Iran War: US Israel-ஐ கண்டிக்க மறுக்கும் Modi - Indiaவை நெருங்கியதா போர்? IRIS D...
ஈரான் மீதான போர்: கச்சா எண்ணெய்; `இந்தியாவுக்கு 30 நாளுக்கு மட்டும் அனுமதி' - அமெரிக்கா| முழு விவரம்
அதிபர் ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகம் ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு கூடுதல் வரி விதித்திருந்த நிலையில், இந்தியா - அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன் அடிப்படையில், ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்கும் முடிவை கைவிடுமாறு அமெரிக்கா நிர்பந்தித்ததின் அடிப்படையில், இந்தியா ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதை படிப்படியாக குறைத்தது.
இந்த நிலையில், இஸ்ரேல், அமெரிக்கா இணைந்து ஈரான் மீது தொடங்கியப் போர் மத்திய கிழக்கில் போர் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஈரானின் தாக்குதலால் சவுதி அரம்கோவின் ராஸ் தனுரா சுத்திகரிப்பு நிலையமும், ஈராக்கின் ருமைலா எண்ணெய் வயல்களும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன. போரின் எதிர்வினையாக வர்த்தகத்தின் முக்கிய கப்பல் வழித்தடமான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முடக்கியிருக்கிறது.

அதனால் அங்கு கச்சா எண்ணெய் கொண்டுவரும் இந்தியக் கப்பல்கள் சிக்கியிருக்கின்றன. எனவே, இந்தியாவில் கச்சா எண்ணெய்க்கான தட்டுப்பாடு ஏற்படும் சூழல் ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில், இந்திய எரிசக்தி சந்தைக்கு நிம்மதியளிக்கும் வகையில் ரஷ்ய எண்ணெயை வாங்குவதற்கு அமெரிக்கா 30 நாள் தற்காலிக விலக்கு அளித்துள்ளது.
இது தொடர்பாக அமெரிக்க கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசென்ட் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``அமெரிக்க கருவூலத் துறையின் வெளிநாட்டு சொத்துக் கட்டுப்பாட்டு அலுவலகம் (OFAC), மார்ச் 5, 2026 நிலவரப்படி கப்பல்களில் ஏற்றப்பட்ட ரஷ்ய கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலியப் பொருட்களை இந்தியா வாங்குவதற்கு அனுமதி வழங்கியுள்ளது. ஏப்ரல் 3, 2026 வரை இந்தச் சலுகை நடைமுறையில் இருக்கும்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள செயலாளர் ஸ்காட் பெசென்ட், "இந்தியா அமெரிக்காவின் ஓர் அத்தியாவசியப் பங்காளியாகும். உலகச் சந்தையில் எண்ணெய் விநியோகம் சீராக இருப்பதை உறுதி செய்ய இந்தத் தற்காலிக விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம், இனிவரும் காலங்களில் இந்தியா அமெரிக்க எண்ணெயை அதிக அளவில் வாங்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்." எனத் தெரிவித்துள்ளார்.
உலகளவில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்திருந்தாலும், அமெரிக்காவின் இந்தத் தற்காலிக சலுகை மற்றும் இந்தியாவின் கையிருப்பு காரணமாக, தற்போதைக்கு இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலைகள் உயருவதற்கான வாய்ப்புகள் இல்லை என்று துறை சார்ந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.














