும் முன்னாள் முதல்வர்கள் கருணாநிதியும் ஸ்டாலினும் அம்பேத்கர் பெயரில் அறிமுகப்படுத்திய திட்டங்களை குறிப்பிட்டுப் பேசியிருந்தனர்.














