சம்பாதித்தும் சேமிப்பு இல்லையா? 35+ வயது பெண்கள் ₹1 கோடி சேர்க்கும் சீக்ரெட்!
மகள் நிச்சயதார்த்தம்;திடீர் நோன்பு; சோடங்கர்! - கூட்டணியை முடிப்பதற்குள் செல்வப்பெருந்தகை பட்ட பாடு!
புகைச்சலிலேயே பொழுதை ஓட்டிக் கொண்டிருந்த திமுக - காங்கிரஸ் கூட்டணி ஒரு வழியாக சுமுகமான தீர்வை எட்டியிருக்கிறது. ஆனால், இந்த கூட்டணி இறுதியாவதற்குள் அதிகம் அல்லோலகலப்பட்டது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைதான்.
மகளின் நிச்சயதார்த்தம்... திடீர் நோன்பு... கிரிஷ் சோடங்கர் என இடையில் எத்தனையோ ரோதணைகள் அவருக்கு.

பிப்ரவரி 28 ஆம் தேதி திமுகவுடன் முதற்கட்டப் பேச்சுவார்த்தைக்காக அறிவாலயம் வந்திருந்தது காங்கிரஸ் குழு. அங்கிருந்தே செல்வப்பெருந்தகையின் பதைபதைப்பு ஆரம்பித்துவிட்டது. திமுக 25 க்கு மேல் ஒரு சீட் கூட கிடையாது என கறாராக கூற, தொண்டையை சரி செய்து கொண்டு அறிவாலய வாசலிலேயே திமுகவை பொளந்து கட்ட தயாராக வந்தார் கிரிஷ் சோடங்கர்.
சிதறு தேங்காயாக்கிவிட்டார்
கோவாக்காரர் மட்டும் வாயை திறந்தால் இனி ஜென்மத்துக்கும் அறிவாலயம் பக்க தலைகாட்ட முடியாது என்பதை உணர்ந்த பெருந்தகை, பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் மட்டும் பேசிவிட்டு கிரிஷ் சோடங்கரை அப்படியே மடக்கி அணைத்து காரில் ஏற்றி எப்படியோ தப்பிவிட்டார்.
'அறிவாலயத்துல பேசலன்னா என்ன ப்ளைட் பிடிச்சு டெல்லிக்கு போயி அங்க பேசுறேன்..' என உற்சாகமாக கிளம்பிய சோடங்கர், டெல்லியில் செய்தி சேனல்களை அழைத்து 'இவங்க கொடுக்குற 25 சீட்டுக்கெல்லாம் ஒத்துக்க முடியாது' என சிதறு தேங்காயாக்கிவிட்டார்.

இது நடந்தது மார்ச் 1 ஆம் தேதி. அந்தரத்தில் நிற்கும் கூட்டணி....இன்னொரு பக்கம் மார்ச் 3 ஆம் தேதி நடைபெறவிருக்கும் மகளின் நிச்சயதார்த்த வேலைகள் என பதைபதைப்பில் இருந்த பெருந்தகைக்கு பிபி இன்னும் எகிறியது. பிபி ஏறிய பெருந்தகை உடனடியாக ஓடோடி சென்று ப.சி லைனை பிடித்தார்.
திமுக கெடுவிதித்த மார்ச் 3 ஆம் தேதி பெருந்தகையோடு கைகோத்து ப.சியும் களத்தில் இறங்கினார். அன்று மாலை 4 மணிக்கு ECR இல் பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்தம். மதியம் 2 மணி வரைக்கும் ப.சியோடு சித்தரஞ்சன் சாலையில் முதல்வரிடம் ஆலோசனை நடத்திய பெருந்தகை, ப.சி வீட்டில் அடுத்தக்கட்ட ஆலோசனையை முடித்துவிட்டு சிட்டிக்குள் இருந்து அவர் கிளம்பவே 4 மணிக்கு மேல் ஆகிவிட்டது.
'பொண்ணு நிச்சயதார்த்தத்துக்கு லேட்டா போறது கூட பதட்டமா இல்லங்க, இடையில இந்த கோவாக்காரர் எங்கயும் குறுக்க வந்துடக்கூடாது. அதை நினைச்சாதான் படபடப்பா இருக்கு...' என்ற பெருந்தகையின் மைண்ட் வாய்ஸை அத்தனை பத்திரிகையாளர்களாலும் உணர முடிந்தது.

