'ஆர்த்தோ டாக்டர்களுடன் சட்டமன்றத்தை நடத்த வேண்டியிருக்கும்!' - முதல்வரை எச்சரித்...
அமெரிக்க தளத்தில் ஈரான் தாக்குதல், ட்ரம்ப்-நெதன்யாகு, ஜெலன்ஸ்கி மீட், ஈராக் தாக்குதல் ஏன்?|#AllInOne
ஈரான் போர், அதிபர்கள் சந்திப்பு உள்ளிட்ட முக்கிய உலக செய்திகளை இங்கே சின்னச் சின்ன செய்திகளாக காணலாம்.
ஈரான் தாக்குதல்:
ஜூலை 24-ம் தேதிக்கு முன்பு, தொடர்ச்சியாக 13 நாள்கள், அமெரிக்கா, ஈரான் இடையே மோதல் போக்கு நீடித்து வந்தது. ஆனால், ஜூலை 24-ம் தேதிக்குப் பிறகு, எந்த அறிவிப்பும் இல்லாமல், இரு நாடுகளும் அமைதியாக மோதல் போக்கை கைவிட்டன.
இதற்கு காரணம், இரு நாடுகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக கூறப்பட்டது.
ஆனால், இந்த நேரத்தில், ஈரான் நேற்று (ஜூலை 28), ஜோர்டனில் உள்ள அமெரிக்க ராணுவத் தளத்தின் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.

நேற்று அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் அந்த நாட்டின் அதிபர் ட்ரம்பைச் சந்தித்தார் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு.
புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தான பின், மீண்டும் ஈரானுக்கும், அமெரிக்காவிற்கும் இடையே மோதல்போக்கு உருவானதற்கு காரணமே இஸ்ரேல் தான்.
லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலால் தான் ஈரானும், அமெரிக்காவும் மீண்டும் மோதிக்கொண்டன.
ஆக, ட்ரம்ப் - நெதன்யாகு சந்திப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தான் ஈரான் அமெரிக்காவின் ராணுவ தளத்தின் மீது தாக்குதல் நடத்தியிருக்கிறது என்று கூறப்படுகிறது.
ட்ரம்ப் - நெதன்யாகு சந்திப்பு
அமெரிக்காவில் நேற்று (ஜூலை 28) அமெரிக்க அதிபர் ட்ரம்பைச் சந்தித்து இருக்கிறார் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு.
லெபனான் மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்துவதால், ஈரான் போரை முடிவுக்கு கொண்டுவர முடியவில்லை என்று நெதன்யாகு மீது ட்ரம்பிற்கு அதிருப்தி நிலவி வருகிறது.
இந்த நேரத்தில்தான் இருவரின் சந்திப்பு நடந்து உள்ளது.
இந்தச் சந்திப்பு குறித்து ட்ரம்ப் தனது ட்ரூத் பக்கத்தில், "நான், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, மக்கள் பிரதிநிதிகள் இணைந்து ஒரு மிகச் சிறந்த சந்திப்பை நடத்தினோம்! இதில் பல முக்கியமான விஷயங்கள் குறித்துப் பேசப்பட்டது என்பதில் சந்தேகமில்லை!" என்று பதிவிட்டிருக்கிறார்.

ட்ரம்ப் - ஜெலன்ஸ்கி சந்திப்பு
நேற்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியையும் வெள்ளை மாளிகையில் சந்தித்தார்.
இந்தச் சந்திப்பு குறித்து ஜெலன்ஸ்கி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது...
"ஓவல் அலுவலகத்தில் அதிபர் ட்ரம்ப் உடனான சந்திப்பு சிறப்பாக அமைந்தது. உக்ரைன் மக்களின் உயிரைப் பாதுகாக்கவும், அமைதியை முன்னோக்கி எடுத்துச் செல்லவும் நாம் இணைந்து செய்துவரும் அனைத்துக் காரியங்களுக்கும் எனது நன்றிகள்.
முதற்கண், லிண்ட்சி கிரகாம் அவர்களின் மறைவுக்கு அதிபர் ட்ரம்பிடம் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டேன். அவர் உக்ரைனின் உண்மையான ஒரு நல்ல நண்பர்.
பேட்ரியாட் ஏவுகணைத் தடுப்பான்கள் (Patriot interceptor) உற்பத்திக்கான உரிமங்கள் குறித்தும், பயனுள்ள பல புதிய யோசனைகள் குறித்தும் அதிபரும் நானும் விவாதித்தோம்.
ராஜதந்திர முயற்சிகள் குறித்தும் நாங்கள் பேசினோம் – தூதரக மற்றும் ராஜதந்திர ரீதியிலான பேச்சுகளுக்கு புத்துயிரூட்டுவது மிகவும் அவசியமாகும். எங்களது குழுக்கள் அடுத்தகட்டத் தொடர்புகளுக்கான விவரங்களை முறைப்படுத்தும். அமெரிக்கா அளித்து வரும் வலுவான ஆதரவிற்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்."

ஈராக் மீதான அமெரிக்கா, சவூதி தாக்குதல்
நேற்று ஈராக் மீது தாக்குதல் நடத்தியுள்ளது அமெரிக்காவும், சவூதி அரேபியாவும்.
இந்தத் தாக்குதல் குறித்து அமெரிக்காவின் ராணுவப் படைகளில் ஒன்றான மத்திய கட்டளையகத்தின் (CENTCOM) செய்தி அறிக்கை...
"அமெரிக்கப் படைகள் மீதும் சவூதி எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீதும் தாக்குதல் நடத்துமாறு இஸ்லாமிய புரட்சிகர காவல் படையால் (IRGC) ஏவப்பட்ட ஈரான் ஆதரவு பயங்கரவாதிகள் மீது, அமெரிக்க மத்தியக் கட்டளை அமைப்பும் (CENTCOM) சவூதி அரேபிய ஆயுதப் படைகளும் இணைந்து ஜூலை 28 அன்று ஈராக்கில் துல்லியமான தாக்குதல்களை நடத்தின.
கடந்த 72 மணி நேரத்தில் ஐ.ஆர்.ஜி.சி வழிகாட்டலில் நடத்தப்பட்ட 30-க்கும் மேற்பட்ட வான்வழி ட்ரோன் தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, அமெரிக்க மற்றும் சவூதி போர் விமானங்கள் கிழக்கு ஈராக் முழுவதும் உள்ள பயங்கரவாதிகளின் பல ஆயுதக் கிடங்குகளையும் தளவாட மையங்களையும் தாக்கி அழித்தன.
அமெரிக்கப் படைகளுக்கு எதிராக நடத்தப்பட்ட இந்த நியாயமற்றத் தாக்குதல்கள் வெற்றியடையவில்லை.

2026 பிப்ரவரி முதல் ஏப்ரல் வரையிலான காலத்தில், ஈராக்கில் உள்ள ஈரான் ஆதரவு பயங்கரவாதக் குழுக்களால் அமெரிக்கக் குடிமக்கள் மற்றும் தளங்கள் மீது 600-க்கும் மேற்பட்ட தாக்குதல் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
மேலும் அமெரிக்க ராணுவப் பதிலடிகளைத் தவிர்க்க வேண்டுமெனில், ஐ.ஆர்.ஜி.சி (IRGC) மற்றும் அதன் பயங்கரவாத நிழல் அமைப்புகள் இந்தத் தாக்குதல்களை உடனடியாக நிறுத்த வேண்டும்."














