'இதுவே அரசியல் சாணக்கியத்தனம்!' - கூட்டணிக் கடமுடா... முடிவுரை எழுதிய ஸ்டாலின்
ஈரான் vs அமெரிக்கா: ஈரானின் ரஷ்யப் போர் உத்தியால் அமெரிக்காவுக்கு என்ன சிக்கல்? | Analysis
ஈரான் மீது இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. சனிக்கிழமையன்று தொடங்கிய இந்தத் தாக்குதலில் ஈரானின் ஏவுகணைத் தளங்கள் மற்றும் துல்லியமான இலக்குகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்தத் தாக்குதலில் ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனி உள்ளிட்ட பலர் கொல்லப்பட்டிருக்கின்றனர். இதற்குப் பதிலடியாக ஈரான் ஏவி வரும் ஆயிரக்கணக்கான ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள், அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் தற்காப்பு அரண்களைப் பலவீனப்படுத்தி வருகின்றன என்ற செய்தியும் வெளியாகி வருகிறது.

ஈரானின் ‘ஷாஹித்-136’ (Shahed-136) ரக தற்கொலை படை ட்ரோன்கள், சிறிய ரக க்ரூஸ் ஏவுகணைகளுடன் இணைந்து சவூதி அரேபியா முதல் ஐக்கிய அரபு அமீரகம் வரையிலான அமெரிக்கத் தளங்கள் மற்றும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களைத் தாக்கி வருகின்றன. அமெரிக்கத் தயாரிப்பான பேட்ரியாட் (Patriot) ஏவுகணைகள் இந்த ட்ரோன்களை 90% வெற்றிகரமாகச் சுட்டு வீழ்த்தினாலும், இதில் ஒரு பாரிய பொருளாதாரச் சிக்கல் இருக்கிறது.
ஈரான் பயன்படுத்தும் ஷாஹித் ட்ரோன்கள் மிகவும் எளிமையானவை. அவற்றின் ஒரு யூனிட் விலை சுமார் $20,000 (சுமார் ₹17 லட்சம்) மட்டுமே. ஆனால், அமெரிக்கா இதைச் சுட்டு வீழ்த்தப் பயன்படுத்தும் பேட்ரியாட் ஏவுகணையின் விலை $4,000,000. ஈரானின் ஒரு மலிவான ட்ரோனை அழிக்க, அமெரிக்கா 200 மடங்கு அதிகப் பணத்தைச் செலவிடுகிறது.
இதை 'செலவு-பயன் முரண்பாடு' (Cost-Benefit Asymmetry) என்று ராணுவ ஆய்வாளர்கள் அழைக்கிறார்கள். அதாவது, எதிராளியை வீழ்த்த நீங்கள் செலவிடும் தொகையை விட, அந்தத் தாக்குதலைத் தடுக்க எதிராளி செலவிடும் தொகை பல மடங்கு அதிகமாக இருக்கும்படி செய்வதுதான் இந்த உத்தி.
இன்னொருபக்கம் இந்த அதிநவீன ஏவுகணைகளைத் தயாரிப்பது மிகவும் கடினம். அமெரிக்காவால் ஒரு ஆண்டில் சில நூறு பேட்ரியாட் ஏவுகணைகளை மட்டுமே தயாரிக்க முடியும். ஆனால், ஈரான் அல்லது ரஷ்யா போன்ற நாடுகள் மிக எளிமையான பாகங்களைக் கொண்டு ஆயிரக்கணக்கான ட்ரோன்களைத் தொழிற்சாலைகளில் வேகமாகத் தயாரிக்க முடியும்.

எனவே, மலிவான ட்ரோன்களை அழிக்க, விலை உயர்ந்த ஏவுகணைகள் தீர்ந்துபோகும். ஒரு கட்டத்தில் அமெரிக்க, இஸ்ரேல் படைகள் ஏவுகணைகளை குறைந்த அளவில் தான் பயன்படுத்த முடியும் என்ற நிலை வரும் போது, சக்திவாய்ந்த பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஈரான் பயன்படுத்தலாம். அப்போது அதைத் தடுக்க தற்காப்பு ஏவுகணைகள் கையிருப்பு குறைவாக இருக்கலாம். எனவே, புதிய தற்காப்பு ஏவுகணைகளை உருவாக்க நேரமும், உழைப்பும், பொருளாதாரமும் செலவாகும்.
உக்ரைன் போரில் ரஷ்யா இந்த உத்தியைத்தான் பயன்படுத்தியது. ரஷ்யா நூற்றுக்கணக்கான ஈரான் தயாரிப்பு ட்ரோன்களை உக்ரைன் நகரங்கள் மீது ஏவியது. உக்ரைன் தனது விலை உயர்ந்த மேலைநாட்டு ஏவுகணைகளைப் பயன்படுத்தி அவற்றைத் தடுத்தது. ஒரு கட்டத்தில் உக்ரைனிடம் ஏவுகணைகள் தீரத் தொடங்கியதால், ரஷ்யாவின் ஏவுகணைகள் உக்ரைனின் மின் நிலையங்களை எளிதாகத் தாக்க முடிந்தது. இதையேதான் இப்போது ஈரானும் அமெரிக்காவிற்கு எதிராகச் செய்ய முயல்கிறது.
ஆயுத பலத்தில் உக்ரேனையும் அமெரிக்காவையும் ஒரே தட்டில் வைத்து எடைபோட முடியாது தான் என்றாலும், அமெரிக்காவுக்கு இதா மாதிரி தாக்குதல் தொடரும் பட்சத்தில் அது நிச்சயம் பொருளாதாக சிக்கல்களை ஏற்படுத்தும் என்பதை மறுக்க முடியாது,.
ஈரானின் இந்தத் தீவிர மோதலால் வளைகுடா நாடுகள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளன. ப்ளூம்பெர்க் செய்தி நிறுவனம் வெளியிட்ட உள்நாட்டு ஆய்வின்படி, `கத்தார் நாட்டின் வசம் உள்ள பேட்ரியாட் ஏவுகணைகளின் இருப்பு, தற்போதைய தாக்குதல் வேகத்தில் போனால் இன்னும் நான்கு நாட்களுக்கு மட்டுமே போதுமானதாக இருக்கும்' எனக் கூறப்படுகிறது. இருப்பினும், கத்தார் சர்வதேச ஊடக தொடர்பு நிறுவனம் இதை மறுத்துள்ளதுடன், தங்கள் வசம் போதுமான ஏவுகணைகள் இருப்பதாகத் தெரிவித்துள்ளது. அதே நேரம் கத்தார் போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என அழுத்தம் கொடுத்து வருகிறது.
சனிக்கிழமை நடந்த வான்வழித் தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அலி காமேனி கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில், இது ஈரான் ராணுவத்தின் செயல்பாடுகளில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரானிய வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சி கூறுகையில், ``எங்கள் ராணுவப் பிரிவுகள் இப்போது தன்னிச்சையாகச் செயல்படுகின்றன. முன்னரே வழங்கப்பட்ட பொதுவான வழிகாட்டுதல்களின்படி அவர்கள் சுயாதீனமாகத் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்" எனத் தெரித்திருக்கிறார். இது போரின் தீவிரத்தை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