'சோடங்கர் சென்னைக்கு ப்ளைட் டிக்கெட்டே போடவில்லை' என்கிற தகவல் வந்த பிறகுதான் பெருந்தகை கொஞ்சம் ஆசுவாசமாகியிருப்பார். நிச்சயதார்த்த வீட்டில் கூட்டணி கட்சிகள் அத்தனையையும் ஒன்றாக நிறுத்தி போஸ் கொடுக்க வைத்துவிட்டார். கிடைத்த கேப்பில் அங்கேயும் முதல்வரையும் ப.சியையும் உட்கார வைத்து பஞ்சாயத்தை சுமுகமாக முடிக்க பேச்சுவார்த்தையில் ஈடுபட வைத்தார். ஒருவழியாக டெல்லிக்கும் சித்தரஞ்சன் சாலைக்கும் இணைப்புப் பாலமாக இருந்து ப.சி பேசி முடித்தவுடன்தான் பெருந்தகை நிம்மதியானார்.
நேற்று கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்து.
கோவாக்காரர் இல்லாமல் கையெழுத்து போடக்கூடாது என டெல்லியிலிருந்து உத்தரவு வர, பெருந்தகைக்கு மீண்டும் தலைவலி ஆரம்பித்தது. வடக்கு கோவாவிலிருந்து வந்த கிரிஸ் சோடங்கர் 3:50 மணிக்கு சென்னையில் இறங்கினார். 3:30 மணிக்கே வேண்டி கொண்டு விமான நிலையத்தில் காத்திருந்தார் பெருந்தகை. கோவாக்காரர் வந்தவுடன் லாக் செய்து ஒரு ரூமில் தள்ளி நேராக அறிவாலயத்துக்கு அழைத்து கையெழுத்து போட்டுவிட்டுதான் அடுத்த வேலை என பெருந்தகை திட்டமிட்டு வைத்திருந்தார். ஆனால், சோடங்கரோ நான் பல பெருந்தகைகளை பார்த்தவன் என விமான நிலையத்தின் வெயிட்டிங் ஹாலிலேயே உட்காந்துவிட்டார்.

டெல்லியிலிருந்து உத்தரவு வந்தால் மட்டும்தான் நகர்வேன் கூறி அங்கேயே உட்காந்து கடைசிக்கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். 'எனக்குன்னே வருவீங்களாய்யா..' என்கிற பெருந்தகையின் அந்த மைண்ட் வாய்ஸூம் நிருபர்களுக்கு கேட்டுவிட்டது. 6:10 க்கு சோடங்கர் அங்கிருந்து கிளம்ப முடிவெடுக்க, பத்திரிகைகள் சூழ்ந்தன. எதுக்கு சார் இங்க இவ்வளவு நேரம் இருந்தீங்க? என நிருபர்கள் கேட்க, 'ஒரு பிராப்ளமும் இல்லங்க. ஹோலி பாஸ்டிங். நோன்பு திறந்துட்டு வரோம்...' என பத்திரிகையாளர்களின் காதுகள் மீது இரக்கமே இல்லாமல் ஈயத்தை காய்ச்சி ஊற்றினார் பெருந்தகை.
அங்கிருந்து கிளம்பி தி.நகரில் ஒரு ஹோட்டலுக்குள் காங்கிரஸ் குழு நுழைய, பாலோ செய்து வந்த காமிராக்கள் ஹோட்டலுக்குள்ளும் நுழைந்தன. 'ஒண்ணும் இல்லங்க... சும்மா காபி குடிக்க வந்தோம்...நீங்களும் வேணா வாங்க..' என காமிரா மேன்களுக்கும் காபி வாங்கி கொடுத்துவிட்டு அறிவாலயத்தை நோக்கி கோவாக்காரரோடு கிளம்பினார்.

கூட இருக்குற கோவாக்காரர்தான் பிரச்னைன்னு தெரிஞ்சும் அவரை கூட வச்சுட்டே சுத்துற அண்ணனோட சகிப்புத்தன்மைக்கும் தைரியத்துக்கும் சத்யமூர்த்தி பவனில் சிலையே வைக்கலாம் என கதர் சட்டையினர் கிசுகிசுத்துக் கொண்டனர்.
கூட்டணி கையெழுத்தானவுடனும் பழைய மாதிரியே கோவாக்காரரை பெரிதாக பேசவிடாமல் லாவகமாக நகர்த்தி சென்றுவிட்டார் பெருந்தகை. ஆனால், கோவாக்கார சோடங்கர் படு உஷார். சென்னை நிருபர்களுக்கு போன் செய்து நான் உட்லண்ட்ஸ் ஹோட்டலில் இருக்கிறேன். பைட் எதுவும் வேண்டுமானால் வாருங்கள்' என மெசேஜ் தட்டிவிட்டார். ஒட்டுமொத்த மீடியாவும் ஹோட்டலில் ஆஜர்.. அங்கே ஒரு பிரஸ்மீட்.
இப்போதாவது நிம்மதியாக காபி குடிக்கலாம் என நினைத்த பெருந்தகைக்கு மீண்டும் ஷாக். அவர் வாயை திறந்தால் விவகாரமாகிவிடும் என்பதால், சோடங்கரை தனியாக அழைத்து இந்த விஷயங்களை மட்டும் பேசுங்கள் என சில விஷயங்களை குறிப்பிட்டு கோரிக்கை வைத்தார். கொஞ்சம் கோவக்காரனா இருந்தாலும் மரியாதை தெரிந்தவர் இந்த கோவாக்காரன் என பீல் செய்த சோடங்கர், பெருந்தகையின் மனம் கோணாதபடிக்கு பேட்டி கொடுத்து விடைபெற்றார்.
ஒரு கூட்டணியை முடிவு பண்றதுக்குள்ள மனுசனை என்ன பாடு படுத்துறானுகய்யா என்கிற பாவனையோடு கடைசியாக ஒரு காபியை நிம்மதியாக உறிஞ்சி குடித்துவிட்டு ஹோட்டலிலிருந்து விடைபெற்றார் பெருந்தகை!















