கர்நாடகா: மான் வேட்டையில் ஈடுபட்டதாக மூவரைச் சுட்டுக்கொன்ற வனத்துறை; காவிரி சரணா...
“அப்பா எங்கனு அம்மாகிட்ட கேட்டா தானே தெரியும்” - நயினார் நாகேந்திரன் பேச்சால் மீண்டும் சர்ச்சை
சென்னை கமலாலயத்தில் நடைபெற்ற பா.ஜ.க-வின் “ஒரே நாடு” நிகழ்ச்சியில், தமிழக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன் பேசிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் பேசியதை விமர்சிக்கும் வகையில் அவர் பயன்படுத்திய வார்த்தைகள் அநாகரீகமாக இருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
நிகழ்ச்சியில் பேசிய நயினார் நாகேந்திரன், “சட்டமன்றத்திற்குப் போய் அப்பாவை எங்கே, அப்பாவை எங்கே என தேடுகிறார்கள். வீட்டில் போய் அம்மாவிடம் கேட்டால் தானே அப்பா யார் என்று சொல்வார்கள். சட்டமன்றத்தில் அப்பாவை தேடினால் யாருக்குத் தெரியும்?” எனக் கூறினார்.

மேலும், இதுபோன்றவர்களின் ஆட்சிதான் தற்போது நடைபெற்று வருவதாக முதலமைச்சர் விஜய்யை கடுமையாக விமர்சித்தார்.
நயினார் நாகேந்திரனின் இந்தப் பேச்சுக்கு பா.ஜ.க-வுக்குள்ளேயே எதிர்ப்பு குரல் எழுந்துள்ளது. அக்கட்சியின் முன்னாள் மாநில துணைத் தலைவர் கே.எஸ். நரேந்திரன், நயினார் நாகேந்திரனின் பெயரை நேரடியாக குறிப்பிடாமல், “தலைமை தரம் தாழ்ந்தால், தீவிர சித்தாந்தத்தைப் பின்பற்றுபவர்களே அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்” என சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
இதன் மூலம், மாநிலத் தலைவரின் பேச்சுக்கு கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு உருவாகியிருப்பது வெளிப்பட்டுள்ளது.
நயினார் நாகேந்திரன் ஏற்கனவே நடிகை த்ரிஷா குறித்து பேசிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. பின்னர் தனது பேச்சுக்கு அவர் வருத்தமும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், முதலமைச்சர் விஜய்யை விமர்சிக்கும் போது மீண்டும் சர்ச்சைக்குரிய வகையில் அவர் பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒருபுறம், விஜய்யின் அரசியல் செயல்பாடுகளையும் சட்டப்பேரவை பேச்சுகளையும் பா.ஜ.க தலைவர்கள் தொடர்ந்து விமர்சித்து வரும் நிலையில், மறுபுறம் அந்த விமர்சனத்தின் தொனி மற்றும் பயன்படுத்தப்படும் வார்த்தைகள் பா.ஜ.க-வுக்குள்ளேயே விவாதத்தை ஏற்படுத்தத் தொடங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
நயினார் நாகேந்திரன் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி டிஜிபியிடம் புகார்
இதற்கிடையே, நயினார் நாகேந்திரனின் பேச்சு தொடர்பாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி வழக்கறிஞர் ஒருவர் தமிழக டிஜிபிக்கு புகார் மனு அனுப்பியுள்ளார். முதலமைச்சர் விஜய்யை விமர்சிக்கும் வகையில் நயினார் நாகேந்திரன் பேசிய கருத்துகள் குறித்து புகார் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நயினார் நாகேந்திரனின் பேச்சு அரசியல் ரீதியாக மட்டுமின்றி சட்ட ரீதியாகவும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், டிஜிபியிடம் அளிக்கப்பட்டுள்ள புகார் மூலம் அவர்மீது வழக்கு பதிவு செய்யப்படுமா என கேள்வி எழுந்துள்ளது.