ஈரானின் தாக்குதல் குறித்து பேசிய இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சரவையின் அமைச்சர் ஏலி கோஹன், ``இதுவரை ஈரானின் 150 ஏவுகணை ஏவுதளங்களை அழித்துள்ளோம். இனியும் ஈரானின் தாக்குதலை மட்டுப்படுத்த ஏவுகணைகள் வெளியே வரும் சுரங்கப் பாதைகளை மூடுவது தொடர்பாக ஆலோசித்து வருகிறது." என்றார்.
அமெரிக்கத் தரப்பில், அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இந்தப் போர் நான்கு வாரங்கள் வரை நீடிக்கலாம் எனக் கணித்திருந்தாலும், `அவ்வளவு காலத்திற்குத் தேவையான ஆயுதங்களை அமெரிக்கா இன்னும் போர் நடக்கும் பகுதிக்குக் கொண்டு வரவில்லை" என பாதுகாப்பு வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.
இது தொடர்பான கேள்விக்கு அமெரிக்கப் பாதுகாப்புச் செயலர் பீட் ஹெக்செத், ``ஈரானுடன் நடந்துவரும் போர், இது ஈராக் போர் போன்ற முடிவில்லாத போர் அல்ல" என்று கூறியதன் மூலம் போர் விரைவான முடிவைத் தேடுவதைச் சூசகமாக உணர்த்தியுள்ளார்.
ஈரானைப் பொறுத்தவரை, கடந்த ஆண்டு மோதலுக்குப் பிறகு அதன் வசம் 2,000 பாலிஸ்டிக் ஏவுகணைகள் இருந்ததாகக் கணிக்கப்பட்டுள்ளது. மேலும், ரஷ்யா தினமும் நூற்றுக்கணக்கான ட்ரோன்களை உற்பத்தி செய்து வருவதால், ஈரானிடம் ட்ரோன்களின் இருப்பு மிக அதிகமாக இருக்கும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

விலை உயர்ந்த ஏவுகணைகளைச் சேமிக்க, அமெரிக்கா தனது போர் விமானங்களைக் கொண்டு ட்ரோன்களைச் சுட்டு வீழ்த்தி வருகிறது. இஸ்ரேலின் லேசர் தற்காப்பு அமைப்பு இந்தச் சிக்கலுக்குத் தீர்வாக அமையும் எனக் கருதப்பட்டாலும், அது இன்னும் போர்க்களத்தில் பயன்படுத்தப்படவில்லை. ஈரானின் நவீன ரஷ்யத் தயாரிப்பு S-300 ஏவுகணைத் தளங்கள் ஏற்கனவே அமெரிக்காவால் அழிக்கப்பட்டுவிட்டதால், ஈரானால் தன் நாட்டை தற்காத்துக்கொள்ள முடியாமல் திணறி வருகிறது.
தற்போதைய சூழலில், ஈரான் தனது ட்ரோன் தாக்குதல்கள் மூலம் அமெரிக்காவின் வான் பாதுகாப்பு ஏவுகணைகளைக் காலி செய்ய முயல்கிறது. இந்த "தேய்மான உத்தி" வெற்றி பெற்றால், அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் போர் நிறுத்தம் குறித்து ஆலோசிக்கும் என கருதுகிறார்கள். ஆனால், அடுத்த சில நாட்களில் இரு தரப்பிலும் ஆயுதங்கள் குறையும் போது போர் ஒரு தேக்க நிலையை அடையக்கூடும் என கார்னகி சர்வதேச அமைதி அறக்கட்டளையின் ஆய்வாளர் அங்கித் பாண்டா தெரிவித்துள்ளார்.!














